அத்திவரதர் நின்ற கோலம் - ஆடிப்பூரம் நாளில் தரிசன நேரத்தில் மாற்றம் - பக்தர்கள் கவனத்திற்கு
காஞ்சிபுரம்: ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளதால் நாளை வி.வி.ஐ.பி பாஸ் வைத்துள்ளவர்கள் மாலை 3 மணிக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஆகஸ்ட் 3ஆம் தேதி சனிக்கிழமை ஆடிப் பூரத்தை முன்னிட்டு மதியம் 3 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு கோவிலின் உள்ளே அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டும் மாலை 5 மணிவரை அனுமதிக்கப்படுவர். அன்றைய தினம் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பின் மாலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரை அனுமதி கிடையாது. திருக்கல்யாணம் முடிந்த பிறகு இரவு 8 மணிமுதல் நள்ளிரவு வரை தரிசிக்கலாம்.
நாற்பது ஆண்டுகாலம் அனந்தசரஸ் தெப்பக்குளத்தில் ஆனந்த சயனத்தில் வீற்றிருந்த அத்திவரதர் ஜூலை 1ஆம் தேதி முதல் எழுந்தருளி பக்தர்களுக்கு
காட்சி அளித்துக்கொண்டிருக்கிறார். 48 நாட்களுக்கு மட்டுமே அத்திவரதர் தரிசனம் தருவார் என்பதால் லட்சக்கணக்கான மக்கள் காஞ்சிபுரத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். 30 நாட்களில் 50 லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்திருப்பதாக கூறுகிறது புள்ளிவிபரம்.
காஞ்சிபுரம் வரை வந்து விட்டு அத்திவரதரை தரிசனம் செய்யாமல் போனவர்கள் எத்தனை ஆயிரம் பேரோ தெரியவில்லை. இதுநாள்வரை சயனகோலத்தில் காட்சி தரும் அத்திவரதர் ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் காட்சி தரப்போகிறார். குடியரசுத்தலைவர் முதல் பிரதமர், முதல்வர், ஆளுநர் முக்கிய பிரமுகர்கள் என லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
தரிசன நேரத்தில் மாற்றம்
நாளை முதல் வரும் வாரங்களில் அத்திவரதர் தரிசன நேரத்தில் சில மாற்றங்கள் இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியர் பொன்னையா நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறியதாவது, வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிக்க உள்ளார். இதனால் நாளை வி.வி.ஐ.பி பாஸ் வைத்துள்ளவர்கள் மாலை 3 மணிக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். டோனர் பாஸ், வி.ஐ.பி பாஸ் வைத்துள்ளவர் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுபதிக்கப்படுவர்.
3 மணிவரை மட்டும் அனுமதி
நாளை புதன்கிழமை, மதியம் 12மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். அப்போது கோவிலின் உள்ளே அனுமதிப்பட்டவர்கள் மட்டும் மாலை 5 மணிவரை அனுமதிக்கப்படுவர். மேலும் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தவர்கள் மதியம் 12 முதல் மாலை 3 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். இது நாளைக்கான அட்டவணை.
ஆடிப்பூரம் தரிசனம்
ஆகஸ்ட் 1 வியாழக்கிழமை வழக்கம் போல அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். அன்றில் இருந்து அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அதைன்பிறகு ஆகஸ்ட் 3ஆம் தேதி சனிக்கிழமை ஆடிப் பூரத்தை முன்னிட்டு மதியம் 3 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு கோவிலில் கோவிலின் உள்ளே அனுமதிப்பட்டவர்கள் மட்டும் மாலை 5 மணிவரை அனுமதிக்கப்படுவர்.
நள்ளிரவு வரை தரிசனம்
அன்றைய தினம் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பின் மாலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரை அனுமதி கிடையாது. திருக்கல்யாணம் முடிந்த பிறகு இரவு 8 மணிமுதல் நள்ளிரவு வரை தரிசிக்கலாம். அன்றைய தினம் விடுமுறை தினமான சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுமென எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியூர் பக்தர்கள் கவனத்திற்கு
பின் 15ஆம் தேதி அன்று கருட சேவை உற்சவம் நடைபெறுவதால் மாலை 5 மணிக்கு மேல் அத்திவரதர் தரிசனம் இல்லை என பொன்னையா தெரிவித்தார். வெளியூர் பக்தர்கள் இந்த நேரத்துக்கு தகுந்தாற்போல தரிசனத்துக்குச் செல்வது நல்லது என்று ஆலய நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.