பக்ரீத் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்: கடையநல்லூரில் சிறப்புத் தொழுகை - குர்பானி
தென்காசி: தியாகம் செய்தல் ஏழைகளுக்கு உணவை பகிர்ந்து அளித்தல் என்பதை உணர்த்தும் பண்டிகைதான் தியாகத்திருநாளாம் பக்ரித். இன்றைய தினம் பக்ரித் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதிகாலை முதலே சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட மக்கள் ஏழைகளுக்கு இறைச்சி, உடைகள் அரிசி போன்றவைகளை தானமாக கொடுத்து பண்டிகையை கொண்டாடினர்.
ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12வது மாதமான துல் ஹஜ்ஜின் 10வது நாளில் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் அடிப்படை கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம் செய்வது. இதன் இறுதியில் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனுக்கு பலியிட வேண்டும். இவ்வாறு செய்து கொண்டாடுவதை பக்ரீத் என்கின்றனர். இதனை தமிழில் தியாகத் திருநாள் என்றும் அழைக்கின்றனர்.
இன்றைய தினம் பக்ரித் பண்டிகையை முன்னிட்டு தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆறு இடங்களில் பெருநாள் தொழுகை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கடையநல்லூரை சார்ந்த இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்,சிறுமியர்களும் குளித்து விட்டு அதிகாலை 6 மணிமுதலே காயிதேமில்லத் திடலே நோக்கி வரத் தொடங்கினர்.
பக்ரித் பண்டிகை தொழுகை
சரியாக 06.30 மணியளவில் பெருநாள் தொழுகையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மை குழு உறுப்பினர் அப்துன்நாசிர் நடத்தினார். திடல் நிரம்பியதை தொடர்ந்து மணிக்கூண்டு, பெரியதெரு, புதுத்தெரு, மெயின்ரோடுகளில் ஆண்களும் பெண்களும் நின்று தொழுகையை நிறைவேற்றினர்.
சிறப்புத் தொழுகை
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஷாகுல்கமீது, ஹாஜாமைதீன், ஹைதர் அலி, அப்துல் பாசித், செய்யது மசூது , பஜார் கிளை தலைவர் சுலைமான், ஆகியோர் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை டவுன் கிளை சார்பில் தொண்டரணினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
இறை பணி
அதை தொடர்ந்து அப்துன்நாசிர் மக்களுக்கு ஆற்றிய உரையில் இறை நம்பிக்கை மனிதனை நல்லவனாக ஆக்குவதற்கு உதவியாக இருக்கின்றது. இறை தூதர்கள் உலகில் இறைவனுடைய இறை பணிகளை நடைமுறை படுத்துவதற்காகவே இறைவன் அனுப்பினான் இதில் முக்கிய பங்கு ஆற்றியவர்களில் இப்றாகீம் நபி.
ஆடு மாடு பலி
அவர் தன் மகன் இஸ்மாயிலை இறைவனுக்காக அறுத்து பலியிட முயன்ற போது இறைவனுக்கு மனிதர்களை நரபலி கொடுப்பது கூடாது என்பதற்காக. அதற்கு பகரமாக இஸ்லாமியர்கள் ஆடு,மாடு, ஒட்டகம் போன்ற பலி பிராணிகளை அறுத்து இறைவனுக்காக பலியிடுகின்றார்கள் என்றார்.
தொழுகையில் 10ஆயிரம் பேர்
இது போன்று பேட்டை கிளை சார்பில் மர்க்கஸுந் நூர் தவ்ஹீத் திடலில் முகம்மது தாஹா, ரஹ்மானியாபுரம் 3வது தெரு மர்யம் பள்ளி திடலில் நெல்லைபைசல் ,மக்காநகர் 8வது தெரு தவ்ஹீத் திடலில் ஷெரீப் , தவ்ஹீத் நகர் அல் ஹிதாயா திடலில் அப்துல் குத்தூஸ் , இக்பால் நகர் தெப்பதிடலில் முகம்மது ஆகிய 6 இடங்களில் பெருநாள் தொழுகை நடை பெற்றது. இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஹஜ் பெருநாள் தொழுகை
அதை போல் நெல்லை மேற்கு மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தென்காசி, பொட்டல்புதூர், முதலியார்பட்டி, செங்கோட்டை, அச்சன்புதூர் வடகரை, வீரணம் ,சங்கரன்கோவில் , புளியன்குடி ,வாசுதேவநல்லூர், திரிகூடபுரம் உட்பட முஸ்லிகள் அதிகம் வசிக்கும் 30 க்கும் மேற்பட்ட ஊர்களில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடையநல்லூர் தாசில்தார் அழகப்ப ராஜா மேற்பார்வையில் புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையில் காவல் ஆய்வாளர் கோவிந்தன், உதவி ஆய்வாளர் விஜய்குமார் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
ஏழைகளுக்கு குர்பானி
தொழுகைக்கு பிறகு கடையநல்லூர் பகுதியில் ஆயிரக்கானக்கான ஆடுகளும், மாடுகளும் அறுத்து பலியிட்டு அதன் இறைச்சியை ஏழைகளுக்கு வீடு தேடி வினியோகம் செய்தனர்.