அரசு வேலையில் சேர ஆசையா?... இதோ அட்டவணை - படிப்போடு பரிகாரம் பண்ணுங்க
கால் காசு உத்யோகம் என்றாலும் கவர்மெண்ட் வேலை பார்க்க ஆசைப்படுவர்கள் உண்டு. 2018 ஆம் ஆண்டில் காலி பணியிடங்கள் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. படிப்போடு பரிகாரமும் பண்ணுங்க வேலை கண்டிப்பாக கிடைக்கும்.
சென்னை: அரசாங்க வேலைக்கு ஆசைப்படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். படித்து தேர்வு எழுதுவதோடு சில பரிகாரமும் செய்தால் கைமேல் பலன் கிடைக்கும்.
2018ம் ஆண்டுக்கான கால அட்டவணை பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, 23 பணிகளில் 3,235 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
டிஎன்பிஎஸ்சி 2018ம் ஆண்டுக்கான தேர்வுக் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. தேர்வாணையத்தால் வெளியிடப்படும் இத்தேர்வுக் கால அட்டவணை என்பது எந்தெந்த பதவிகளுக்கான அறிவிப்புகள், நடப்பு ஆண்டில் வெளியிடப்பட உள்ளது என்பதை தேர்வாணையத்தின் தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கும், ஒரு தோராயமான பட்டியல்.
இப்பட்டியல் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் மாறுதலுக்கு உட்பட்டது. தேர்வர்கள் நலன் கருதி அவர்கள் தங்களை தயார் செய்துகொள்ள ஏதுவாகவே இந்த அட்டவணை வெளியிடப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி அறிவிப்புகள்
இப்பட்டியலில் 3,235 காலிப்பணியிடங்களை உள்ளடக்கிய 23 பணிகள், பதவிகளுக்கான அறிவிப்பு மற்றும் உத்தேச தேர்வு நாள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இக்கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தேர்வுகளின் முடிவுகள் உரிய காலத்தில் வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேவை ஏற்படின், இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள் சார்ந்த எந்த ஒரு மாற்று அறிவிப்பையும் வெளியிடுவதற்கான உரிமையை தேர்வாணையம் கொண்டுள்ளது.
தேர்வு கால அட்டவணை
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட கால அட்டவணைப்படி, ஆய்வ உதவியாளர் 56 பணியிடத்துக்கு மே 6ம் தேதியும், மோட்டார் வாகன ஆய்வாளர் (113 பணியிடம்) பதவிக்கு ஜூன் 10ம் தேதியும், தோட்டக்கலை உதவியாளர் (805) பணியிடத்துக்கு ஜூன் 9ம் தேதியும், விவசாய அதிகாரி (183) பணியிடத்துக்கு ஜூன் 10ம் தேதியும் எழுத்து தேர்வு நடைபெறும். வனத்துறை பயிற்சியாளர் (158) பணியிடத்துக்கு ஜூன் 16ம் தேதியும் தேர்வு நடைபெற உள்ளது.
குரூப் 1 பணியிடங்கள்
மீன்வளத்துறை ஆய்வாளர் (72) பணியிடத்துக்கு ஜூலை 15ம் தேதியும், உதவி அரசு வழக்கறிஞர் (43) இடத்துக்கு ஜூலை 28, 29ம் தேதியும், குரூப் 2 (நேர்முக தேர்வு பதவி)- 1547 பணியிடத்துக்கு ஆகஸ்ட் 19ம் தேதியும், குரூப் 1 (57) பணியிடத்துக்கு அக்டோபர் 14ம் தேதியும் எழுத்து தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கால அட்டவணை டிஎன்பிஎஸ்சி இணையதளமான www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது.
கிரகங்களின் சேர்க்கை
ஜோதிடத்தைப் பொறுத்தவரை பத்தாமிடம் இடம் உத்தியோக ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பத்தாமிடத்தின் அதிபதி பத்தில் இருந்து சூரியனின் பார்வை சேர்க்கை ஏற்பட்டால் அரசு வேலை கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மேலும் கர்மகாரகன் என கூறப்படும் சனீஸ்வரன் அரசாங்க உத்யோக காரகன் சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தால் அரசு வேலை கிடைக்கும். சில ஜாதகங்களில் செவ்வாயின் கிரக நிலையும் அரசுப் பணியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்ததாக அமையும்.
சந்திரன் நிலை
அரசாங்கப் பணியில் அமர்வதற்கு லக்னம், பூர்வ புண்ணியஸ்தானமான 5ஆம் இடம், ஜீவனஸ்தானமான 10ஆம் இடம் ஆகியவற்றைப் பார்க்க வேண்டும். சூரியன், சந்திரன், குரு மற்றும் சனி ஆகிய கிரகங்கள் பலம் பெற்று இருந்தால்தான் ஜாதகருக்கு அரசுப் பணி கிடைக்கும்.
சூரிய நமஸ்காரம்
ஒவ்வொரு ஞாயிற்று கிழமை காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் சூரிய ஹோரையில் வீட்டு மாடியில், மாடி இல்லாதவர்கள் வெட்ட வெளியிலும் ஒரு விளக்கு போட்டு சூரியனை நோக்கி சாஷ்டங்கமாக விழுந்து வணங்க வேண்டும். விளக்கு போடும் பொது கூடவே நைவேத்தியமாக கல்கண்டு, மற்றும் ஏதாவது ஒரு இனிப்பை நைவேத்தியமாக வைக்க வேண்டும். அப்போது சூரிய காயத்ரி அல்லது சூரியனுக்குரிய ஸ்லோகம் அல்லது ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் சொல்லலாம். இதனை தொடர்ந்து 108 நாட்கள் செய்தால் அரசு வேலை கண்டிப்பாக கிடைக்கும். தை மாதம் ரத சப்தமி நாளில் இந்த விரதத்தை தொடங்கலாம் இதனால் பலன் அதிகம் கிடைக்கும்.
ஸ்ரீ பைரவர்
அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடலாம். கால பைரவருக்கு ராகு காலத்தில் சிவப்பு நிற துணியில் மிளகு கட்டி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட விரும்பிய வேலை கிடைக்கும். திருப்பதிக்கும், திருச்செந்தூருக்கும் சென்று வந்தால் அரசு வேலையில் அமர வாய்ப்பு கிடைக்கும்.