உயர்கல்வி படிக்கணுமா? புதன் பகவானை சரணடையுங்கள் - பரிகார கோவில்கள்
ப்ளஸ் 2 மதிப்பெண் பார்த்து விட்டு என்ன படிப்பு படிக்கலாம் என்று யோசிப்பவர்கள் அதிகம். உயர்கல்வி படிக்க வித்யாகாரகன் எனப்படும்ம் புதன் பலமாக இருக்க வேண்டும்.
சென்னை: எத்தனையோ செல்வம் இருந்தாலும் கல்வி செல்வம்தான் இன்றைய கால கட்டத்தில் அனைவருக்கும் கை கொடுக்கிறது. அனைவருக்கும் உயர்கல்வி யோகம் அமைவதில்லை. மேல்நிலை, உயர்கல்வி படிக்க ஜாதகத்தில் புத பகவான் பலமாக அமையவேண்டும். உயர்கல்விக்கான யோகம், கல்வி நன்றாக அமைய பரிகாரம் பற்றி பார்க்கலாம்.
வசதி வாய்ப்புகளோடு இருந்தாலும் சிலரின் பிள்ளைகளுக்கு படிப்பே மண்டையில் ஏறாது. அதே சமயம் ஏழை பெற்றோர்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்கு படிப்பு நன்றாக வரும். இருவருமே ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோதிடரிடம் சென்று அடுத்து என்ன படிக்க வைக்கலாம் என்று கேட்பார்கள்.
மாதா,பிதா, குரு, தெய்வம் அருள் இருந்தால் உயர்கல்வி யோகம் தானாக அமையும். உயர்படிப்பு யோகம் கிடைக்க ஒருவரின் ஜாதகத்தில் புதன் ஏதாவது ஒரு விதத்தில் பலம் பெறுவது அவசியம். லக்னத்துக்கு 2,4,5,7,9,10,11 ஆகிய இடங்களில் நல்ல கிரக சேர்க்கை பெற்று இருக்க வேண்டும்.
ஒருவரின் உயர்நிலை கல்வி யோகத்தை லக்னத்துக்கு நான்காம் இடமான கல்வி ஸ்தானத்தை கொண்டும், பட்டப்படிப்பு, பட்ட மேல் படிப்புக்கு பாக்ய ஸ்தானம் எனும் ஒன்பதாம் இடத்தை வைத்தும் தெரிந்து கொள்ளலாம். லக்னம், 2, 5 ஆகிய ஸ்தானங்களும் பலம் பெறுவது அவசியம். அதோடு மறைந்த புதன், வக்ரம் பெற்ற புதன் நிறைந்த கல்வி அளிப்பார்.
புதன் அருள்
புதன் அருள் இருந்தால்தான் புத்திக்கூர்மை, சமயோசித புக்தி, நினைவாற்றல் நன்றாக இருக்கும். புதன் ராசி, அம்சம் இரண்டிலும் பலத்துடன் இருப்பது அவசியம். புதன் நீசம் அடையாமலும், 6, 8, 12 ஆகிய இடங்களில் மறையாமல் இருப்பதும் நல்லது. சில ஜாதகங்களில் புதன் நிலை சற்று குறைந்தாலும், மறைந்தாலும் வேறு சில அமைப்பினால் உயர்கல்வி யோகம் வரும். பத்திரிகைத்துறை, எழுத்தாளர், பேச்சாளர், விரிவுரையாளர், கணினி அறிவு என அனைத்திலும் ஜொலிக்க முடியும்.
பாக்ய ஸ்தானம் பலம்
எந்த கல்விப் பிரிவில் நாம் சாதிப்பதற்கான வாய்ப்பு இருப்பது என்பதை கணிப்பதில் ஜோதிட சாஸ்திரத்தின் பங்கு மகத்தானது. தெய்வத்தினால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும் என்று வள்ளுவர் கூறியுள்ளார். எனவே விடா முயற்சியுடன் படிக்கும் மாணவர்கள் ஒரு போதும் தோல்வி அடைவதில்லை. புதன் லக்னத்தில் இருப்பது மிகவும் சிறப்பு. ஆட்சி, உச்சம் பெறுவது மேலும் பலம். உயர்நிலை கல்வி வரை லக்னத்துக்கு நான்காம் இடமான கல்வி ஸ்தானத்தை கொண்டும், பட்டப்படிப்பு, பட்ட மேல் படிப்புக்கு பாக்ய ஸ்தானம் எனும் ஒன்பதாம் இடத்தை கொண்டும் அறிந்து கொள்ளலாம்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகும் யோகம்
5ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும், 5ல் ஓர் உச்ச கிரகம் அமையப் பெற்றாலும், கல்வி காரகன் புதன் ஆட்சி உச்சம் பெற்று 5ம் அதிபதியும் பலமாக இருந்தாலும் கல்வியில் சாதனை செய்யக்கூடிய யோகம் உண்டாகும். 5ல் சூரியன் அமைய கூடவே செவ்வாய் பலம் பெற டாக்டர் ஆகலாம். சந்திரன், ராகு, கேது ஆகிய கிரகங்களின் சேர்க்கை, பார்வை, சாரம் பெற்றிருந்தால், மருந்து சார்ந்த துறைகளில் சாதனை செய்யக்கூடிய யோகம் உண்டாகும். 5ல் செவ்வாய், சூரியன், குரு பார்வையுடன் 5ல் வலுவாக இருந்தால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற துறைகளில் சாதிக்க முடியும். 5ல் புதன் பலம் பெற்றால் கணக்கு கம்ப்யூட்டர், ஆடிட்டிங் சார்ந்த துறைகளில் உயர்கல்வி யோகம் உண்டாகும். 5ல் குரு பலம் பெற்றால் வங்கியில் பணிபுரியலாம். குரு உடன் புதன் இணைந்திருந்தால் பள்ளிக் கல்லூரிகளில் ஆசிரியர், பேராசிரியர் ஆகும் யோகம் உண்டாகும்.
