தை பொங்கல் 2020: தை பொங்கல், மாட்டுப்பொங்கல் வைத்து வழிபட நல்ல நேரம்
தை திருநாளில் 15ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை பொங்கல் வைக்க நல்ல நேரமாகும். போகி தொடங்கி தை பொங்கல்,மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் ஆகிய நாட்களில் பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது என பா
மதுரை: பொங்கல் பண்டிகை தமிழ் பாரம்பரியத்தின் அடையாளம். இயற்கைக்கும், உழவுக்கும் தொழிலுக்கும் உதவி செய்யும் கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் விதமாகவும் பொங்கல் பண்டிகை அமைகிறது. கொண்டாட்டங்கள் எப்போதுமே உற்சாகத்தை தரக்கூடியவை, அதுவும் சொந்த பந்தங்கள் இணைந்து கொண்டாடும் பண்டிகைகள் தலைமுறைகளை தாண்டியும் நினைவில் நிற்கும். இந்த ஆண்டு தை பொங்கல் திருநாளான ஜனவரி 15,மாட்டுப்பொங்கல் திருநாளான ஜனவரி 16 பொங்கல் வைத்து வழிபட நல்லநேரம் பஞ்சாங்கத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
தை மாதம் முதல் நாள் அன்று உலகிற்கு வெளிச்சம் கொடுத்து விளைச்சலுக்கு உதவி புரியும் சூரியன், தாய் மண், கால்நடைகள் அனைத்துக்கும் மரியாதை செய்யும் விதமாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. ஜீவராசிகளின் வாழ்வாதத்திற்குத் தேவையான ஜீவனை தரும் சூரியனை போற்றும் விதமாகவும், விளைச்சலுக்கும், உழவுத் தொழிலுக்குத் தேவையான உதவிகளை செய்யும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தை முதல்நாளில் சூரியன் மகரம் ராசிக்குள் நுழைகிறார். இது மகரமாதம். இந்த மாதத்தின் முதல்நாளில் உலகிற்கு ஒளி கொடுக்கும் கதிரவனின் வடதிசை பயணத்தின் துவக்கமும், தென்திசை பயணத்தின் முடிவும் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு தயாராவே ஒரு கலைதான். அறுவடைத்திருநாளான பொங்கல் திருநாளுக்காக 10 நாட்களுக்கு முன்பே வீடுகளுக்கு வெள்ளையடித்து தயாராவது தமிழர் மரபு. வீடுகளை அலங்கரித்து மாவிலை தோரணங்கள் கட்டி, சிறுபீழைப்பூக்கள், கம்பு, ஆவாரம்பூ, வேப்பிலை வைத்து காப்பு கட்டி பொங்கலை வரவேற்பார்கள்.
அறுவடை திருநாள்
ஆடி மாதம் விதை விதைத்து ஆறுமாதங்கள் பயிர்களை கண்போல காத்து அதை அறுவடை செய்கின்றனர் உழவர்கள். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யவே பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொண்டாடப்படுகின்றன. உழவுக்கு உதவி செய்யவும் பருவமழை தவறாது பொழியவும் இயற்கையின் ஆசி தேவை. அந்த இயற்கையை இறைவனாக வழிபட்டு சர்க்கரைப் பொங்கல் வைத்து கொண்டாடுகிறோம்.
நன்றி தெரிவிக்கும் பொங்கல் விழா
சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு உத்தராயணம் என்றும் தெற்கு நோக்கிய நகர்வு தட்சிணாயணம் என்று அழைக்கப்படுகிறது. ஆடி மாதம் முதல் மார்கழி முடிய தட்சிணாயணம். தை முதல்நாள் உத்தராயணத்தின் துவக்கம் ஆனி மாதம் முடியும் வரை உத்தராயணம். பருவமழை பெய்து பயிர் செழிக்க காரணமான இந்திரன், பயிர் நன்றாக வளர்ந்து தானியங்கள் அதிகமாக விளைவதற்கு காரணமான சூரியன், இந்திரனுடைய சகோதரன் உபேந்திரன் ஆகியோர்களுக்கு நன்றி கூறும் விதமாகவும் உத்தராயணத்தின் முதல்நாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகை
போகி பண்டிகை நாளில் நம்முடைய வீடுகளை சுத்தம் செய்து பழையவைகளை ஒழித்துவிட்டு புதியவைகளை வைத்து வழிபடுகிறோம். தை மாதம் முதல்நாளான பொங்கல் நாளில் வீட்டின் நடு கூடத்திலோ, வெளியிலோ அழகான கோலமிட்டு புது அடுப்பு வைத்து புது மண்பானையை அலங்கரித்து கோலமிட்டு கழுத்தில் இஞ்சி கொத்து மஞ்சள் கொத்து கட்டி அடுப்பு மூட்டி புதுப்பானையில் புது பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், நெய் சேர்த்து சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள். பானையில் பொங்கல் பொங்கி வரும்போது 'பொங்கலோ பொங்கல்' என்று உற்சாக குரல் எழுப்பி குலவையிட்டு நம் வளர்ச்சிக்கு காரணமான இயற்கைக்கு படையல் போட்டு செங்கரும்பு வைத்து அலங்கரித்து நன்றி கூறி வழிபடுவார்கள்.
பொங்கல் வைக்க நல்ல நேரம்
ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகை நாளாகும். இது இந்திரனுக்காக கொண்டாடப்படும் பண்டிகை, வீட்டில் உள்ள பழைய பொருட்களை வெளியேற்றிவிட்டு புதிய பொருட்களை வாங்கி வைப்பார்கள். புதிய பொருட்கள் வைத்து பூஜை செய்ய நல்ல நேரம் பகல் 12 மணி பிற்பகல் 2 மணிவரைக்கும்.
பொங்கல் வைக்க நல்ல நேரம்
ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை பொங்கல் வைக்கவும், சூரியனுக்கு படையல் போட்டு பூஜை செய்யவும் நல்ல நேரமாகும். மழை பெய்ய காரணமான இந்திரன், பயிர்களுக்கு உயிர் கொடுத்து வளரக்காரணமான சூரியன், இந்திரனுடைய சகோதரன் உபேந்திரன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கவே பொங்கல் பண்டிகை பொண்டாடப்படுகிறது.
மாட்டுப்பொங்கல்
உழவுக்கும் உழவர்களுக்கும் உதவி செய்யும் கால்நடைகளை குளிப்பாட்டி அலங்கரித்து மாட்டு தொழுவத்தையும் சுத்தம் செய்து அலங்கரித்து மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 16ஆம் தேதி மாட்டுப்பொங்கல் நாளில் பொங்கல் வைக்க நல்ல நேரம் காலை 9.30 மணி முதல் காலை 11 மணிவரை பொங்கல் வைத்து வழிபடலாம். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பொங்கல் வைக்கலாம். வீட்டில் பசுமாடு, ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகள் இல்லாதவர்கள் பசுவுடன் கூடிய கிருஷ்ணபகவனை வழிபடலாம்.