ஆவணி பவுர்ணமி : வைகுண்டப் பதவி தரும் வெள்ளிக்கிழமை கிரிவலம் - யாகங்கள்
ஆவணி மாதம் பவுர்ணமி தினம் கிரிவலம் வர நல்ல நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை கிரிவலம் வர நன்மைகள் நடக்கும் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருவண்ணாமலை: ஆவணி மாதம் பவுர்ணமி அற்புதமான நாள். வெள்ளிக்கிழமை பவுர்ணமி வருவது கூடுதல் சிறப்பு. இந்த நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் வர நல்ல நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை காலை 8.15 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாளை சனிக்கிழமை காலை 10.20 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும். இதே போல தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் திருமண தடை, குழந்தை பாக்கியம் தடை நீக்கும் பௌர்ணமி யாகங்கள் நடைபெற உள்ளன.
பொதுவாக ஜோதிட சாஸ்திரங்களில் சந்திரன் அம்பாளின் அம்சமாக சொல்லப்படுகிறது.கிரகங்களின் அதிர்ஷ்டம் பெற்ற பவுர்ணமி நாளில் கடல் தன் இயல்பு நிலையில் இருந்து மாறி சீற்றத்துடன் கொந்தளிக்கிறது. சூரியன் இருக்கும் ராசிக்கு ஏழாவது பவுர்ணமி நாளில் ராசியில் சந்திரன் இருந்து இருவரும் பார்த்துக் கொள்வதால் பவுர்ணமி யோகம் உண்டாகிறது.
பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வருகின்றனர். வெள்ளிக்கிழமை கிரிவலம் வர வைகுண்டப் பதவி கிடைக்கும் கிரிவலம் வரும்போது அங்கிருக்கும் சாதுக்களுக்கு தானம் செய்வது சிறப்பாகும். சாதுக்கள் வடிவில் சித்தர்கள் இருக்கலாம். அவர்களுக்கு அன்னதானம் செய்வதால், தானம் கொடுப்பதன் மூலம் நமது பாவங்கள் அகலும். கிரிவலம் செய்தால்தான் முழுமையான பலன் கிடைக்குமென சித்தர்கள் கூறியுள்ளனர்.
தோஷம் நீக்கும் கிரிவலம்
கிரிவலம் வந்தால் பாவங்கள் முழுவதும் நீங்கிவிடும். மேலும் பாவம் செய்யக்கூடாது என்ற எண்ணத்தையும் நமக்குத் தோற்றுவித்துவிடும்.
வயதானவர்களுக்கும் உடல் நலிவுற்றவர்களுக்கும், வலம் வர வேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் .
இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வருடம் முழுவதும் கிரிவலம்
திருவண்ணாமலையில் சித்தர்கள் சூட்சும வடிவில் வலம் வருவதாகக் கூறப்படுகிறது. பவுர்ணமி நாள் அன்று மட்டும்தான் கிரிவலம் வரவேண்டுமா? வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம். பிறந்த நாள், திருமண நாள், மூத்தோர்களின் நினைவு நாள் என்று எந்நாளும் சிவபெருமானை நினைத்து வலம் வரலாம்.
எந்த நாளில் என்ன நன்மை
திங்கட்கிழமை கிரிவலம் வர இந்திர பதவி கிடைக்கும். செவ்வாய்க்கிழமை கிரிவலம் வர கடன், வறுமை நீங்கும். புதன் கிழமை கிரிவலம் வர கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும். வியாழக்கிழமை கிரிவலம் ஞானம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை கிரிவலம் வர வைகுண்டப் பதவி கிடைக்கும். சனிக்கிழமை கிரிவலம் வர பிறவிப்பிணி அகலும். ஞாயிறு கிழமை கிரிவலம் வந்தால் சிவலோக பதவி கிட்டும்.
கிரிவலத்தில் சிவநாமம்
கிரிவலப் பாதையான 14 கி.மீ தூரத்தை பக்தர்கள் நடந்துதான் கடக்க வேண்டும். இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும் . நமசிவாய மந்திரத்தை உச்சரித்தபடியோ, சிவபுராணத்தை பாராயணம் செய்தபடியோ கிரிவலம் வரவேண்டும். அப்பொழுதுதான் கிரிவலம் வருவதற்கான பலனும் புண்ணியமும் சேரும்.
பவுர்ணமி கிரிவலம்
இந்த மாதம் ஆவணி பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை வெள்ளிக்கிழமை காலை 8.15 மணிக்கு பவுர்ணமி தொடங்கி சனிக்கிழமை காலை 10.20 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும்.
கிரகதோஷம் போக்கும்
சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன் என்பதாலேயே பவுர்ணமியில் மனிதர்களின் மனதைப் போல கடலிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
ஸ்ரீசக்கர நாயகியான ஆதிபராசக்தி பதினாறு அம்சங்களாக பவுர்ணமி தினத்தில் மகா திரிபுர சுந்தரியாக அருள்பாலிகிறார் என்பது ஐதீகம்.
வெள்ளிக்கிழமை பவுர்ணமி வருவது கூடுதல் சிறப்பம்சம். கிரக தோஷங்களை நீக்கவும், பில்லி சூனியம் ஏவல் போக்கவும் பவுர்ணமி வழிபாடு அவசியம்.
அம்மனை வழிபடுவதோடு சத்யநாராயணரை வழிபடுவதும் கூடுதல் சிறப்பம்சம்.
தடை நீக்கும் யாகங்கள்
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி உலக மக்களின் நலன் கருதி பௌர்ணமியை முன்னிட்டு வருகிற 13.09.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வரகலா பார்வதி யாகம் மற்றும் தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால ஹோமம் நடைபெற உள்ளது. இந்த யாகங்களில் பங்கேற்பதன் மூலம் தடைகள் நீங்கும் திருமணம் நடைபெறும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று தன்வந்திரி குடும்பத்தினர் கூறியுள்ளனர்.