ரோஸ் பட்டில் ஜொலிக்கும் அத்திவரதர்... தங்கக் கையில் மாசுச - விளக்கம் என்ன?
கவலைப்படாத என்று அபயக்கரம் நீட்டி மக்களை காத்துக்கொண்டிருக்கிறார் அத்திவரதர். தங்கக் கை கவசத்தில் 'மாசுச' என்று எழுதப்பட்டிருப்பதைப்பற்றியே மக்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
காஞ்சிபுரம்: அத்திவரதர் இன்று நின்ற கோலத்தில் நான்காவது நாளாக காட்சி அளித்தார். ரோஸ்நிற பட்டில் ஜொலித்த அத்திவரதரை அதிகாலை முதலே மக்கள் தரிசனம் செய்தனர். நின்ற கோலத்தில் இருக்கும் அத்தி வரதரின் வலது கை அபய முத்திரை காட்டி நிற்கிறார். அபய ஹஸ்த முத்திரையுடன் அருள்பாலிக்கும் அத்திவரதரின் கை, தங்கக் கவசத்தால் சூழப்பட்டிருக்கிறது. அவரின் கையில், மாசுசா: என்ற வார்த்தை எழுதப்பட்டிருக்கின்றது இதற்கான விளக்கம் என்ன என்பது பற்றியே பலரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
காஞ்சிபுரம் ஆனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே வந்த அத்திவரதர் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 31ஆம் தேதி வரை சயன கோலத்தில் காட்சி கொடுத்த அத்திவரதர் தற்போது நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கடந்த 33 நாட்களில் 50 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
ஆண்டாள் திருக்கல்யாணத்தை முன்னிட்டு 2 மணியோடு மக்கள் தரிசனம் நிறுத்தப்பட்டது. கோவிலுக்குள் சென்றவர்களுக்கு 5 மணிவரை மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மேல் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுவதால் 8 மணிவரை அத்திவரதர் தரிசன நேரம் நிறுத்தப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
தங்கக்கவசத்தில் அத்திவரதர்
34வது நாளான இன்று ரோஸ்நிற பட்டில் நின்ற கோலத்தில் இருக்கும் அத்தி வரதரின் வலது கை அபய முத்திரை காட்டி நிற்கிறார். அபய ஹஸ்த முத்திரையுடன் அருள்பாலிக்கும் அத்திவரதரின் கை, தங்கக் கவசத்தால் சூழப்பட்டிருக்கிறது. இந்தத் தங்கக் கவசத்தில் 16 வைரக் கற்கள், 188 ரூபி கற்கள், மூன்று மரகதக் கற்கள், 107 அமெரிக்கன் டைமண்ட் கற்கள் ஆகியவை பதிக்கப்பட்டுள்ளன. அவரின் கையில், மாசுசா: என்ற வார்த்தை எழுதப்பட்டிருக்கின்றது.
கவலைப்படாதே
மாசுச என்றால் என்ன அதன் பொருள் என்ன மாசுச என்பது வடமொழி சொல். இதற்கு கவலைப்படாதே என்று பொருள். பகவத் கீதையில் கிருஷ்ணர் அர்ச்சுஜனிடம் சொன்ன கடைசி வார்த்தை ‘மாசுசஹா'. இதைத்தான் சுருக்கமாக மாசுச அத்திரவரதரின் தங்க கவசத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
மாசுசஹா என்றால் எதற்கும் கவலைப்படாதே... உனக்கு எது நடந்தாலும் நான் துணையிருக்கிறேன் என்று அர்த்தமாம்.
என்னை மட்டும் சரணடை
திருக்கோட்டியூர் நம்பிகள் சரம ஸ்லோகப் பொருளை இராமானுஜருக்கு உபதேசித்தார். சரம ஸ்லோகம் என்பது பகவத் கீதையின் பதினெட்டாம் அத்தியாயத்தில் உள்ள 66வது ஸ்லோகம்.
அஹம் த்வா சர்வ பாப்பேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச "
எல்லா தர்மங்களையும் அறவே விட்டு, என்னை மட்டும் சரணடை. நான் உன்னை எல்லா பாவங்களில் இருந்தும் விடுவிப்பேன் வருந்தாதே என கீதையில் கண்ணன் சொல்லியிருக்கிறார். அத்தி வரதர் பல லட்சம் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நிலையில். சயன கோலத்தின் போது இல்லாத ‘மாசுச' என்ற வார்த்தை நின்ற நிலையில் அபய முத்திரையை பக்தர்களுக்கு காட்டி, ‘மாசுச' என்ற வார்த்தையுடன் என்னை சரணடை என சொல்லும் விதமாக உள்ளது.
நள்ளிரவு வரை தரிசனம்
ஆடிப்பூரம் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுவதை ஒட்டி அத்தி வரதர் உற்சவம் மாலை 5 மணிக்குப் பிறகு தரிசனம் நிறுத்தப்பட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் முடிவடைந்தவுடன் இரவு 8 மணிக்குப் பிறகு மீண்டும் தரிசனம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்காக மதியம் 2 மணிக்கே கிழக்கு நுழைவு வாசல் மூடப்பட்டது. இரவு 8 மணிக்கு மேல் நள்ளிரவு வரை அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
அனந்த சரஸ் குளத்தில் அத்திவரதர்
நிறைவு நாளான ஆகஸ்ட் 17 அன்று மாலை 5 மணியுடன் அத்தி வரதர் வைபவம் முழுவதுமாக நிறைவு பெறும் என்றும், அதன் பின் அத்தி வரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கும் வேலை துவங்கபடும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.