ஐடி ஊழியர்களே... அச்சம் வேண்டாம்! ஆடி போய் ஆவணி வந்தா டாப்தான்!
ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறை ஊழியர்களின் வேலையிழப்பிற்கான ஜோதிட ரீதியான காரணங்கள், பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளது.
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: இந்த ஆண்டு ஆவணி 1ம் தேதி ஆகஸ்ட் 17ஆம் தேதி ராகு பகவான் சிம்மத்திலிருந்து கடகத்திற்கு (திருக்கணித படி) செல்ல இருக்கிறார். அதன் பிறகு உள்நாட்டில் வேலை வாய்ப்பு குறைந்தாலும் வெளிநாட்டு வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று ஜோதிட ரீதியாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில், கடந்த, 20 ஆண்டுகளாக, வேலைவாய்ப்பை அள்ளி வழங்கிய, ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு மற்றும் வங்கித்துறைகளில், 15 லட்சம் பேர் வேலையிழக்கும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பல முன்னணி நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களில் ஒரு பகுதியினரை பணியை விட்டு நீக்கியுள்ள நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனங்கள் பல சமீப காலமாக பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்து, கடந்த சில வாரங்களாக பணி நீக்கத்தைத் தொடங்கியுள்ளது செய்திகளில் வருவது அனைவரும் அறிந்ததே!
மேலும் அவ்வப்போது தொழிலாளர்கள் போராட்டங்களும் தலை தூக்கிக்கொண்டிருக்கின்றன. வேலையிழப்பிற்கான ஜோதிட ரீதியான காரணங்கள்:
சிறு தொழிலோ அல்லது பெருந்தொழிலோ! உயர்ந்த பதவியோ அல்லது அடிமைத்தொழிலோ! அனைத்து வேலைகளுக்கும் காரகர் சனைஸ்வர பகவான் ஆவார். எனவேதான் அவரை 'கர்மகாரகன்' என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
கடந்த ஆண்டுவரை காலபுருஷனுக்கு எட்டாவது ராசியான விருச்சிகத்தில் நிலைகொண்டிருந்த சனைஸ்வரபகவான் செவ்வாயின் வீட்டில் இருந்ததோடல்லாமல் செவ்வாயோடு அதிக காலம் சேர்க்கை பெற்று நின்ற காலத்தில் நீரினாலும் காற்றாலும் பலவித பிரளயங்களை சந்தித்ததை யாராலும் மறக்க முடியாது. மேலும் ரூபாய் நோட்டு மாற்றம் போன்றவையும் மக்களிடையே பலவித பிரச்சனைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கர்மகாரகனான சனைஸ்வர பகவான் தனுர் ராசிக்கு அதிசார கதியில் சென்றது மற்ற பிரச்சனைகளுக்கு தற்காலிகமாக முடிவு கட்டிவிட்டாலும் காலப்புருஷனுக்கு பத்தாவது வீடான மகரத்திற்க்கு பனிரென்டில் சனைஸ்வர பகவான கோசாரபடி சென்றதால் வேலை மற்றும் தொழிலில் பல பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்தது.
தர்ம கர்மாதிகளான குருவும் சனியும் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் வேலைகளில் மாற்றம் ஏற்படும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
கர்ம காரகனான சனைஸ்வர பகவானை குரு பார்வை அல்லது சேர்க்கையால் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் சம்பள உயர்வுடன் கூடிய வேலைமாற்றம் ஏற்படும் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.
அதேநேரம், சனைஸ்வர பகவான் தன காரகனான குருவை தனது பார்வை மற்றும் சேர்க்கையால் தொடர்பு கொள்ளும்போது, வேலையில் ஒரு கசப்பான அனுபவத்தை ஏற்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது.
ஒரு ஜாதகத்தில் ஜெனன குருவை கோசார சனி தொடும்போது அவர் அதுவரை செய்துவந்த வேலையிலிருந்து முற்றிலும் புதுமையான துறைக்கு மாற நேருகிறது.
தற்போதுள்ள கோசாரக கிரக நிலையில் தனுர் ராசியில் இருக்கும் சனை ஸ்வர பகவானை மிதுன ராசியில் இருக்கும் கோசாரக செவ்வாய் சம சப்தமமாக பார்ப்பது அனைத்து துறைகளிலும் உள்ள பணியாளர்களுக்கு ஒருவித அதிருப்தி மற்றும் பய உணர்வு நிலவி வரும்.
