ஆயுள் அதிகரிக்கும் நெல்லிப்பொடி அபிஷேகம் - நோய் தீர்க்கும் வழிபாடுகள்
தன்வந்திரி பகவான் ஆலயத்தில் நோய்கள் தீர நெல்லிக்காய் பொடிகொண்டு மஹா அபிஷேகம் நடைபெறவுள்ளது.
வேலூர்: மரணம் ஒருவருக்கு நிகழ்ந்தே தீரும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்றைக்கு நீண்ட ஆயுளுடன் நோயற்ற வாழ்வு வாழவே பலரும் விரும்புகின்றனர். நோய் தீர்க்க மருத்துவமனைக்கு செல்வதோடு பல பரிகாரங்களையும் செய்கின்றனர்.
ஒருவருக்கு நீண்ட சிறப்பான ஆயுளை தரும் கிரகம் சனி பகவான் ஆவார். நீண்ட ஆயுள் அமைய வேண்டுமானால் 8ஆம் இடமான ஆயுள் ஸ்தானத்தை பார்க்க வேண்டும். 8ஆம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்தால் அஷ்டலட்சுமி யோகம் கிடைக்கும்.
ஒருவரின் ஜாதகத்தில் 8ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பது முதல் தரமான ராஜயோகமாக கருதப்படுகிறது. வாக்கு வன்மை, பேச்சுத்திறன், சமயோசித புத்தி, எதிர்பாராத தனவரவு, உழைப்புக்கு அப்பாற்பட்ட செல்வங்கள் கிடைக்கும்.
நீண்ட ஆயுள் யாருக்கு?
சுக்கிரனுக்கு அடுத்தப்படியாக சூரியன், புதன் சேர்க்கை இருப்பது அந்த ஜாதகருக்கு விபரீத ராஜயோகத்தையும், நிபுணத்துவத்தையும் அளிக்கும். மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதியான சனி 8இல் அமர்ந்தால் நீண்ட ஆயுள் உண்டு. இதுபோல் ஒவ்வொரு லக்னத்தைப் பொறுத்து பலன்கள் மாறுபடும். 9ஆம் இடத்தில் சுப கிரகங்கள் வளர்பிறை சந்திரன், சுக்கிரன், குரு இருப்பது நல்லது. பொதுவாக 5, 9ஆம் வீடுகள் திரிகோண வீடுகள் எனப்படும். இங்கு சுப கிரகங்கள் இருப்பது சிறப்பாகும்.
ஆயுள் முடிவது எப்போது
ஒரு ஜாதகத்தில் 8 ஆம் இடத்தை கொண்டு ஆயுளை பற்றியும் 2 , 7, 11ஆம் இடத்தை கொண்டு மாரகத்தை பற்றியும் கூறமுடியும் . ஓருவருக்கு 2,7,11 அதிபதிகள் தொடர்பு கொள்ளும் காலங்களில் ராகு அல்லது கேதுவையும் தொடர்பு கொள்ளும் போது மரணம் நேரிடுகிறது. இந்த மாரகாதிபதிகளான 2,7,11 அதிபதிகளின் தசா புத்தி அந்தரங்கள் நடைபெற்று அப்போது கோசாரத்தில் ராகு அல்லது கேது ஆகிய சர்ப கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை ஆயுள் ஸ்தானத்திற்கு அமைந்து நிற்கும் போது மரணத்திற்கு நிகரான கண்டங்கள் நிகழ்கின்றது.
திருக்கடையூர் அபிராமி
ஆயுள் காரகனான சனீஸ்வர பகவானை வணங்குவது மற்றும் பித்ரு வழிபாடுகள் தொடர்ந்து செய்வது. தர்ம காரியங்கள் செய்வது. வருடம் தோரும் ஆயுஷ்ய ஹோமம் மற்றும் ம்ருத்யஞ்சய ஹோமம், சுதர்சன ஹோமம் போன்றவை பிறந்த நாட்களில் செய்வதன் மூலம் பரிகாரம் பெறலாம். எமனை சம்ஹாரம் செய்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் மற்றும் காலசம்ஹார மூர்த்தியை பிறந்தநாட்களிலும் ஜென்ம நட்சத்திரநாட்களிலும் வணங்குவது.
ஸ்ரீ தன்வந்திரி பகவான்
வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் தேடி வரும் பல லட்சக்கணக்கான பக்தர்களின் பிணிகளைத் தீர்த்து, அவர்களின் துயரங்களை வேரோடு களைகிறது. தன்வந்திரி பீடத்தில், அன்னபூரணி, காயத்ரி தேவி, சஞ்சீவீ ஆஞ்சநேயர், மஹா அவதார பாப, மஹிஷாசுர மர்த்தினி, குபேர லக்ஷ்மி, அஷ்ட நாக கருடன் என 75 க்கும் மேற்பட்ட பரிவார சந்நிதிகளுடனும், 468 சித்தர்களுடனும் வைத்ய ராஜ்யம் நடத்தி வருகிறார் ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பகவான்.
தன்வந்திரிக்கு அபிஷேகம்
ஸ்ரீதன்வந்திரி பகவானை அவர்களின் இல்லத்தில் வைத்து, மலர் அலங்காரம் செய்து விசேஷ வழிபாடும் ஹோமமும், நெல்லிக்காய் பொடி மற்றும் பலவகையான மூலிகை தீர்த்தங்கள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டு பிரசாதம் சாப்பிட்டால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
நெல்லிக்காய் பொடி
உலக நலன் கருதி மூலவர் ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கும் உற்சவர் வைத்தியராஜனுக்கும் 26.02.2018 திங்கட் கிழமையில் மாசி மாத ஏகாதசி திதியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை நாள்பட்ட நோய்கள் நீங்கவும், மன நோயிலிருந்து விடுதலை பெறவும், விவாகம், சீமந்தம், கிரக பிரவேசம், புதிய வியாபாரம் தொடங்கவும், அதிகார பதவிகள் கிடைக்கவும் நெல்லிக்காய் பொடிகொண்டு மஹா அபிஷேகம் நடைபெறவுள்ளது.
ஔஷத பிரசாதம்
உடல் சூடு மற்றும் கண்நோய் சர்க்கரை நோய், செரிமான இல்லாமை, சிறுநீர் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய்கள நீங்கி ஆயுள் பலம் பெற தன்வந்திரி மூலவருக்கு அபிஷேகம் செய்த நெல்லிக்காய் பொடி தீர்த்த பிரசாதம் ஸ்வாமிகளின் திருக்கரங்களால் ஔஷதமாக வழங்கப்படவுள்ளது. ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம், கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. 94433 30203.
மருத்துவ பரிசோதனை
பரிகாரங்கள் மூலம் நோய்களின் வீரியத்தை குறைக்க முடியுமே தவிர மரணத்தை தடுக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். நோய் வந்த பின்னர் வருந்துவதை விட உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். வருடம் தோறும் மருத்துவ பரிசோதனைகள் செய்துக்கொள்வது, மருத்துவ காப்பிடு ஆகியவற்றை காலாவதியாகாமல் வைத்துக்கொள்வது அவசியம்.