வரம் தரும் அத்திவரதர் தரிசனம் ஓராண்டு நிறைவு - 48 நாட்கள் குலுங்கிய காஞ்சிபுரம்
கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்த அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்பட்டார்.
காஞ்சிபுரம்: தமிழ்நாட்டையே கலக்கி கொண்டிருந்தவர் அத்திவரதர். அவரின் தரிசனத்திற்காக கடந்த ஆண்டு இதே நாளில் மக்கள் கூட்டம் காஞ்சிபுரத்தில் அலைமோதியது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் வெளியே எழுந்தருளும் அத்தி வரதர், 1979ஆம் ஆண்டு ஜூலை, 2ல் எழுந்தருளினார். அத்திவரதர் சிலை பின்னர் மீண்டும் குளத்தில் வைக்கப்பட்டது. 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு மீண்டும் அத்திவரதர் எழுந்தருளினார்.
கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்த அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்பட்டார். குடியரசுத்தலைவர் முதல் சாமானிய மக்கள் வரை கோடிக்கணக்கானோர் அத்திவரதரை தரிசனம் செய்தனர். 40 வருடங்களுக்கு பிறகு 2059ம் ஆண்டுதான் அத்திவரதரின் தரிசனம் கிடைக்கும் என்பதால் திரண்டு வந்து தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம், திருப்பதி ஆகியவற்றிற்கெல்லாம் முந்தைய மிகப் பழமையான வரலாறு கொண்டது காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில். இக்கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்று. புராணங்களின் படி பிரம்ம தேவரால் உருவாக்கப்பட்டவர் அத்திவரதர். அவர்தான் திருக்குளத்தில் வாசம் செய்வதுடன், 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளியில் எழுந்தருளி பக்தர்களுக்கு திவ்ய தரிசனம் தருகிறார். இந்த பெருமாளை, மூன்று ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
ஜூலை மாத ராசி பலன் 2020: மாளவியா யோகத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு வரும்
அத்தி வரதர் வரலாறு
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், பிரம்மா நடத்திய அசுவமேத யாகத்தில் இருந்து அவதரித்தார் என நம்பப்படுகிறது. பெரும்தேவி தாயார் பிருகு மஹரிஷி நடத்திய புத்திர காமஷ்டி யாகத்தில் அவதரித்தாக புராண கதைகள் சொல்கின்றன. இந்த பெருமாளிடம் நேரடியாக பேசும் பேறு பெற்றவராக, திருக்கச்சி நம்பிகள் திகழ்ந்தார். தினமும் காலை கிணற்றில் இருந்து பெருமாளுக்கு தீர்த்தம் கொண்டு வந்து, சேவை செய்து வந்த உடையவர் ராமானுஜர், பெருமாள் உத்தரவின்படி ஸ்ரீரங்கம் சென்றதாக கூறப்படுகிறது.
தரிசனம் கொடுத்த அத்தி வரதர்
கடந்த ஆண்டு இதே நாளில் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். 48 நாட்களும் பக்தர்கள் கூட்டத்தால் அலைமோதியது காஞ்சிமாநகரம். கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து சென்ற காஞ்சிநகரத்தைப் பற்றியும் அத்திவரதரைப்பற்றியும் உலகம் முழுவதும் மக்கள் பேசினார்கள். இந்த ஆண்டு உலகம் முழுவதுமே கொரோனா வைரஸ் தாக்கத்தினால் முடங்கியுள்ளது. காஞ்சி மாநகரமும் தீவிர லாக்டவுன் அறிவிக்கப்பட்டு கோவில்களில் நித்ய பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றன.
அத்தி மர சிலைகள்
அத்திவரதரை பார்க்க இனி 40 ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டாம். அத்தி மரத்தில் செய்யப்பட்ட பெருமாளை தரிசனம் செய்தாலே அத்திவரதரின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அத்தி வரதரைப் போல உடுப்பி கிருஷ்ணன் சிலை அத்தி மரத்தில் செய்யப்பட்டது. வானமுட்டிப் பெருமாள் ஆலயம் மயிலாடுதுறை அருகே சுமார் 5 கி.மீ. தூரத்தில் கோழிகுத்தி என்ற சிறு கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் மூலவர் அத்தி மரத்தைக் கொண்டு சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. பெருமாள் விஸ்வ ரூபமாக இருந்ததால் வானமுட்டிப் பெருமாள் என பெயர் சூட்டியிருக்கின்றனர்.
சுக்கிரன் அருள் நிறைந்த அத்திமரம்
அத்திவரதர் வரப்பிரசாதி. அத்தி வரதரைப் போல அத்தி மரமும் வரம் தரும் மரம்தான் காரணம் அத்தி மரம் தத்தாத்திரேயரின் அம்சமாகும். விஷ்ணுவும் இதில் குடியிருக்கிறார். அத்தி ஆறாவது கிரகமான சுக்கிரனின் அம்சமாகக் கருதப்படுகிறது. அசுர குரு சுக்கிராச்சாரியார் அத்தி மரமாக மறுபிறவி எடுத்ததாக சதுர்மாசிய மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.
வரம் தரும் அத்தி மரம்
அத்திக்கு நல்ல அதிர்வலைகள் உண்டு. எனவே அத்தி மரப் பலகையில் உட்கார்ந்து தவம் செய்தால் பூமியினுடைய புவிஈர்ப்பு விசை நம்மை அதிகம் தாக்காமல் எந்த மந்திரத்தை உச்சரிக்கிறோமோ அந்த மந்திரத்தினுடைய பலன் முழுமையாகக் கிடைக்கும்.
குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் தம்பதியர் அத்திப்பழத்தை அப்படியே சாப்பிடலாம். காலை மாலை சாப்பிட்டு பால் குடித்து வரலாம். அத்தி மரத்தை பார்த்தால் அத்தி வரதரை நினைத்து வணங்குங்கள் அத்தி வரதர் கண்டிப்பாக வரம் தருவார். கொரோனா நோய் பிரச்சினையில் இருந்து மக்களை காக்க வேண்டிக்கொள்வோம்.