கல்வி வளம் தரும் ஆயுத பூஜை - வெற்றி தரும் விஜயதசமி : பூஜை செய்ய நல்ல நேரங்கள்
நவராத்திரி பண்டிகையின் எட்டாம் நாள் துர்காபூஜையாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒன்பதாம் நாள் சரஸ்வதி பூஜை ஆயுதபூஜையாகவும், பத்தாம் நாள் விஜயதசமியாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சாமி கும்பிட
சென்னை: நம்மை வாழவைக்கும் தெய்வங்களையும் ஆயுதங்களையும் வணங்கும் நாள் ஆயுதபூஜை. கல்விக்கு அதிபதி சரஸ்வதி. ஞானத்தை அருள்பவள் அவளே. அந்த அன்னையை வணங்க நவராத்திரி பண்டிகையின் நவமி நாள் நல்ல நாள். அன்றைய தினம் ஆயுதங்களையும் வணங்குகிறோம். நாம் உபயோகப்படுத்தும் பொருட்கள் மட்டுமின்றி பைக், கார்,சிறுவர்களின் சைக்கிள்கள் வரை பூஜை போட்டு குதுகலிக்கின்றனர். சரஸ்வதி பூஜையையொட்டி, பூஜையறையில் புத்தகம், பேனா போன்றவற்றை வைத்து, சரஸ்வதி அருளை பெற வழிபடுகின்றோம். அதேபோல தீயவை அழிந்து நல்லவை வெற்றி பெற்றதை கொண்டாடும் நாளே விஜயதசமி திருநாளாகும்.
கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்துக்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகையாக நாடு முழுவதும் உற்சாகமாகவும் பக்தி பெருக்குடனும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. முப்பெருந்தேவியரையும் 9 நாட்கள் வழிபடுவதே நவராத்திரி. முதல் 3 நாட்கள் சக்திக்கு உரியதாகவும், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவிக்கு உரியதாகவும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவிக்கு உரியதாகவும் கொண்டாடப்படுகிறது. நாளைய தினம் தொடங்கி சரஸ்வதிக்கு பூஜை செய்யும் நாள் தொடங்குகிறது.
சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை புரட்டாசி 20ஆம் தேதி அக்டோபர் 7 திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. நல்ல நேரம், கெட்ட நேரம் எது என்பதை கோள்களின் நிலைகளை வைத்து பார்த்து, அதற்கேற்ப நல்ல முயற்சிகளை செய்வது மரபு. அதன்படி ஆயுதபூஜை நாளில் வாகனங்களுக்கு பூஜை போடவும், சரஸ்வதி பூஜைக்கான ஆயத்தங்களையும் செய்ய எது நல்ல நேரம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மைசூரூ தசரா: மகிஷாசூரனை போரிட்டு வென்ற சாமுண்டீஸ்வரி
சாமி கும்பிட நல்ல நேரம்
கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாள் சரஸ்வதி பூஜை. கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாக கருதி வழிபடுவதே ஆயுதபூஜையின் ஐதீகம்.
சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை புரட்டாசி 20ஆம் தேதி அக்டோபர் 7 திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. அஷ்டமி முடிந்து நவமி திதி அக்டோபர் 6ஆம் தேதி 10.54 மணிக்கு தொடங்குகிறது. அக்டோபர் 7ஆம் தேதி 12.38 மணிக்கு நவமி திதி முடிவடைகிறது. ஆயுதபூஜை செய்ய நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணிவரை காலை 9 மணி முதல் 9.30 வரை பகல் 12.10 மணிவரை 12.35 மணிவரை பூஜை செய்யலாம்.
ஆயுதபூஜையின் ஐதீகம்
ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இறைவன் அனைத்திலும் நீக்கமறை நிறைந்திருக்கிறான் என்பதை உணர்த்துவதே இதன் ஐதீகம். இதுவரை தொழில் சிறப்பாக நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இனி சிறப்பாக நடப்பதற்கு அருள் வேண்டும் வகையிலும் ஆயுதபஜை கொண்டாடப்படுகிறது. நமது பணி, தொழில், வியாபாரத்துக்கு உதவும் கருவிகள், இயந்திரங்கள், கம்ப்யூட்டர், அக்கவுன்ட்ஸ் புத்தகங்கள் போன்றவற்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மாலையிட்டு அலுவலகங்களில் பூஜைகள் நடத்தப்படும். தொழிலையும் தொழிலாளர்களையும் போற்றும் இப்பண்டிகை இந்தியாவில் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நல்லது வெற்றி பெற்ற நாள்
தீயவை அழிந்து நல்லவை வெற்றி பெற்ற நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரனை அழிக்க சாமுண்டீஸ்வரி அவதாரம் எடுத்தாள். 9 நாட்கள் நீடித்த போர், விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது. தீய சக்தியான மகிஷாசுரனை அன்னை சாமுண்டீஸ்வரி வதம் செய்தாள். நல்ல சக்தியின் வெற்றி திருவிழாவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது என்கின்றன புராணங்கள்.
கற்றுக்கொள்ள நல்ல நாள்
கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை. மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அன்றைய தினம் குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் ‘அ' என்று எழுத கற்றுக் கொடுப்பது 'வித்யாரம்பம்' எனப்படுகிறது.
விஜயன் வெற்றி
பாண்டவர்கள் வன்னிமரத்தில் தங்களுடைய ஆயுதத்தை மறைத்து வைத்துவிட்டு விராட நகரத்தில் அஞ்ஞான வாசம் செய்தார்கள். இதை அறிந்த துரியோதனன் எப்படியாவது பாண்டவர்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் விராட நகரத்தில் இருந்த பசுமாட்டை எல்லாம் சிறைபிடித்தான். இதனால் கோபம் கொண்ட விஜயனான அர்ஜுனன், விராடன் மகன் உத்தரனை முன்னிறுத்தி கொண்டு வன்னிமர பொந்தில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து கௌரவப்படையை வென்றார். தசமி அன்று வென்றதால் ஊர்மக்கள், தசமி அன்று விஜயன் கௌரவப்படையை வீழ்த்தினார். இனி பாண்டவர்களுக்கு வெற்றிதான் என்று பேச ஆரம்பித்தார்கள். அன்றிலிருந்து விஜயதசமி என்ற பெயர் ஏற்பட்டது. இந்த ஆண்டு
விஜயதசமி அக்டோபர் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. முதல்நாள் சாமி கும்பிட்டவர்கள் மறு பூஜை செய்ய நல்ல நேரம் காலை 5 மணி முதல் 6 மணிவரை காலை 10.30 மணி முதல் 11 மணிவரை நல்ல நேரம்.