அத்தி வரதர் ஸ்பெஷல்: சுக்கிரனின் அம்சம்... கணவன் மனைவி பிரச்சினை தீர்க்கும் அத்தி மரம்
அத்தி மரத்திலிருந்து வரக்கூடிய வைப்ரேஷன் கணவன், மனைவி இடையே அன்பையும் பாசத்தையும் அதிகரிக்கும் சக்தி கொண்டது. கணவன் மனைவி பிரச்சினை உள்ளவர்கள் அத்தி மரத்தை வணங்குவது நல்லது.
மதுரை: அத்தி வரதரைப் பற்றி உலகமே பேசுகிறது. பிரம்மதேவன் அத்தி மரத்தில் செய்து வழிபட்ட பெருமாள் கேட்ட வரங்களை தரக்கூடியவர். இவர் வரப்பிரசாதி என்பதால் இவரை தரிசனம் செய்ய மக்கள் பல பகுதிகளில் இருந்தும் காஞ்சிபுரத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். அத்தி வரதரைப் போல அத்தி மரமும் வரம் தரும் மரம்தான் காரணம் அத்தி மரம் தத்தாத்திரேயரின் அம்சமாகும். விஷ்ணுவும் இதில் குடியிருக்கிறார்.
அத்தி மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் வேண்டுதல் எளிதாக கைகூடும். அத்தி ஆறாவது கிரகமான சுக்கிரனின் அம்சமாகக் கருதப்படுகிறது. அசுர குரு சுக்கிராச்சாரியார் அத்தி மரமாக மறுபிறவி எடுத்ததாக சதுர்மாசிய மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.
மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிப்புவைக் கிழித்துக் கொன்று வதம் செய்த பின்னர் அத்தி மரப்பட்டையில் நகங்களைப் பதித்துச் சுத்தப்படுத்திக் கொண்டாராம்.
அத்தி மரச்சிலைகள்
திருவொற்றியூர், திருக்கானாட்டு முள்ளூர் ஆகிய திருக்கோயில்களில் இரண்டாவது தலவிருட்சமாக அத்திமரம் வணங்கப்படுகிறது. அத்தி வரதரைப் போல உடுப்பி கிருஷ்ணன் சிலை அத்தி மரத்தில் செய்யப்பட்டது. திருமலையில் தல தீர்த்தமாகிய குளத்திலும் அத்தி வரதர் எழுந்தருளியுள்ளார்.வானமுட்டிப் பெருமாள் ஆலயம் மயிலாடுதுறை அருகே சுமார் 5 கி.மீ. தூரத்தில் கோழிகுத்தி என்ற சிறு கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் மூலவர் அத்தி மரத்தைக் கொண்டு சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. பெருமாள் விஸ்வ ரூபமாக இருந்ததால் வானமுட்டிப் பெருமாள் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாம்.
கணவன் மனைவி ஒற்றுமை
கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக விரும்பி விலகாமல் இருப்பதற்கும் கடைசி வரையில் பிரியாமல் இருப்பதற்கும் வீட்டில் அத்தி மரம் நட்டு வைத்து பராமரித்து வர நல்ல பலன்கள் உண்டாகும் என்பது ஐதீகம். அத்திக்கு நல்ல அதிர்வலைகள் உண்டு. எனவே அத்தி மரப் பலகையில் உட்கார்ந்து தவம் செய்தால் பூமியினுடைய புவிஈர்ப்பு விசை நம்மை அதிகம் தாக்காமல் எந்த மந்திரத்தை உச்சரிக்கிறோமே அந்த மந்திரத்தினுடைய பலன் முழுமையாகக் கிடைக்கும்.
சிக்கல்கள் நீங்கும்
கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவு, சிக்கல்கள் போன்று இருப்பவர்கள், சுக்ரன் நீச்சமாக, பகையாக இருப்பவர்கள், சுக்ரன் ஜாதகத்தில் கெட்டுப் போய்விடுதல் போன்றவற்றிற்கு நடைமுறைப் பரிகாரம் என்று பார்த்தால் ஒரு அத்தி மரத்தை நட்டு வளர்த்து பராமரித்தாலே அவர்களிடையே சண்டை, சச்சரவுகள் எல்லாம் நீங்கும். இனக்கமான சூழல் உருவாகும். தாம்பத்ய சிக்கல்கள் நீங்கும். அதனால்தான் வாழ்க்கை வளம் பெறுவதற்கும், கணவன் மனைவிக்குள் நெருக்கம், கடைசி வரையில் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக விரும்பி விலகாமல் இருப்பதற்கும் ஒவ்வொரு வீட்டிலுமே அத்தி மரம் இருந்தால் மிகவும் விசேஷமாக இருக்கும்.
நன்மை தரும் அத்திப்பழம்
அத்தி மரம் வலிமையானது. சிலை வடிக்க ஏற்றது. சுக்ரனுடைய செயல்பாடு என்பது வித்தியாசமாக இருக்கிறது. சுக்ராச்சாரி நேரடியாக மோதமாட்டார். மறைந்து நின்று தாக்கக்கூடியவர் சுக்ராச்சாரியார். அத்தி மரம் மட்டுமல்ல அத்திபழம் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் தம்பதியர் அத்திப்பழத்தை அப்படியே சாப்பிடலாம். காலை மாலை சாப்பிட்டு பால் குடித்து வரலாம். அத்திப்பழத்தை பதப்படுத்தி தேனில் போட்டு சாப்பிடலாம். உலர்த்திப் பொடி செய்து சூரணமாக 10-15 கிராம் பாலில் போட்டு சாப்பிடலாம். தாது விருத்திக்குச் சிறந்ததாகும். ஆண்மை ஆற்றல் பெறும். ஆண் மலடும் அகலும்.