மகா சிவராத்திரிக்கு சிவாலயங்களில் விடிய விடிய அபிஷேகம்- விழிப்போடு இருந்தால் கிடைக்கும் புண்ணியங்கள்
மகாசிவராத்திரி நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதிகாலை குளித்து விரதத்தை தொடங்க வேண்டும். சிவன் கோவிலில் விடிய விடிய கண் விழித்து இருப்பார்கள். குல தெய்வ கோவிலிலும் சிவ ஆலயங்களிலும் நடைபெறும்
மதுரை: மகா சிவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் சிவ ஆலயங்களில் பிரம்மோற்வ விழாக்கள் களைகட்டியுள்ளன. சிவாலயங்களில் சிவராத்திரி அன்று நான்கு ஜாமப் பூஜைகள் நடைபெறும். வராத்திரி நாளில் பகலில் தொடங்கி இரவு முழுவதும் உணவு எதுவும் உண்ணாமல், உறங்காமல் கண் விழித்து, சிவராத்திரி இரவு முழுவதும் சிவாலயம் அல்லது குலதெய்வம் கோவிலில் பூஜையில் கலந்துகொண்டு, சிவராத்திரிக்கு மறுநாள் பகல் முழுவதும் விழித்திருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே சிவராத்திரி விரதம் இருந்த பலன் முழுமையாக கிட்டும்.
சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும். நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி,பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி எனப்படும். மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. நாளைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும். காரிய வெற்றியும் கிடைக்கும். அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும். பொருளாதார நிலையும் உயரும்.
சிவாலயங்களில் சிவராத்திரி அன்று நான்கு ஜாமப் பூஜைகள் நடைபெறும். ஒரு ஜாமம் என்பது 3 மணி நேரம் ஆகும். தல் ஜாமப்பூஜை என்ற முதல் கால பூஜை சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்
முதல் ஜாமபூஜைக்கு அபிஷேகம்
முதல் ஜாமப்பூஜைக்கு சிவலிங்கத்திற்கு பசும்பால், தேன், பசுநெய், பசும் சாணம், பசு கோமியம் ஆகிய ஐந்தும் கலந்த பஞ்சகவ்யம் அபிசேகம் செய்து, சந்தனப்பூச்சு செய்து வில்வத்தால் அர்ச்சனை செய்து, பச்சைப்பயிறு நைவேத்தியமாக வைக்க வேண்டும். முதல் ஜாமம் முழுவதும் ஓம் நமசிவாய என்ற ஸ்தூல பஞ்சாட்சரத்தை ஜபிக்க வேண்டும்.
வறுமை நீங்கும்
சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய பஞ்ச கவ்யம் அளித்தவர்கள் யாரும் பஞ்சத்தால் வாடமாட்டார்கள். பெரும் புண்ணியம் கிடைக்கும். அவர்களுடைய பிள்ளைகள் நன்றாக வாழ்வார்கள். எதிர்காலத்தில் தங்கள் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாகச் செய்வார்கள்.
பஞ்சாமிருத அபிஷேகம்
இரண்டாம் ஜாமப்பூஜை என்ற இரண்டாம் கால பூஜை இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 மணி வரை செய்வர்கள். சிவலிங்கத்திற்கு பசும்பால், தேன், சர்க்கரை, நெய், தயிர் கலந்த பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து, அகில் குழம்பு பூசி தாமரைப்பூக்களால் அர்ச்சனை செய்து நைவேத்தியமாக பாயாசம் வைக்க வேண்டும். நைவேத்தியத்தை அனைவருக்கும் பகிர்ந்து தரவேண்டும். இரண்டாம் ஜாமம் முழுவதும் சிவாய நம என்ற சூக்சும பஞ்சாட்சரத்தை ஜபிக்க வேண்டும்.
செல்வம் பெருகும்
பால் கொடுத்தால் தாய்ப்பால் இல்லாதவள், தாய்ப்பால் பெறுவாள். சர்க்கரை கொடுத்தவருக்கு சர்க்கரை நோய் வராது. தயிர் கொடுத்தவருக்கு தயிர் திரண்டு உருவாவது போல,செல்வம் பெருகும். லட்சுமிதேவி நம்மைவிட்டு விலகாமல் இருப்பாள். நம்முடைய குழந்தைகள் நற்குணத்துடன் தானாய் வளரும். வீடும் நாடும் சுபிட்சமடையும்.
அபிஷேகம் படையல்
மூன்றாம் ஜாமப்பூஜை என்ற மூன்றாம் கால பூஜை நள்ளிரவு மணி 12.01 முதல் பின்னிரவு 3.00 மணி வரை செய்வர்கள். சிவலிங்கத்திற்கு கொம்புத்தேனால் அபிஷேகம் செய்து, அரைத்த பச்சைக் கற்பூரம் பூசி, வில்வத்தால் அர்ச்சனை செய்து, நைவேத்தியமாக எள் சாதம் படையல் இடவேண்டும். மூன்றாம் ஜாமம் முழுவதும் சாம வேதம் பாராயணம் அல்லது சிவயசிவ காரண பஞ்சாட்சரத்தை ஜபிக்க வேண்டும்.
சிவகடாட்சம் கிடைக்கும்
போகின்ற உயிரை நிறுத்தவும், விரும்பிய துவாரத்தின் வழியாக உயிரைச் செலுத்தவும் வல்லது இந்த சிவயசிவ என்ற மந்திரமாகும். இதில் இரவு 10.54 முதல் நள்ளிரவு 12.24 மணி வரையிலான நேரத்திற்கு லிங்கோத்பவ நேரம் என்று பெயர். இந்த நேரத்தில் சிவயசிவ; சிவயசிவ என்று ஓதுகிறார்களோ, அவர்களுடைய ஆவி பிரிகின்ற போது அளவற்ற சிவகடாட்சம் உண்டாகும்.
முக்தி கிடைக்கும்
நான்காம் ஜாமபூஜை என்ற நான்காம் கால பூஜை பின்னிரவு மணி 3.01 முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை செய்வர்கள். வலிங்கத்திற்கு கரும்புச்சாறு கலந்த அபிஷேகம் செய்து அரைத்த குங்குமப்பூ பூசி வில்வத்தாலும், நீலோற்பவ மலர்களாலும் அர்ச்சனை செய்து, நைவேத்தியமாக சுத்தமான அன்னம் படையல் இடவேண்டும். பச்சரிசி சாதம் வடித்து, அதில் குறைந்தது இரண்டு கரண்டி பசுநெய் விடவேண்டும்; இதுவே சுத்த அன்னம். "சிவசிவ" என்ற அதி சூக்சும பஞ்சாட்சரத்தை ஜபிக்க வேண்டும். ஸ்வர்ண தானம், பூ தானம், கோதானங்களை அன்புடன் செய்ய வேண்டும். அனைவருக்கும் அன்னதானம் போன்ற தான தருமங்களைச் செய்ய வேண்டும். அதுவும் சிவ தலங்களில் அன்னதானம் செய்ய வேண்டும். நான்கு ஜாமப்பூஜையில் கலந்து கொள்பவர்கள் முக்தி அடைவார்கள். அவர்களின் பரம்பரையும் குருவருளோடு சொர்க்கத்தை அடைவார்கள்.