ஆவணி ஞாயிறு சூரிய விரதம்: கண் நோய் நீங்கும் - அரசு வேலை கிடைக்கும்
சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிறு விரதம் இருக்க வேண்டும்.
சென்னை: ஆவணி ஞாயிற்றுக் கிழமை விரதம் மேற்கொண்டால் கண் நோய்கள் குணமடையும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே அவர்கள் ஞாயிறுக்கிழமை விரதத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிறு விரதம் இருக்க வேண்டும். ஆவணி ஞாயிறன்று சூரியனை வணங்குவோருக்கு கண் நோய்கள், இருதய நோய்கள் , மஞ்சள் காமாலை, தோல் நோய்கள் நீங்கும். ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி பாதிப்பு நீங்கும். சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும். நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால் புகழ் கூடும்.
ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. ஆவணிமாதத்தில் ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெற்றது. இதனாலேயே அவர்கள் ஞாயிறுக்கிழமை விரதத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் "ஞாயிறு என்றாலே "சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். ஆன்மீக அறிவுக்காகவும் தேகநலனுக்காகவும் சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.
கண் பிரச்சினை தீர்க்கும் சூரியன்
சூரியன் லக்னத்தில் அமைவது கண்களை பாதிக்கும் என்கிறது மருத்துவ ஜோதிடம். சூரியன் மேஷ லக்னத்தில் உச்சம் பெற்று இருந்தால் கண்களில் எரிச்சல் ஏற்படும். மேஷம் செவ்வாயின் வீடு என்பதால் கண்களில் உஷ்ணத்தால் ஏற்படும் எரிச்சல் ஏற்படும். சூரியன் சிம்ம லக்னத்தில் ஆட்சி பெற்று இருந்தால் மாலைக்கண் நோய் ஏற்படும். சூரியன் கடகத்தில் லக்னத்தில் இருந்தால் கண்களில் பீளையும் நீரும் வடியும். மேலும் கண் புரை நோய் ஏற்படும்.
சூரியன் துலா லக்னத்தில் நீசம் பெற்றிருந்தால் பார்வையிழப்பு ஏற்படும். சூரியன் இரண்டாம் வீட்டில் நிற்பது, இரண்டாம் வீட்டில் இரண்டிற்க்கு மேற்பட்ட அசுப கிரகங்கள் நிற்பது, அசுப தொடர்பு பெற்ற சந்திரன் இரண்டாம் வீட்டில் நிற்பது போன்றவை பார்வை இழப்பை ஏற்படுத்தும். சூரியனும் சந்திரனும் இணைந்து இரண்டாமிடத்தில் நிற்பது மாலைகண் நோயை ஏற்படுத்தும். இதுபோன்ற ஜாதக அமைப்பு உடையவர்கள் ஆவணி ஞாயிறு விரதம் இருக்க வேண்டும்.
தோல் நோய் தீர்க்கும் சூரியன்
ஒளி தரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் பகவான் கிருஷ்ணர். கதிர் நிறைந்த ஞாயிறு என்பது ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரியனைக் குறிக்கும். முறைப்படி செய்யும் சூரிய நமஸ்காரத்தால் சரும நோய்களில் இருந்து குணம் பெறலாம். கால புருஷனுக்கு ஆத்ம காரகன் என்பதாலும் உடல் முழுவதிற்க்கும் சூரியன் காரகமாவதால் தொழுநோய்க்கும் சூரியன் முதன்மை காரகம் வகிக்கிறார். வைட்டமின் D க்கு காரக கிரகம் சூரியனாகும். மேலும் நமக்கு தேவையான வைட்டமின் D சூரிய வெளிச்சத்திலிருந்துதான் கிடைக்கின்றது. சூரியன், சுக்கிரன் மற்றும் சனி எந்த ராசியிலும் இணைவு பெறுவது. சூரியனும் சந்திரனும் நீர் ராசியில் இணைந்து நின்றால் ஜாதகருக்கு உடம்பில் வெள்ளை புள்ளிகள் ஏற்படும். சூரியனுக்காக விரதம் இருந்தால் சரும நோய் நீங்கும்.
