For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலை மண்டலபூஜை: ஐயப்பன் அணியும் தங்க அங்கி ஊர்வலம் 23ஆம் தேதி தொடங்குகிறது

Google Oneindia Tamil News

பட்டனம் திட்டா: சபரிமலை ஐயப்பனுக்கு மண்டல பூஜை நாட்களில் அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளாவில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று ஊர்வலமாக சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. 426 சவரன் மதிப்பிலான இந்த தங்க அங்கியானது திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மஹாராஜா சபரிமலை ஐயப்பனுக்கு காணிக்கையாக வழங்கியது.

பிரம்மச்சாரிய கடவுளான தர்மசாஸ்தா சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதும் இருந்து மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிக்கொண்டு வருவதுண்டு. ஒவ்வொரு மாதப் பிறப்பு நாட்களிலும், சீசன் சமயங்களிலும் நிற்கக்கூட இடமில்லாமல் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

Ayyappan Thanga Angi procession leaves from Aranmula Parthasarathy Temple on December 23

மாதப்பிறப்பு நாட்களிலும் மற்ற விஷேச நாட்களிலும் ஐயப்பனுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வந்தாலும், மண்டல பூஜை நாட்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். அதை காண்பதற்காகவே பக்தர்கள் அதிக அளவில் வருவதுண்டு.

இந்த ஆண்டு மண்டல பூஜை, படி பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதியன்று சபரிமலை ஐயப்பன் சன்னிதான நடை திறக்கப்பட்டது. நவம்பர் 17ஆம் தேதி முதல் வழக்கமான பூஜைகளுடன், நெய் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள், அபிஷேகம் ஆகியவை நடந்து வருகின்றன.

சீசனை முன்னிட்டு கார்த்திகை முதல் தேதியில் இருந்தே மாலை அணிந்து விரதமிருந்து ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டிக்கொண்டு பதினெட்டாம் படியேறி ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலையில் இந்த ஆண்டு வழக்கம் போல வரும் டிசம்பர் 27ஆம் தேதியன்று மண்டல பூஜை நடக்கவிருக்கிறது. மண்டல பூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் நடைபெறுவதை ஒட்டி, சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

Ayyappan Thanga Angi procession leaves from Aranmula Parthasarathy Temple on December 23

426 சவரன் மதிப்பிலான இந்த தங்க அங்கியானது திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மஹாராஜா சபரிமலை ஐயப்பனுக்கு காணிக்கையாக வழங்கியது.

இந்த தங்க அங்கியைத் தான் ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜையின் போது சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். தங்க அங்கியானது பட்டனம் திட்டா மாவட்டத்திலுள்ள ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Ayyappan Thanga Angi procession leaves from Aranmula Parthasarathy Temple on December 23

இந்த ஆண்டு மண்டல பூஜையின்போது அணிவிப்பதற்காக, வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று ஆரன்முளா பார்த்தசாரதி கோவில் இருந்து, பாதுகாப்புடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து ஊர்வலமாக சபரிமலை சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பார்த்தசாரதி கோவிலில் காலை 7 மணியளவில் புறப்படும் தங்க அங்கி ஊர்வலம் வழியில் ஓமல்லூரிலும். மறுநாள் இரவு கோண்ணியிலும். 25ஆம் தேதி இரவு பெரிநாட்டிலும் தங்கி, 26ஆம் தேதியன்று பம்பையிலுள்ள கணபதி ஆலயத்திற்கு வந்து சேரும்.

பின்னர் அங்கிருந்து மேளதாளம் முழங்க ஐயப்ப பக்தர்களின் தலைச்சுமையாக தங்க அங்கியானது சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்படும். 26ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேரும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். பின்னர் 18ஆம் படிக்கு கீழ், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி ஆகியோரிடம் ஒப்படைக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து, தங்க அங்கியானது 18ஆம் படி வழியாக கொண்டு செல்லப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். பின்பு மாலை 6 மணிக்கு ஐயப்பனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். பின்னர் வழக்கமாக நடைபெறும் பூஜைகளுடன் இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

மீண்டும் 27ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் ஐயப்பன் சன்னிதான நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடைபெறும். அதோடு அன்றைய தினம் காலை 9 மணி வரையில் மட்டும் நெய் அபிஷேகம் நடைபெறும். அதைத் தொடர்ந்து முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் களபாபிஷேகத்திற்கு பின் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜைகள் நடைபெறும்.

தங்க அங்கி ஊர்வலம் வரும் பாதைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதோடு ஊர்வலம் வரும் பாதையில் பாதுகாப்பும் பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

English summary
The 426 sovereign Thanga Angi, which is worn for the Sabarimala Ayyappan during the Mandala Pooja day on December 27, is being carried on the decorated vehicle from the Parthasarathy Temple at Aranmula on 23rd December.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X