மதுரை பிட்டுத்திருவிழா கோலாகலம்: பிட்டுக்கு மண் சுமந்த இறைவன்
தன்னையே தஞ்சம் என்று அடைந்தவருக்கு உடனடியாக உதவ வருவேன் என்றும் உணர்த்த இறைவன் ஆடிய திருவிளையாடல் தான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை.
மதுரை: ஆவணி மூலம் திருவிழாவின் முக்கிய அம்சமான பரியை நரியாக்கிய லீலை நேற்று இரவு நடைபெற்றது. இன்றைய தினம் பிட்டுத்திருவிழா புட்டுத்தோப்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஆவணி மாதம் மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 நாட்கள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. எட்டாம் நாளான நேற்று நரிகளை பரிகளாக்கிய லீலை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று புட்டுத்தோப்பில் பிட்டுத்திருவிழா நடைபெற்றது. சுந்தரேசர் பொற்கூடையுடனும் பொன் மண்வெட்டியுடனும் இந்த விழா நாளில் வைகை ஆற்றிலிருந்து பக்தர்கள் சூழ புட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் கோயிலுக்கு எழுந்தருளினார். மதுரை பிட்டுத்திருவிழாவில் பங்கேற்க திருப்பரங்குன்றத்தில் இருந்து வள்ளி தெய்வானை சமேதராக சுப்ரமணியர் எழுந்தருளியிருக்கிறார். திருவிழவை காண திரளான பக்தர்கள் குவிந்திருந்தனர். பக்தர்களுக்கு பிட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
தன்னையே தஞ்சம் என்று அடைந்தவருக்கு உடனடியாக உதவ வருவேன் என்றும் உணர்த்த இறைவன் ஆடிய திருவிளையாடல் தான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூலத்திருவிழாவில் மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
திருவானைக்காவலில் பிட்டுத்திருவிழா
பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த வைபவம் வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த வைபவம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை 5.30 மணியளவில் உற்சவர் ஜம்புகேஸ்வரர் வெள்ளிக்குதிரை வாகனத்திலும், உற்சவர் அகிலாண்டேஸ்வரி பல்லக்கிலும் கோவிலில் இருந்து புறப்பட்டு 6.30 மணியளவில் திருவானைக்காவல் வெள்ளிக் கிழமை சாலை அருகே உள்ள திருமஞ்சன காவிரி கரையை அடைந்தனர். அங்கு திரிசூலத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பிட்டுக்கு மண் சுமக்கும் வைபவம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து உற்சவர்கள் ஜெம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.