மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா - 23ல் பிட்டுத்திருவிழா
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் ஆவணி மூலத்திருவிழா எனப்படும் பிட்டுத்திருவிழா வருகிற இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மதுரை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் ஆவணி மூலத்திருவிழாவை முன்னிட்டு பிட்டுக்கு மண் சுமந்த லீலை வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. 21 ஆம் தேதி சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நிகழ உள்ளது.
மதுரையை மீனாட்சி அம்மன் கோயிலில் வருடம் முழுவதும் ஏராளமான திருவிழாக்கள் நடைபெறுகின்றன. ஆனாலும் அவற்றில் முக்கியத் திருவிழாவாக சித்திரை திருவிழாவும், ஆவணி மூலத் திருவிழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான திருவிழாவின் கொடியேற்றம் வியாழக்கிழமை தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கொடியேற்றம் தொடங்கி 14ஆம்தேதி வரை காலை, மாலையில் சந்தரசேகரர் உற்சவம் நடைபெறுகிறது. வருகிற 15ஆம் தேதி கருங்குருவிக்கு உபதேசம் நடைபெறுகிறது.
திருவிளையாடல் திருவிழா
நாரைக்கு முக்தியளித்தல், மாணிக்கம் விற்ற லீலை, தருமிக்கு பொறிகிழி வழங்குதல், உலவாக்கோட்டை, பாணனுக்கு அங்கம் வெட்டியது ஆகிய திருவிளையாடல் அடிப்படையிலான விழாக்கள் நடைபெறுகின்றன. ஆகஸ்ட் 20ஆம் தேதி மாலை திருஞானசம்பந்தர் சைவ சமயத்தை நிலைநாட்டிய லீலை நிகழ்த்திக்காட்டப்படுகிறது.
சிவன் ஆட்சி
21ஆம் தேதி சுந்தரேசுவரருக்கு சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் இரவு 7.30 மணிக்கு கும்ப லக்கனத்தில் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
ஆவணி மாதம் முதல் சித்திரை மாதம் வரை இனி மதுரையில் சொக்கநாதர் ஆட்சி நடைபெறும். 22ஆம் தேதி நரியை பரியாக்கிய லீலை நடைபெறுகிறது.
புட்டுத்தோப்பு விழா
விழாவின் முக்கிய நிகழ்வாக பிட்டுக்கு மண் சுமந்த லீலை பூஜையானது 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கோவிலில் இருந்து அன்று காலை புறப்பாடாகும் சுவாமி, அம்மன் மற்றும் திருஞான சம்பந்தர் சுவாமிகள் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள புட்டுத் தோப்பு பகுதிக்கு செல்கின்றனர்.
சுவாமி-அம்மன் கோவிலில் இருந்து புட்டுத் தோப்பு பகுதிக்கு செல்வதை அடுத்து கோவில் நடையானது சாத்தப்படுகிறது.
இறைவன் தரிசனம்
ஆவணி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் ஆரப்பாளையத்தில் உள்ள புட்டு சொக்கநாதர் ஆலயத்தில் புட்டு திருவிழா நடைபெறும். அன்று மட்டுமே இங்கு புட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. அன்றைய தினம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள உற்சவ வந்தியம்மை இங்கு வந்து அலங்காரம் செய்து, முக்தி பெற்று பூப்பல்லக்குடன் மீண்டும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும். இத்திருவிழாவிற்கு திருப்பரங்குன்றத்திலிருந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியரும், மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து பிரியாவிடை, மீனாட்சியுடன் சுந்தரேஸ்வரரும், திருவாதவூரிலிருந்து மாணிக்கவாசகரும் வருகை தருவர் என்பது குறிப்பிடத்தக்கது.