சபரிமலை ஐயப்பனை ஆண்கள் மட்டுமல்ல எல்லா பெண்களும் தரிசிக்கலாம் எப்போ தெரியுமா
பட்டனம் திட்டா: ஐயப்பன் ஆராட்டு திருநாளில், சபரிமலையில் இருந்து தர்மசாஸ்தா ஐயப்பனின் உற்சவர் சிலை பம்பை ஆற்றுக்கு கொண்டுவரப்பட்டு, ஆராட்டு உற்சவம் நடைபெறும். பின்னர் ஐயப்பனை அலங்கரித்து பம்பை ஆற்றங்கரையில் அமைந்துள்ள விநாயகர் கோவில் முன்பாக 3 மணி நேரம் வரையிலும் வைத்திருப்பார்கள். அப்போது, பாரபட்சமில்லாமல், அனைத்து வயதுடைய பெண்களும் கலந்து கொண்டு பிரம்மச்சாரிய கடவுளான தர்மசாஸ்தா ஐயப்பனை தரிசனம் செய்துகொள்ளலாம்.
வழிபாட்டு தலங்கள் என்பவை, உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன், ஆண், பெண் என்ற எந்தவித பாகுபாடும் இல்லாமல் கடவுளை வழிபடவேண்டும் என்பதற்காகவே வழிபாட்டு முறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. இதில் வெகுசில கோவில்கள் மட்டுமே, ஆண்கள் மட்டும் வழிபடலாம், பெண்கள் வழிபட அனுமதியில்லை என்றும், சில கோவில்கள் பெண்கள் மட்டும் வழிபடலாம், ஆண்கள் வழிபட அனுமதியில்லை என்றும் ஆகம விதிமுறைகள் உருவாக்கப்பட்டு இன்றளவும் நடைமுறையில் இருந்து வருகின்றன.
அதில் முக்கியமானது சபரிமலை ஐயப்பன் ஆலயம். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சிரஞ்சீவியான பரசுராமரால் கட்டப்பட்டு, உருவாக்கப்பட்ட முறையான ஆகம விதிகள் கடுமையாக கடைபிடிக்கப்படும் கோவில் என்ற பெருமை சபரிமலைக்கு உண்டு. அதோடு கோவிலின் மூல விக்ரகமும் பரசுராமரால் உருவாக்கப்பட்டதாகும்.
ஐயப்பன் கோவில் உருவான காலத்திலிருந்தே, இந்த கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் யாரும் தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும், தங்களையும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆண்டாண்டு காலமாக கோரிக்கை வைத்தவண்ணம் உள்ளனர்.
கேரளா அரசும் பெண்களுக்கு ஆதரவாக களமிறங்கியது. இதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதில் வெற்றியும் பெற்றது. சில பெண்களையும் அரசின் பாதுகாப்போடு சபரிமலைக்கு அனுப்பியும் வைத்தது. ஆனால், அங்கிருந்த ஐயப்ப பக்தர்கள் பெண்களை கால் வைக்கவே அனுமதிக்கவில்லை. பெண்களை சபரிமலையில் நுழைந்ததற்கே, தீட்டு பட்டுவிட்டதாக கருதி புனித நீரைக் கொண்டு புனிதப்படுத்தும் சடங்கையும் நடத்தினர்.
பெண்களும், தங்களை சபரிமலையில் அனுமதிக்க வேண்டும் என்று போராட்டமும் நடத்தி பார்த்தனர். ஆனால் பெண்களை அனுமதிக்கும் விஷயத்தில், தேவசம் போர்டு கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை. இவ்வளவு பெருமை வாய்ந்த சபரிமலை ஐயப்பனை அனைத்து வயதுடைய பெண்களும் ஒரே ஒரு நாள் மட்டும் தரிசிக்க முடியும் என்பது பெரும்பாலான பெண்களுக்கு தெரியாது.
சபரிமலையில் மாதந்தோறும் பூஜைகளும், திருவிழாக்களும் நடைபெறுவது வாடிக்கை. அதிலும் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் படி பூஜை, மார்கழி மாதத்தில் நடைபெறும் மண்டல பூஜை, தை மாதத்தில் நடைபெறும் மகர விளக்கு மற்றும் மகர ஜோதி தரிசன நிகழ்ச்சி, பங்குனி மாதத்தில் நடைபெறும் ஐயப்பன் ஆராட்டு விழா. சித்திரை மாதத்தில் நடக்கும் விஷு கனி விழா ஆகியவை மிகப்புகழ்பெற்ற திருவிழாக்களாகும்.
உங்க ஜாதகத்தில் இந்த யோகங்கள் இருக்கா... அப்ப நீங்க அரசியல்வாதியாகலாம்
சபரிமலையில் நடக்கும் மற்ற திருவிழாக்களை விட, பங்குனி ஆராட்டு திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். காரணம் இந்த திருவிழாவில் அனைத்து தரப்பு பெண்களும் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசிக்க முடியும் என்பதால் தான்.
பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறும். அதில் முத்தாய்ப்பாக நடைபெறும் ஐயப்பன் ஆராட்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இது பெண்களும் ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.
ஐயப்பன் ஆராட்டு திருநாளில், சபரிமலையில் இருந்து தர்மசாஸ்தா ஐயப்பனின் உற்சவர் சிலை பம்பை ஆற்றுக்கு கொண்டுவரப்பட்டு, ஆராட்டு உற்சவம் நடைபெறும். பின்னர் ஐயப்பனை அலங்கரித்து பம்பை ஆற்றங்கரையில் அமைந்துள்ள விநாயகர் கோவில் முன்பாக 3 மணி நேரம் வரையிலும் வைத்திருப்பார்கள். அப்போது, பாரபட்சமில்லாமல், அனைத்து வயதுடைய பெண்களும் கலந்து கொண்டு பிரம்மச்சாரிய கடவுளான தர்மசாஸ்தா ஐயப்பனை தரிசனம் செய்துகொள்ளலாம்.
கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களின் போது, கோவில்களில் சிறப்பு அபிஷேம் நடைபெறும். அந்த சமயங்களில் சந்தர்ப் சூழ்நிலை காரணமாக, எத்தனையோ பேர்களால் கோவிலுக்குள் நுழைய முடியாமல் போவதுண்டு. அதற்காகவே திருவிழா நடைபெறும் சமயத்தில் உற்சவர் ஊர்வலம் நடக்கும். அது போலவே ஐயப்பன் ஆராட்டு உற்சவமும் நடைபெறுகிறது என்பது கவனிக்கத்தக்கது.