தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கணுமா? கல்வி கடவுளர்களை தரிசனம் செய்யுங்கள்
சென்னை: பொதுத்தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் இரவு பகலாக படித்து வருகிறார்கள். முயற்சி செய்து படித்தாலும் மனதில் தங்க வேண்டும், நினைவுக்கு வரவேண்டும். இதற்கு கடவுள் அனுகிரகமும் அவசியம் கூடவே கிரகங்களின் சாதகமும் அவசியம்.
ஒருவரின் ஜாதகத்தில் 2, 4, 5,9வது இடங்கள் கல்விக்கான நிலையை குறிக்கின்றன. வாக்கு ஸ்தானம் 2வது இடம் சரியாக இருந்தால் ஆரம்ப கல்வி அமோகமாக இருக்கும். 4வது இடம் உயர்நிலைக் கல்வியையும், 9வது இடம் மேல்நிலைக்கல்வியையும் குறிக்கிறது.
ஜாதகத்தில் 5வது இடம் நன்றாக இருந்தால் படிக்கும் அனைத்தும் மனதில் நன்றாக பதியும், படித்தவைகளை நன்றாக எழுதவும் முடியும். ராகுதிசை, ஏழரை சனி, அஷ்டம சனி வந்தால் பாதிப்பு ஏற்படுவது வாடிக்கை. இதற்காகவே இறைவனை சரணடைய சொல்கிறார்கள் ஜோதிடர்கள். தேர்வு நேரத்தில் கோவில்களில் நடைபெறும் யாகங்களில் பங்கேற்க வேண்டும். இதன் மூலம் தடைகள் நீங்குவதோடு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறலாம்.
புத்திக்கூர்மை எப்படி?
வாக்கு ஸ்தானமாகிய 2ல் ராகு அமர்ந்தால் கல்வியில் தேர்ச்சி பெற்று அரசுப் பணி ஏற்று உயர்ந்த அஸ்தஸ்தோடு மேலும் உயர் படிப்பையும் தொடர்வார். ஒருவர் ஜாதகத்தில் கேது 5ல் அமர்ந்து புதன் 9ல் இருந்தால் அவருக்கு புத்திக் கூர்மை, சாதிக்கும் ஆற்றல் பளிச்சிடும்.ஒன்பதாம் இடத்தில் புதன் அமர்ந்தால் ஜாதகருக்குக் கல்வி மேன்மையும் பக்தியும் அறிவாற்றலும் பளிச்சிடும். பாக்கிய ஸ்தானத்தில் குரு அமர்ந்தால் தெய்வ பக்தியுடன் சிறந்த கல்வி அறிவு, பேசும் திறமை வெளிப்படும்.
விநாயகருக்கு சிதறு தேங்காய்
சென்னை - மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள செங்கழுநீர் பிள்ளையாரிடம் தேர்வெழுதப்போகும் மாணவ, மாணவியர் ஆசி பெற்று சிதறுகாய் உடைத்துச் செல்வது வழக்கம். அதனால் அவர்களால் தேர்வை நன்றாக எழுதமுடிகிறது என்பது பலரது நம்பிக்கை.
கல்வி வரம் தரும் அன்னை
திருச்சி உத்தமர் கோயிலில் சரஸ்வதி தேவி கோவில் சிறப்பு வாய்ந்தது. நாகை மாவட்டம், பூந்தோட்டம் அருகில் உள்ள கூத்தனூரில், கம்பருக்கு அருளிய சரஸ்வதி தேவி தனிக் கோயில் கொண்டிருக்கிறாள். வாலாஜாவில் உள்ள தன்வந்திரி பகவான் ஆலயத்தில் சரஸ்வதிக்கு தனி சன்னதி உள்ளது.
லட்சுமி ஹயக்ரீவர்
சென்னை - செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள செட்டிபுண்ணியம் தலத்திலுள்ள ஹயக்ரீவமூர்த்தியை வணங்க, கல்வி வளம் சிறக்கும். இதே போல தன்வந்திரி பகவான் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள லட்சுமி ஹயக்ரீவமூர்த்தியை வணங்கலாம்.
குருபகவான் அருள்
சென்னை - திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலய வாசலில் உள்ள தட்சிணாமூர்த்தி, சிவகங்கை மாவட்டம், பட்டமங்கலத்தில் கிழக்கு முகமாய் கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசம் செய்தருளிய தட்சிணாமூர்த்தி கல்விச் செல்வத்தை வாரியருளும் வரப்பிரசாதியாகப் போற்றப்படுகிறார். இதே போல தன்வந்திரி பகவான் ஆலயத்தில் மேதா தட்சிணாமூர்த்தியை வணங்கலாம்.
கல்வி வரம் தரும் கடவுள்
காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய பிராகாரத்தில் அருளும் கலைகளுக்கெல்லாம் அதிபதியாகத் திகழும் ராஜமாதங்கியை வணங்கி வேண்டிட, கல்வியில் மேன்மை பெறலாம். வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் கொலுவிருக்கும் சரஸ்வதியை தரிசிக்க கல்வியில் மேன்மை உண்டாகும்.
கல்வி கடவுள் புதன்
ஒருவரின் ஜாதகத்தில் புதன் அமைந்திருப்பதைப் பொறுத்தே கல்வியும், மனன சக்தியும், கற்பனை வளமும் தீர்மானிக்கப்படுகின்றன. கல்வியில் சிறந்தோங்க புத பகவானின் அருளைப்பெற வேண்டியது அவசியம். நாகை மாவட்டம் திருவெண்காடு தலத்தில் புத பகவானுக்கு தனிச் சந்நதி உள்ளது. மூலவராக ஸ்வேதாரண்யேஸ்வரரும், பிரம்ம வித்யாம்பிகை எனும் திருப்பெயரோடு அம்பாளும் திகழ்கிறார்கள். அம்பாள் இங்கே சரஸ்வதிதேவியாகவே வழிபடப்படுகிறாள்.
தேர்வில் வெற்றி தரும் யாகம்
வாலாஜா தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 24 மற்றும் 25 தேதிகளில் காலை 10 மணியில் இருந்து பகல் ஒரு மணி வரை ஏலக்காய் கொண்டு ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் கல்வி ஹோமங்கள் மாபெரும் அளவில் நடக்க உள்ளது. இதில் ஸ்ரீ வித்யா கணபதி ஹோமம், ஸ்ரீசரஸ்வதி ஹோமம், ஸ்ரீ வித்யா லக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ மேதா சூக்த ஹோமம், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ஹோமம் மற்றும் ஸ்ரீ தன்வந்திரி ஹோமங்கள் ஆகியவையும் நடைபெற உள்ளன. பொது தேர்வில் மாணவ மாணவியர்கள் கல்வியில் மேம்படவும் ஆண்டுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும், பள்ளி கல்லூரிகளின் கல்வித்தரம் உயரவும் இந்த ஹோமம் நடைபெற உள்ளது.
மந்திரம் வெற்றி தரும்
மாலை நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வைத்து ஓம் ஹ்ரீம் க்லீம் ஹூம் மாதங்க்யை பட் ஸ்வாஹா எனும் ராஜமாதங்கியின் மூலமந்திரத்தை 108 தடவை கூற வேண்டும். தினசரியும் "ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மகே ! " என்ற ஹயக்ரீவர் ஸ்துதியை படிக்கலாம்.