வேலையிழப்பு, போராட்டம் போன்றவற்றின் காரகர் செவ்வாய் மற்றும் கேது பகவான் ஆகும். தற்போது கும்பத்திலுள்ள கேது பகவான் தனது மூன்றாவது பார்வையால் மேஷத்தை பார்க்கிறார். அங்கு சுக்கிரபகவான் கேது சாரம் பெற்று நிற்பதால் வங்கி, சினிமாத்துறை, வியாபாரஸ்தலங்கள் போன்ற இடங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டு வேலையிழப்பு ஏற்பட நேரிடும்.
மேலும் தனது ஏழாம் பார்வையால் காலபுருஷனுக்கு ஐந்தாம் வீடு மற்றும் அரசு மற்றும் அரசியலை குறிக்கும் சூரியனின் வீட்டை பார்ப்பதால் அரசியல் பதவியில் பதவியில் ஒரு நிரந்தரமற்ற தன்மை இருந்துவரும்.
மேலும் கேது பகவானின் பதினொராம் பார்வை கோசார சனியின் மீது விழுவதால் அனைத்து தரப்பு வேலை வாய்ப்பிலும் பிரச்சனை ஏற்படும். இதனால் கொத்து கொத்தாக வேலை இழப்பு ஏற்படும்.
எப்போது தீரும் வேலையிழப்பு பிரச்சனை?
இந்தவருடம் ஆவணி 1ம் தேதி (17/8/2017) ராகு பகவான் சிம்மத்திலிருந்து கடகத்திற்கு (திருக்கணித படி) செல்ல இருக்கிறார். அதன் பிறகு உள்நாட்டில் வேலை வாய்ப்பு குறைந்தாலும் வெளிநாட்டு வாய்ப்புகள் அதிகரிக்கும். சந்திரனின் வீட்டை ராகு நெருங்குவதால் தகவல் தொழில் நுட்பத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் உள்நாட்டில் அமைவது கடினமே.
இந்தவருடம் ஐப்பசி மாதம் 10 ம் தேதி (27/10/2017) சனைஸ்வர பகவான் வக்ர நிவர்த்தி பெற்று இயல்பு கதியில் மீண்டும் தனுர் ராசியை அடையும் போது வேலையிழப்பு பிரச்சனைகள் ஒரளவு குறைந்துவிடும் என்றாலும் அவர் தனது சுய வீடு மற்றும் காலபுருஷனுக்கு கர்மஸ்தானமான மகரத்தை அடையும் வரை இந்த பிரச்சனை தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கும்.
இதில் கூறப்பட்டுள்ளது பொதுவாக அனைவருக்கும் பொருந்தும் என்றாலும் அவரவர் சுய ஜாதகத்தில் இரண்டாமதிபதி, ஆறாமதிபதி, பத்தாமதிபதி குரு, சனி போன்றவர்கள் இருக்கும் நிலையை பொருத்தும், அஷ்டம மற்றும் ஏழரை சனி போன்ற நிலைகளை பொருத்தும் மாறும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
வேலையிழப்பை தவிர்க்க பரிகாரங்கள்:
1. திருநள்ளாறு, குச்சனுர் போன்ற சனி ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவது.
2. பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை தவறாமல் செய்வது. அவரவர் குல வழக்கபடியான நித்திய கர்மானுஷ்டங்களை தவறாமல் கடைபிடிப்பது போன்றவை கர்மகாரகன் சனைஸ்வர பகவானை மகிழ்விக்கும் செயலாகும்.
3. அடிமை தொழில் செய்வோர், கடின உழைப்பாளிகளான வண்டி,ரிக்ஷா, வீடுகளில் பணிபுரிபவர்கள், துப்புரவு பணியாளர்கள் போன்றவர்களுக்கு சம்பள பேரம், சம்பள நிலுவை போன்றவை செய்யாமல் சரியான சம்பளத்தை வழங்குவது மற்றும் இயன்ற உதவிகளை செய்வது வேலையிழப்பினை குறைக்கும் பரிகாரங்களாகும்.