தமிழில் கவிபாட ஆசையா? அப்ப ஆடி ஸ்வாதியில் தோன்றிய விநாயகர் அகவலை படியுங்க!
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: விநாயகர் கோயிலில் நாம் கேட்கும் அகவல் எனும் ஸ்லோகம் ஆடி ஸ்வாதியில் ஔவையாரால் இயற்றப்பட்டது. அனைத்து கோயில்களிலும் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கணீர் "சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு" என்று ஔவையார் பாடிய விநாயகர் அகவலை விநாயகர் கோவிலுக்கு செல்லும்போதெல்லாம் கேட்டிருப்பீர்கள்.
தமிழில் ஆழ்ந்த பொருள் பொதிந்த தித்திக்கும் தேவகானம் அது. இந்த அகவலில் சில வார்த்தைகள் நமக்கு உடனே புரியாது. படிக்கபடிக்க அதன் பொருள் புரியும்.
விநாயகர் அகவல் தோன்றிய கதை:
சமய குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் இப்பூவுலகிற்கு வந்த நோக்கம் முடிந்து கயிலாயத்திலிருந்து வந்த வெள்ளை யானையில் ஏறி கயிலாயம் செல்லலானார். இதனையறிந்த சேரமான் பெருமாள் நாயனார் என்ற சுந்தரரின் உற்ற தோழர் தானும் சுந்தரருடன் கயிலை செல்ல விரும்பி தனது குதிரையில் ஏறி அதன் காதில் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி சுந்தரரை பின்பற்றி அவருடன் கயிலாயம் செல்லலானார்.
இவற்றையெல்லாம் தெரிந்து கொண்ட அவ்வையார் தானும் அவர்களுடன் கயிலாயம் செல்ல விரும்பினார். இதற்காக தான் செய்து கொண்டிருந்த வினாயகர் பூசையை அவசர அவசரமாக செய்யலானார். அப்பொழுது வினாயகர் பெருமான் நேரில் தோன்றி "அவ்வையே ! நீ அவசரப்படாமல் எப்பொழுதும் போல் நிதானமாக உனது பூசைகளைச் செய். அவர்களிற்கு முன்னே உன்னை நான் கயிலாயத்திற்கு கொண்டு சென்று சேர்க்கிறன் " என்று கூறினார். அவ்வையாரும் நிதானமாக பூசைகளைச் செய்து வினாயகர் அகவலையும் பாடினார். வினாயகரும் தான் கூறியபடி அவ்வையாரை தனது தும்பிக்கையினால் தூக்கி சுந்தரரிற்கும்,சேரமானிற்கும் முன்பாக கயிலாயத்தில் சேர்ப்பித்தார். இந்த நிகழ்வு ஆடி சுவாதியில் நடந்ததாக வரலாறு கூறுகிறது.
வினாயகர் அகவல் வினாயகப் பெருமானின் அழகையும் பெருமைகளையும் அற்புதமாக விளக்குவதுடன், யோக முறைகளில் ஒன்றான குண்டலிணி யோகம் பற்றியும் சிறப்பாக விளக்குகிறது. அகவுதல் என்றால் மனம் ஒடுங்கிய நிலையில் ஓதுதல் ஆகும். வினாயகர் அகவலின் மொழி எளிமையும், இசைப் பண்பும், மந்திர ஆற்றலும் மிகவும் சிறப்பானதாகும்.
மொழி எளிமைக்கு எடுத்துக்காட்டாக அகவலின் முதல்வர் வினாயகரை மனம் ஒன்றி இந்த அகவலை ஓதினால் அவரின் தோற்றத்தை நம் கண் முன்னே கொண்டு வரக் கூடிய அளவிற்கு தற்காலத்தில் வழக்கத்தில் உள்ள சொற்கள் கையாளப்பட்டிருக்கிறது. தனக்கு தெரிந்த மொழியில் ஓதுகின்ற பக்தனின் உள்ளத்துடன் ஒன்றி சொற்கள் சொல்லப் பட வாய்ப்புகள் அதிகம். இதனால் மன ஒருமுகப்பாடு சுலபமாக கிடைக்கிறது. இதனையே மாணிக்கவாசகர் "சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிடத்தில் தமிழ் மொழி:
ஜோதிடத்தில் தமிழ் மொழிக்கு காரக கிரகமாக சந்திரனை குறிப்பிடுகிறது பாரம்பரிய ஜோதிடம். ஒருவர் தமிழ் மொழியில் சிறந்து விளங்க சந்திரனின் அருள் பரிபூரணமாக இருக்கவேண்டும்.
சந்திரனின் ஆட்சி வீடான கடகமும் உச்ச வீடான ரிஷபத்தையும் லக்னமாகவோ ராசியாகவோ கொண்டவர்கள் தமிழ் மொழியில் சிறந்துவிளங்குவார்கள். தமிழினால் பிரபலமானவர்கள் ஜாதகங்களில் இந்த அமைப்பை காண முடியும்.
கடகம்-விருச்சிகம்-மீனம் ஆகிய திரிகோன ராசிகளில் பிறந்தவர்கள் தமிழில் சிறந்துவிளங்குவார்கள்.
ரோஹினி, ஹஸ்தம், திருவோணம் நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் தமிழில் சிறந்து விளங்குவார்கள்.
ஜாதகத்தில் சந்திரன்- புதன், சந்திரன் சுக்கிரன் சேர்க்கை உடையவர்கள் தமிழ் புலவர்களாகவும் கவிஞர்களாகவும் எழுத்தாளர்களாகவும் விளங்குவர்.
அனல் தெறிக்கும் தமிழ் பேச்சாளர்கள் மற்றும் வசன கர்த்தாகளின் ஜாதகத்தில் சந்திர மங்கள யோகம் போன்ற சந்திர செவ்வாய் சேர்க்கைகளை காணலாம்.
சந்திரனின் கர்வத்தால் விநாயகரை இகழ்ந்து சாபம் பெற்று பின் அவரிடம் சாப விமோசனம் பெற்றது குறிப்பிடத்தக்கது. எனவே
தமிழ் ஆர்வலர்கள், தமிழில் சிறந்துவிளங்க விரும்புபவர்கள் விநாயகரை அகவல் கூறி வணங்கி வர தமிழ்மொழியில் புலமை கூடும் என்பது நிதர்சனம்.