திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றம் - 29ல் தேரோட்டம்
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய அம்சமான தேரோட்டம் வரும் 29ஆம் தேதி அதிகாலையில் நடைபெறுகிறது.
திருச்செந்தூர்: சுப்ரமணியசுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் 7ஆம் நாளான 26ஆம் தேதியன்று தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார். 27 செவ்வாய் கிழமை பச்சை சாத்தி கோலத்திலும் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். 29 ஆம் தேதி அதிகாலையில் தேரோட்டம் நடைபெறுகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் மாசி திருவிழாவும், ஆவணித்திருவிழாவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு ஆவணித்திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
ஆவணித்திருவிழா தொடங்கியுள்ளதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது.
எட்டு வீதிகளில் உலா வரும் முருகன்
கொடியேற்றத்திற்குப் பின்னர் சுவாமியும் அம்பாளும் காலை, மாலை நேரங்களில் ஒவ்வொரு வாகனத்தில் 8 வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுகின்றார். சனிக்கிழமையன்று ஐந்தாம் திருநாள் நடைபெறுகிறது. அன்று காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள். பின்னர் மாலையில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனையாகி சுவாமியும், அம்பாளும் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
இந்திர விமானத்தில் உலா
ஆறாம் திருநாள் காலையில் சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து பந்தல் மண்டபம் மத்தியில் சேர்கிறார். இரவு 8 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளித் தேரிலும், அம்பாள் இந்திர விமானத்திலும் எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவிலில் சேர்கிறார்கள்.
சிவப்பு சாத்தி கோலம்
ஏழாம் திருநாள் அதிகாலை 5 மணிக்கு சண்முகபெருமான் உருகு சட்டசேவை நடக்கிறது. 6.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்து மேலக்கோவிலை சேர்கிறார். காலை 9 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் சண்முக விலாசத்தில் இருந்து வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன் கட்டளை மண்டபம் சேர்கிறார். மாலை 4.30 மணிக்கு தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார்.
பச்சை சாத்தி கோலம்
27ஆம் தேதி செவ்வாய்கிழமை எட்டாம் திருநாள் அதிகாலை 5 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் பெரிய வெள்ளி சப்பரத்தில், வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார். காலை 10.30 மணிக்கு சுவாமி பச்சை நிற கடசல் சப்பரத்தில், பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் சேர்கிறார். பின்னர் மேலக்கோவிலில் இருந்து குமரவிடங்க பெருமானும், அலைவாயுகந்த பெருமானும் வெள்ளிக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து நெல்லை ரோட்டில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்தி பின் மேலக்கோவில் சேர்கிறார்.
புஷ்ப சப்பர உலா
29ஆம் தேதி வியாழக்கிழமை 10ஆம் திருநாள் காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும். இரவு சுவாமி, அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி வீதி உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள். 11-ம் திருநாள் இரவு 7 மணிக்கு சுவாமியும், அம்பாளும் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக தெப்பக்குளம் மண்டபம் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள்.
12 நாள் திருவிழா நிறைவு
31ஆம் தேதி சனிக்கிழமை 12ஆம் திருநாள் மாலை 4.30 மணிக்கு மேல் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் வலம் வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் மண்டபம் சேர்ந்து, அங்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் வீதிஉலா வந்து கோவிலை சேர்கிறார்கள். ஆவணித்திருவிழாவை முன்னிட்டு தினசரி கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.