ஊதா பட்டில் அத்திவரதர்... நின்ற கோலத்தில் தரிசனம்- அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
Recommended Video
காஞ்சிபுரம்: அத்திவரதர் இன்று அதிகாலை முதல் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். கடந்த 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சயனகோலத்தில் தரிசனம் தந்த அத்திவரதரை 45 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளனர். நின்ற கோலத்தில் காட்சி தரும் அத்தி வரதரைக் காண மக்கள் வெள்ளம் காஞ்சிபுரத்தில் அலைமோதுகிறது.
அத்திவரதர் வைபவம் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் என்பதால் காஞ்சிபுரத்திற்கு பல மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் லட்சக்கணக்கானோர் வந்து கொண்டிருக்கின்றனர். ஜூலை 1ஆம் தேதி தொடங்கிய இந்த விழா இன்றோடு 32வது நாளாக நடைபெறுகிறது. 31 நாட்கள் சயனகோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் இன்று முதல் நின்று கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
நீருக்குள் 40 ஆண்டுகாலமாக இருந்த அத்திவரதரின் சில பாகங்கள் சேதமடைந்துள்ளன. கால், கை பகுதியில் ஏற்பட்ட சேதங்களை தங்கம் கலந்த செப்புத்தகட்டில் ஒட்ட வைத்துள்ளனர். நேற்று மாலை முதலே பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டது. அத்திவரதரை நிற்க வைக்கும் பணிகள் நடைபெற்றன.
ஊதா பட்டில் அத்திவரதர்
அத்திவரதர் நின்ற கோலத்திற்குத் தயாரான பிறகு, இன்று அதிகாலை ஐந்து மணியிலிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நின்ற கோலத்தின் முதல் நாளான இன்று, அடர் ஊதா நிற பட்டுடுத்தி, மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சயனகோலத்தில் தரிசித்தவர்களும் நின்ற கோலத்தில் அத்திவரதரை காண கோவிலுக்கு வருவதால் காணும் இடமெங்கும் மனித தலைகளாக காட்சி அளிக்கிறது.
பக்தர்கள் தரிசனம்
நின்ற கோலத்தில் அத்திவரதரை தரிசிக்க நேற்று மதியம் 3 மணியில் இருந்தே பக்தர்கள் காத்திருந்தனர். இன்று காலை சரியாக 5:25 மணிக்கு நின்ற திருக்கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அமைதியாக வரிசையில் நின்று அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்பதனால் பக்தர்களுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோயில் வளாகத்துக்குள் பக்தர்களுடைய எண்ணிக்கை அதிகளவில் இருக்கும் போது பக்தர்களை கூடாரங்களில் தங்க வைக்கவும் பகுதி பகுதியாக பிரித்து அவர்களை அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . பக்தர்களுக்கு 24 மணி நேரம் அன்னதானமும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 3 தரிசன நேரம்
ஆகஸ்ட் 3ஆம் தேதி சனிக்கிழமை ஆடிப் பூரத்தை முன்னிட்டு மதியம் 3 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு கோவிலில் கோவிலின் உள்ளே அனுமதிப்பட்டவர்கள் மட்டும் மாலை 5 மணிவரை அனுமதிக்கப்படுவர். அன்றைய தினம் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பின் மாலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரை அனுமதி கிடையாது. திருக்கல்யாணம் முடிந்த பிறகு இரவு 8 மணிமுதல் நள்ளிரவு வரை தரிசிக்கலாம். அன்றைய தினம் விடுமுறை தினமான சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று கருட சேவை உற்சவம் நடைபெறுவதால் மாலை 5 மணிக்கு மேல் அத்திவரதர் தரிசனம் இல்லை என பொன்னையா தெரிவித்துள்ளார். வெளியூர் பக்தர்கள் இந்த நேரத்துக்கு தகுந்தாற்போல தரிசனத்துக்குச் செல்வது நல்லது என்று ஆலய நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.