கல்விக்கு அருளும் கிரகங்கள்
ஜாதகத்தில் லக்னம், 2, 5 ஆகிய இடங்களும் பலமாக அமைய வேண்டும். 1, 4, 5, 9 ஆம் வீடுகள் இதன் அதிபதிகள் ஒருவருக்கொருவர் தொடர்பு, பார்வை பரிவர்த்தனை பெற்றால் கல்வியில் சாதனை செய்ய முடியும். ஐந்தாம் இடம், ஐந்தாம் அதிபதி வலுவாக ஆட்சி, உச்சம், கேந்திர, கோணங்களில் இருப்பது சிறப்பு. புதன், குரு ஆகிய கிரகங்களின் பலம் மிகவும் முக்கியம். இதற்கடுத்தபடியாக கல்வி பயிலும் காலகட்டத்தில் நல்ல தசா புக்திகள் நடைபெற்றால் எல்லாம் சாதகமாக அமையும்.
கல்வியில் தடை ஏன்?
கல்வியில் தடை, தடங்கல், தோல்விகள் ஏற்படுவதற்கும் கிரக திசா புக்திகள், கோச்சார கிரக நிலைகளே காரணமாக இருக்கின்றன. புதன் நீச்சமாகியோ, 6, 8, 12ல் மறைந்தோ திசை வந்தால் கல்வியில் தடை ஏற்படுகிறது. படிப்பில் நாட்டம் செல்லாமல் தேவையற்ற குழப்பங்கள், மன சஞ்சலம் உண்டாகும். ஒரு சிலருக்கு மறைந்த புதன் நிறைந்த கல்வியாகவும் அமையும். படிக்கும் காலத்தில் 6, 8, 12 ஆகிய கிரக திசைகள் வந்தால் மறதி அதிகரிக்கும். எட்டாம் அதிபதி நான்காம் அதிபதியுடனும், சனி, செவ்வாயுடனும் சேர்க்கை பெற்று திசை வந்தால் திடீர் தடைகள் ஏற்படலாம்.
சனிபகவான்
சிலருக்கு திடீரென தேர்வு நேரத்தில் உடல் நலம் சரியில்லாமல் போய்விடும். நான்காம் அதிபதியுடன் நீச்ச கிரக சேர்க்கை நடைபெற்றால் தசாபுக்திகளால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கல்வி தடை ஏற்படலாம். கோச்சாரப்படி ஏழரை சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம நடப்பது ஆகியவையும் கல்விக்கு பாதிப்பையே ஏற்படுத்துகின்றன. இத்தகைய கிரக நிலைகள் அமையும்போது, மேலும் அதிக சிரமப்பட்டு படிப்பில் முழு கவனம் செலுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
மகாவிஷ்ணு, மதுரை மீனாட்சி
ஞாபகசக்தி அதிகரிக்க காலையில் விநாயகரை வணங்கி அகவல் படிக்கலாம். கல்விகளில் தேர்ச்சி அறிவாற்றலை அருளும் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை வணங்க வேண்டும். மதுரை மீனாட்சி புதன் பரிகார தலமாகும். பெருமாளையும் புதன்கிழமைகளில் வணங்கலாம். புதன்கிழமையும், திருவோண நட்சத்திரமும் சேரும் தினத்தில் ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி வழிபடலாம். கல்வி, வித்தை அருளும் புதன் பகவானை வணங்கலாம். கல்விக் கடவுளாம் சரஸ்வதியை வணங்குவது நல்ல பலன் தரும். திருவெண்காடு சென்று புதன் பகவானை வணங்க நன்மைகள் நடக்கும்.