சூரிய வழிபாடு
தந்தை இல்லாதவர்கள் சூரியனைத் தந்தையாக ஏற்றுக்கொள்கின்றனர். இவர்கள் சூரிய உதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெறலாம். இந்த ஆசியின் பலன் இரட்டிப்பாக வேண்டுமானால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்நாளில், "ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட வேண்டும். எந்த மந்திரமும் தெரியாவிட்டாலும், காலை எழுந்தவுடன் குளித்து விட்டு கிழக்கு நோக்கி "ஓம் நமோ ஆதித்யாய புத்திரி பலம் தேஹிமோ சதா" என்று கூறி மூன்று முறை வணங்கினால் போதும் ஆயிரம் பலன்களை ஆதவன் அள்ளித்தருவான்.
சூரியனின் அருள்
ஞாயிறு அன்று காலை புண்ணிய நதிகளில் குளிப்பதும், சூரிய நமஸ்காரம் செய்வதும், காயத்ரி மந்திரம் சொல்வதும், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரிய ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும், கோதுமை மாவால் செய்த இனிப்பு பண்டங்களை தருவதும், செப்பு பாத்திரத்தில் வைத்து கோதுமையை தானம் செய்வதும், சூரியனின் அருளைப் பெற்றுத் தரும். அந்நாளில் மறக்காமல் புண்ணிய நதிகளில் நீராடி சூரிய நமஸ்காரம் செய்ய .கண்களில் உள்ள கோளாறுகள் விலகும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.
சூரியனை வணங்குங்கள்
ஜாதகத்தில் சூரியனின் நிலையும் திருமணத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவர் சிம்ம லக்னம், ராசி மற்றும் இரண்டும் சேர்ந்தோ ஜாதகத்தில் அமைய பெற்றால் அவர்களுக்கு களத்திர ஸ்தானாதிபதி சனியாக அமைவதால் எளிதில் திருமணம் நடைபெறுவதில்லை. அவ்வாறு நடைபெற்றாலும் சந்தோஷமாக அமைந்துவிடுவதில்லை. களத்திர தோஷம் நீங்கவும், இனிய திருமண வாழ்க்கை அமையவும் ஞாயிறன்று சூரியனை வணங்க சூரிய தோஷம் நீங்கும்.
அரசு வேலை தரும் விரதம்
ஜோதிடத்தில் பத்தாமிடம் இடம் தொழில் உத்யோக ஜீவன ஸ்தானம். அந்த வகையில் பத்தாமிடத்தின் அதிபதி பத்தில் இருந்து சூரியனின் பார்வை சேர்க்கை ஏற்பட்டால் அரசு வேலை கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. கர்மகாரகன் ஜீவனகாரகன் சனைஸ்வரன் அரசாங்க உத்யோக காரகன் சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தால் அரசு வேலை கிடைக்கும். அரசு வேலை கிடைக்க ஆவணி ஞாயிறு விரதம் இருப்பது அவசியம்.
ஆவணி ஞாயிறு நாகர் வழிபாடு
அக்காலத்தில் ஆடிப்பட்டம் தேடி விதைப்பார்கள். ஆவணியில் பயிர்கள் வளர ஆரம்பிக்கும். பூச்சிகள், பாம்புகள் தொல்லை அதிகரிக்கும். இவற்றால் விவசாயப்பணிகளுக்குச் செல்லும் தங்கள் கணவருக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக, ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் அனுஷ்டிக்கும் வழக்கம் உருவானது. ஆவணி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று புற்றுள்ள கோவிலில் பக்தர்கள் பால் ஊற்றி வழிபட்டனர். இன்று விரதம் இருக்க முடியாதவர்கள் இனி வரும் ஞாயிறுகளில் விரதம் இருந்து வழிபடுங்கள்.