அத்திவரதர் தரிசனம்... ஆன்லைன் புக்கிங் - இப்ப மிஸ் பண்ணிட்டா 2059வரை காத்திருக்கணும்
தன் யாகத்தை காத்தருளிய பெருமாளின் திருவடிவத்தை தேவலோக சிற்பி விஸ்வகர்மாவைக்கொண்டு அத்திமரத்தில் வடிவமைத்தார் பிரம்ம தேவர். இப்படித்தான் அத்தி வரதர் மண்ணுலகில் எழுந்தருளினார். வேள்வித்தீ வெப்பத்தை குளி
காஞ்சிபுரம்: அத்தி வரதரின் தரிசனம் காண பக்தர்கள் காஞ்சிபுரத்தில் திரண்டிருக்கின்றனர். ஜூலை 1ஆம் தேதி நேற்று முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அத்திவரதர் 30 நாட்கள் சயனக்கோலத்திலும் 18 நாட்கள் நின்ற கோலத்திலும் அருள்பாலிப்பார். அத்திவரதரை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் வரை தரிசனம் செய்துள்ளனர். 48 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதர் மீண்டும் குளத்திற்கு சென்றால் 2059ஆம் ஆண்டுதான் மீண்டும் வெளியே வருவார்.
கோயில்களின் நகரமான காஞ்சி மாநகரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்று. புராணங்களின் படி பிரம்ம தேவரால் உருவாக்கப்பட்டவர் அத்திவரதர். அவர்தான் திருக்குளத்தில் வாசம் செய்வதுடன், 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளியில் எழுந்தருளி பக்தர்களுக்கு திவ்ய தரிசனம் தருகிறார்.
1939, 1979 ஆம் ஆண்டுகளில் குளத்தில் இருந்து வெளியில் வந்து அருள்பாலித்த அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 28ஆம் தேதி 2.30 மணியளவில் அத்தி வரதர் திருக்குளத்தில் இருந்து வெளியே வந்தார். ஐந்து தலை ஆதிசேஷன் படுக்கையுடன் அத்தி வரதர் எழுந்தருளி உள்ளார். அவருடன் 16 நாக சிலைகள் இருந்தன. வேத மந்திரங்கள் முழங்க அத்தி வரதரை குளத்திலிருந்து வசந்த மண்டபத்தில் கொண்டு செல்லப்பட்டார். அப்போது அத்திவரதர் திருமேனியில் படிந்து இருந்த பச்சையம் அனைவருக்கும் தரப்பட்டது. அந்த பச்சையம் நறுமணம் மிகுந்ததாக இருந்ததாக பக்தர்கள் கூறினர்.
ஆளுநர் தரிசித்த அத்திரவரதர்
அத்தி வரத பெருமாள் 48 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். நேற்று பக்தர்கள் தரிசிக்க வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அத்தி வரத பெருமாளை அதிகாலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்து வருகின்றனர். அத்தி வரதரின் காட்சி 40 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் அதிசய நிகழ்வு என்பதால், பல லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர். நேற்று அதிகாலையிலேயே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவிலுக்கு வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார்.
ஆன்லைன் புக்கிங்
உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யும் பொருட்டும். கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டும் அரசு மற்றும் கோயில் நிர்வாகம் சார்பாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமும் முன்பதிவு செய்யலாம். 4ஆம் தேதி தரிசனம் செய்வதற்கு ஏற்ற வகையில் இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சஹஸ்ரநாம அர்ச்சனை முன்பதிவு
04.07.2019 முதல் சஹஸ்ரநாம அர்ச்சனை மேற்கொள்ளப்படும். இதற்கான அர்ச்சனை டிக்கெட்டுகளை இன்று முதல் இத்துறை இணையதளமான https://tnhrce.gov.in ல் முன்பதிவு செய்து டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்ய திருக்கோயில் நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது. முன்பதிவு செய்த டிக்கெட்டிற்கான தேதியை மாற்றுவதோ, ரத்து செய்வதோ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அதற்கான தொகையினை திரும்பப்பெற இயலாது.
வைகுண்ட பதவி கிடைக்கும்
ஸ்ரீரங்கம், திருப்பதி ஆகியவற்றிற்கெல்லாம் முந்தைய மிகப் பழமையான வரலாறு கொண்டது காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்.
காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்தி வரதரின் தரிசனத்திற்கான நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்திவரதரை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அவசியம் ஆதார்கார்டை கொண்டு வரவேண்டும் என கூறப்பட்டுள்ளது. அத்தி வரதரை வணங்குவதால் மோட்சம் பெறலாம் என்பதால், வாழ்வில் ஒருமுறையேனும் இவரை தரிசிக்க வேண்டும் என பக்தர்கள் அலை மோதுகின்றனர்.
மிஸ் பண்ணிடாதீங்க
48 நாட்களுக்கு பிறகு விடையார்த்தி பூஜைகள் செய்யப்பட்டு அத்தி வரதர் மீண்டும் கோயில் குளத்தில் இறக்கப்படுவார். இதன் பிறகு 2059 மற்றும் 2099 ஆம் ஆண்டுகளில் மட்டுமே இந்த நூற்றாண்டில் காஞ்சி அத்தி வரதர் குளத்தில் இருந்து வெளிவந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். எனவே இப்போது நடைபெறும் அத்தி வரதர் விழா மட்டுமே அனேகமாக இப்போதய நடுத்தர வயதுடைய மக்களுக்கு கிடைக்கும் ஒரே வாய்ப்பு. அத்திவரதரை தரிசித்தால் வைகுண்ட பதவி பெறுவார்கள் என்பது ஐதீகம். மிஸ் பண்ணாம அத்திவரதரை தரிசனம் செய்ய காஞ்சிபுரம் கிளம்புங்க.