வரம் தரும் அத்திவரதர்... உடுப்பி கிருஷ்ணன் சிலையும் அத்திமரத்தில் செய்யப்பட்டதுதானாம்
அத்திவரதரை தரிசிக்க தினசரியும் 2 லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இன்னும் 11 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு காட்சி தருவார் அத்திவரதர். அத்தி மரத்தில் செய்யப்பட்ட சிலைகள் உள்ள பல ஆலயங்கள் இந்தியாவில
மதுரை: அத்தி வரதரைப் போல அத்தி மரமும் வரம் தரும் மரம்தான் காரணம் அத்தி மரம் தத்தாத்திரேயரின் அம்சமாகும். விஷ்ணுவும் இதில் குடியிருக்கிறார். அத்தி ஆறாவது கிரகமான சுக்கிரனின் அம்சமாகக் கருதப்படுகிறது. அசுர குரு சுக்கிராச்சாரியார் அத்தி மரமாக மறுபிறவி எடுத்ததாக சதுர்மாசிய மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. அத்தி மரத்தில் செய்யப்பட்ட வரதராஜரை தரிசனம் செய்ய தினசரியும் 2 லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இன்னும் 11 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு காட்சி தருவார் அத்திவரதர். அத்தி மரத்தில் செய்யப்பட்ட சிலைகள் உள்ள பல ஆலயங்கள் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் உள்ளன.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையிலும் ஆகஸ்ட் 1 முதல் நின்ற நிலையிலும் சேவை சாதித்து வருகிறார். தினம் தினம் ஒரு பட்டுப்புடவையில் அலங்காரமாக காட்சித்தரும் அத்திவரதரை தரிசிக்க இதுவரை 50 லட்சம் பேர் காஞ்சிக்கு வந்து சென்றிருக்கிறதாக புள்ளி விபரம் சொல்கின்றனர்.
அத்தி மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிப்புவைக் கிழித்துக் கொன்று வதம் செய்த பின்னர் அத்தி மரப்பட்டையில் நகங்களைப் பதித்துச் சுத்தப்படுத்திக் கொண்டாராம்.
அத்தி மரத்தின் வலிமை
அத்தி மரம் வலிமையானது. சிலை வடிக்க ஏற்றது. அத்திக்கு நல்ல அதிர்வலைகள் உண்டு. எனவே அத்தி மரப் பலகையில் உட்கார்ந்து தவம் செய்தால் பூமியினுடைய புவிஈர்ப்பு விசை நம்மை அதிகம் தாக்காமல் எந்த மந்திரத்தை உச்சரிக்கிறோமே அந்த மந்திரத்தினுடைய பலன் முழுமையாகக் கிடைக்கும். திருவொற்றியூர், திருக்கானாட்டு முள்ளூர் ஆகிய திருக்கோயில்களில் இரண்டாவது தலவிருட்சமாக அத்திமரம் வணங்கப்படுகிறது.
விஸ்வரூப பெருமாள்
அத்தி வரதரைப் போல உடுப்பி கிருஷ்ணன் சிலை அத்தி மரத்தில் செய்யப்பட்டது. வானமுட்டிப் பெருமாள் ஆலயம் (கோடிஹத்தி) மயிலாடுதுறை அருகே சுமார் 5 கி.மீ. தூரத்தில் கோழிகுத்தி என்ற சிறு கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் மூலவர் அத்தி மரத்தைக் கொண்டு சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. பெருமாள் விஸ்வ ரூபமாக இருந்ததால் வானமுட்டிப் பெருமாள் என பெயர் சூட்டியிருக்கின்றனர்.
அத்திமர சிலைகள்
திருமலையில் தல தீர்த்தமாகிய குளத்திலும் அத்தி வரதர் எழுந்தருளியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் தேவி படவேடு மகாமாயா ரேணுகாம்பாள் அம்மன் முழு உருவச்சிலை அத்தி மரத்தால் ஆனதாம்.
அனந்தரங்கநாதர்
புதுச்சேரியில் சுமார் 200 ஆண்டு பழமையான ராமானுஜர் பஜனை மடத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அனந்தரங்கநாதர் சன்னதி உள்ளது. ஆதிசேஷன் மீது அனந்த சயன கோலத்தில் 6 அடி நீளத்தில் அத்திமரத்தில் அனந்தரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார்.
தம்பதியர் ஒற்றுமை
கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக விரும்பி விலகாமல் இருப்பதற்கும் கடைசி வரையில் பிரியாமல் இருப்பதற்கும் வீட்டில் அத்தி மரம் நட்டு வைத்து பராமரித்து வர நல்ல பலன்கள் உண்டாகும் என்பது ஐதீகம். கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவு, சிக்கல்கள் போன்று இருப்பவர்கள், சுக்ரன் நீச்சமாக, பகையாக இருப்பவர்கள், சுக்ரன் ஜாதகத்தில் கெட்டுப் போய்விடுதல் போன்றவற்றிற்கு நடைமுறைப் பரிகாரம் என்று பார்த்தால் ஒரு அத்தி மரத்தை நட்டு வளர்த்து பராமரித்தாலே தாம்பத்ய சிக்கல்கள் நீங்கும்.
எப்போதும் தரிசிக்கலாம்
சுக்கிர திசையில் பாதிப்பு உள்ளோர், திருமண தடையுள்ளோர் வெள்ளியன்று நெய்தீபம் ஏற்றி அத்திமரத்தில் செய்யப்பட்ட பெருமாளை பிரார்த்தனை செய்தால் பலன் நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிகை. காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க முடியாத பக்தர்கள் புதுச்சேரியில் உள்ள அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். அத்திவரதரின் தரிசனம் இன்னும் 11 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் எனவே பக்தர்கள் கலங்க வேண்டாம். அத்திமரத்தில் செய்யப்பட்ட இந்த தலத்து இறைவனை எப்போதும் தரிசிக்கலாம்.