அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு- இனி 2059ல்தான் குளத்தை விட்டு வெளியே வருவார்
அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவடைகிறது. பொது தரிசனம் மட்டுமே இன்று இரவு 11 மணிவரை நடைபெறும் நாளை முதல் ஆனந்தசரஸ் தெப்பக்குளத்தில் ஓய்வெடுக்கப் போகிறார். இதற்கான பூஜைகள் நாளை நடைபெறும்.
Recommended Video
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கடந்த 46 நாட்களாக அருள்பாலித்து வரும் அத்தி வரதர் தரிசனம் இன்று இரவுடன் நிறைவடைகிறது. நாளை முதல் அவர் ஆனந்தசரஸ் குளத்தில் சயன கோலத்தில் ஓய்வெடுக்கப் போகிறார். இனி அத்திவரதரை 2059 ஆம் ஆண்டுதான் தரிசிக்க முடியும்.
காஞ்சிபுரம் நகரமே கடந்த 48 நாட்களாக திருவிழாக்கோலமாக காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் மனிதத்தலைகள். வாகனங்களால் நிரம்பி வழிகிறது காஞ்சிபுரம் மாநகம். காரணம் அத்திவரதர் திருவிழாதான். 40 ஆண்டுகாலமாக ஆனந்தசரஸ் குளத்தில் சயனகோலத்தில் இருந்த அத்திவரதர் கடந்த ஜூன் 30 ஆம் தேதி வெளியே வந்தார். பூஜைகளுக்குப் பின்னர் ஜூலை 1ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சி தருகிறார் ஆதி அத்திவரதர்.
நாடு முழுவதும் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரைக் காண காஞ்சிபுரத்தில் குவிந்ததால் நகரமே குலுங்கியது. கடந்த 46 நாட்களாக 1 கோடி பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். அத்திவரதர் தரிசனம் இன்றுடன் கடைசி என்பதால் நேற்று முதலே பக்தர்கள் அலைமோதி வருகின்றனர். இன்று நள்ளிரவு வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். நாளைய தினம் பூஜைகளுக்குப் பின்னர் மீண்டும் ஆனந்தசரஸ் குளத்திற்குள் அனந்த சயனம் மேற்கொள்வார் அத்திவரதர்.
வண்ண வண்ண பட்டில் ஜொலித்த அத்திவரதர்
அத்திவரதர் ஜூலை 1ஆம் தேதி முதல் தினம் தினம் ஒரு பட்டுப்புடவையில் எழுந்தருளி அருள்பாலித்தார். அலங்கார மாலைகள், ரோஜா, தாமரை, சாமங்கி, என வண்ண வண்ண மலர்கள் சூடி அலங்கார ரூபனாய் எழுந்தருளினார். அவரின் அழகைக் காண கண் கோடி இருந்தாலும் போதாது என்று தரிசித்த பக்தர்கள் கூறினர்.
நின்ற கோலம்
31 நாட்கள் சயனகோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அவரது தரிசனம் காண தமிழகம் மட்டுமல்லாது வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், , முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும், நடிகர்கள் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் அத்திவரதரை தரிசித்தனர்.
குலுங்கிய காஞ்சி
அத்திவரதர் தரிசனம் காண வந்த பக்தர்களின் கூட்டத்தால் காஞ்சிபுரம் மாநகரமே குலுங்கியது. 24 மணிநேரம் கூட வரிசையில் நின்று அத்திவரதரை தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசல் இருந்தாலும் அத்திவரதரை தரிசித்த அந்த நொடி அத்தனை கஷ்டமும் பறந்தோடி விடும் என்று பக்தர்கள் கூறினர்.
அலைமோதும் கூட்டம்
அத்திவரதர் காட்சி இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் விடுமுறை தினமான நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்றிரவு 11 மணி நிலவரப்படி, சுமார் 3 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்திருந்தனர். இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
அத்திவரதர் தரிசனம், இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.
48 நாட்கள் திருவிழா
விவிஐபிகளுக்கான தரிசனம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனால், விஐபி வரிசையில் மட்டும் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு மக்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். 48 நாட்கள் கொண்ட அத்திவரதர் திருவிழா நாளையுடன் நிறைவடைகிறது. இன்று காலை 5 மணிக்கு தொடங்கிய பொது தரிசனம் நள்ளிரவு வரை நீடிக்கும்.
மீண்டும் குளத்திற்குள் அத்திவரதர்
நாளை அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதரை இறக்கும் பணிகள் நடைபெறும். இதற்காக பூஜைகள் செய்யப்பட உள்ளதால் இன்று மட்டுமே அத்திவரதரை பக்தர்கள் தரிசிக்க முடியும். அதற்காக அவரது அறை தயாராக உள்ளது. நாளை ஓய்வெடுக்க குளத்திற்குள் போகும் அத்திவரதர் இனி 2059ஆம் ஆண்டுதான் வெளியே வருவார்.
தரிசனம் கிடைக்குமா
இந்த நிலையில், அத்திவரதரை 48 நாட்களுக்கு பின் மீண்டும் குளத்தில் வைக்க வேண்டும் என எந்த ஆகம விதியும் இல்லை என்று தென்னிந்திய ஹிந்து மகா சபா தெரிவித்துள்ளது. எனவே, தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் என்று அதன் தலைவர் வசந்தகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.