ஜனாதிபதி, பிரதமர், முதல்வராகும் யோகம் யாருக்கு இருக்கு தெரியுமா?
அரசாளும் ராஜயோகம் யாருக்கு இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.
சென்னை: இன்றைக்கு பல நடிகர்கள், அரசியல்வாதிகளுக்கு முதல்வர் கனவு இருக்கிறது. ஏன் பிரதமர், ஜனாதிபதி ஆகும் ஆசை கூட இருக்கலாம். நாடாளும் ஆசை இருந்தாலும் அவர்களில் எத்தனை பேருக்கு அந்த யோகம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு அரசியலில் குதிக்கலாம்.
ஒருவன் ஜாதகத்தில் 9 கிரகங்களும் உச்சம் பெற்றிருந்தால் அவன் நாடாளுவான் என்று நகைச்சுவைக்காக சொல்வார்கள். 9 கிரகங்களும் உச்சம் பெறுவதற்கு வாய்ப்பு இல்லை. அப்படியே உச்சம் பெற்றிருந்தால், ஒரு உச்சம் பெற்ற கிரகம், இன்னொரு உச்சம் பெற்ற கிரகத்தை பார்க்கும் அமைப்பு ஏற்படும்.
'ஆசை இருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க...' என்று கிராமங்களில் ஒரு சொலவடை சொல்வார்கள்.
நாடாள வேண்டும் என்று ஆசை இருந்தால் மட்டும் போதாது அதற்கான யோகம், ஜாதகத்தில் அம்சங்கள் கிரகங்களின், சேர்க்கை, பார்வை இருக்க வேண்டும். ராஜ கிரகங்கள் நமக்கு சாதகமாக இருந்தால்தான் சாதகமான நேரத்தில் ராஜ பதவி தேடி வரும்.
யாருக்கெல்லாம் ராஜயோகம்... அரசாளும் யோகம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
கிரகங்களின் நிலை
அரசியல் யோகம் தரும் கிரகங்களில் முக்கியமான மூன்று கிரகங்கள் சூரிய பகவான்,சனி பகவான் மற்றும் ராகு பகவான் ஆகும்.இவை ஒருவருடைய ஜாதகங்களில் கேந்திரம்,திரிகோண பலம் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு அடுத்த நிலை பெறும் அரசியல் யோகம் தந்து நிர்வாகிக்கும் திறனை அளிக்கக்கூடிய கிரகங்கள் புதன் பகவான்,சுக்கிர பகவான்,செவ்வாய் பகவான் மற்றும் அரசியல் தந்திரத்தை அளிக்கக்கூடிய கேது பகவானின் நிலைகளையும் கவனிக்க வேண்டும்.
தொழில் ஸ்தானம்
தொழில் ஸ்தானம் என சொல்லப்படும் பத்தாமிடத்தில் ராகு பகவான் இருந்து உச்சம் பெற்று குரு பகவானின் பார்வையைப் பெறும் அமைப்பை பெற்றவர்களுக்கு அரசியலில் ஈடுபட்டு வெற்றி பெறும்
யோகம் உண்டு. ராகு பகவானின் திசையில் இத்தகைய அமைப்பை பெறுவார்கள். சனி பகவான் லக்கனத்தில் இருந்து வர்க்கோத்தம பலன் பெற்றது தங்களது தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தை பார்த்தால் மக்கள் போற்றும் தலைசிறந்த அரசியல்வாதியாக வலம்வருவார்கள்.
சூரியன் புதன் உச்சம்
சந்திரனும், குருவும் இணைந்து தனுசு அல்லது கடகத்தில் இருந்து சூரியன் அல்லது புதன் உச்சம் பெறுமானாலும்,மற்ற கிரகங்கள் பலம் பெறுவது அரசாளும் யோகம் தரும்.
கிரகங்களின் சேர்க்கை
குருவும் சூரியனும் மேஷத்திலும் செவ்வாய் 10ல், சுக்கிரன் 9ல், சந்திரன் புதன் இணைந்தும் இருப்பது. அனைத்து கிரகமும் மேஷம், கடகம், துலாம், மகர ராசியில் இருப்பது நாடாளும் யோகம் தரும்.
தலைவராகும் யோகம்
மகர லக்னமாக சனி கடகத்திலும், சூரியன், சந்திரன் இணைந்து 5லிலும் செவ்வாய் 11லிலும் சுக்கிரன் 8லிலும் இருப்பது மத்திய தர குடும்பத்தில் தோன்றினாலும் அரசாளும் யோகம் பெறுவார்கள்.
குரு பார்வை
புதன் கிரகம் பலம் பெற்று குருவின் பார்வை பெற்று 5ஆம் பாவத்தில் பலம் பெற்ற கிரகம் இருப்பது அமைச்சராகும் யோகம் தரும். லக்னாதிபதி, லக்னத்தில் இருந்தாலும் 4,7,10ல் பலமாக இருப்பது நாடாளும் யோகம் தரும்.
சனியும், சூரியனும்
சூரியனும், சனியும் மேஷத்தில் அமர்ந்திருப்பது. அதே போல அம்சத்திலும் இரண்டு கிரகங்களும் பலம் பெறுவது ராஜயோகம் தரும். குரு, சுக்கிரன் உச்சம் பெற்று கேந்திர திரிகோணம் பெறுவது நாடாளும் யோகம் தருமாம். இன்னும் நிறைய யோகங்கள் இருக்கின்றன. வரிசையாக இனி வரும் நாட்களில் பார்க்கலாம். உங்கள் ஜாதகத்தில் யாருக்காவது இந்த யோகம் இருக்கிறதா? அப்போ அரசியலில் குதிக்க தயாராகுங்கள்.