சிறை செல்லும் தோஷம் யாருக்கு வரும் - பரிகாரம் என்ன?
கோடி கோடியாய் கடன் வாங்கியவர்களும், படுகொலைகளை செய்தவர்களும் கூட ஜெயிலுக்கு செல்லாமல் இன்றைக்கு தப்பித்து விடுகின்றனர். செய்யாத குற்றத்திற்காக பலர் சிறைக்கு செல்கின்றனர்.
சென்னை: என்னைய ஜெயில்ல போடுங்க சார் என்று வாலண்டியராக போய் ஒருநாள் ஜெயிலில் தங்கி பரிகாரம் செய்துள்ளார் ஒரு தொழிலதிபர். இது நம்ம தமிழ்நாட்டில் இல்லை, உத்திரபிரதேசத்தில்தான் இது நடந்துள்ளது. காரணத்தை கேட்டால் அவருக்கு சிறை தோஷம் இருப்பதால் ஜோதிடரின் ஆலோசனைப்படி சிறைக்கு போய் பரிகாரம் செய்திருக்கிறார். ஒருவரின் ஜாதகத்தைப் பார்த்தே அவருக்கு சிறை செல்லும் அமைப்பு இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம்.
ஜாதகத்தில் 6 ம் இடத்தில் லக்னாதிபதி மறைவு பெற்றால் அந்த ஜாதகர் தன்னுடைய ஊர் மட்டுமே அன்றி மாவட்டம் மாநில அளவில் புகழோடு இருப்பார்கள். ஆனால் அதே ஆறாம் இடத்தில் லக்னாதிபதி உடன் பாவர்கள் சேர்க்கை இருக்க அந்த சேர்க்கைக்கு பெயர் பந்தன யோகம் எனப்படும். இது சிறைபடும் யோகம் ஆகும். இதுபோன்ற அமைப்புகள் இருக்கப் பெற்ற ஜாதகர்கள் ஏதேனும் ஒரு வழக்கு விஷயங்களில் சிக்கி ஒரு தினம் ஆவது சிறைச்சாலையில் உறங்கி மீண்டும் ஜாமீனில் வரும் நிலையை தருகிறது.
உத்திரபிரதேச தொழிலதிபரின் சிறை பரிகாரம்
உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ரமேஷ் சிங். 38 வயதான இவர் ஒருநாள் தனது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு போய் குடும்ப ஜோதிடரிடம் காட்டியிருக்கிறார். அதைப்பார்த்த அந்த ஜோதிடரோ, உன்னுடைய ஜாதக கட்டத்தில் கிரகங்களின் பார்வை சேர்க்கை சரியில்லையே, ஜெயிலுக்கு போக வேண்டிய அமைப்பு இருக்கே என்று கூறியிருக்கிறார்.
இதைக்கேட்ட ரமேஷ் சிங் குடும்பத்தினருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அதற்கு பரிகாரம் இருக்கிறதா என்று அந்த ஜோதிடரிடமே கேட்டிருக்கின்றனர். அதற்கு அந்த ஜோசியரோ, ஒருநாள் முழுவதும் சிறையில் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும் தோஷம் நீங்கிவிடும் என்று பரிகாரம் சொல்லியிருக்கிறார்.
இதனையடுத்தே ஒரு நாள் சிறையில் இருக்க அனுமதி கேட்டு தனது ஜாதக நகலுடன் மற்ற விவரங்களை இணைத்து மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார் ரமேஷ் சிங். சிறை நிர்வாகத்தினரும் அனைத்தையும் ஆராய்ந்த பிறகு சிறையில் தங்க அனுமதி அளித்தனர். ரமேஷ் சிங் சிறையில் இருந்தபோது அங்கு கைதிகளுக்கு தரப்படும் உணவையே சாப்பிட்டிருக்கிறார்.
மாவட்ட ஆட்சியர் விளக்கம்
இது எப்படி சாத்தியம் என்று மாவட்ட ஆட்சியர் சௌசல் ராஜ் சர்மா விளக்கம் அளித்திருக்கிறார். ஜாதகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உதவுகிறது. இது போன்று வருடத்துக்கு 24 விண்ணப்பங்கள் வருகிறது, அதில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் சிறையில் இருக்க அனுமதிக் கேட்கப்படும். நாங்கள் விண்ணப்பதாரரின் முழு விவரம் மற்றும் ஜாதகத்தையும் ஆராய்ந்த பின்னரே அவர்களுக்கு அனுமதி வழங்குகிறோம். எந்த தவறும் செய்யாமல் சிறையில் அடைக்கச் சட்டத்தில் இடமில்லை. எனினும் அவர்களுடைய சொந்த விருப்பத்தின் படியே கோரிக்கையை ஏற்கிறோம். இது முற்றிலும் மதரீதியிலானது மட்டுமே என்கிறார் ஆட்சியர்.
சிறை செல்லும் ஜாதக அமைப்பு:
குறுக்கு வழியில் செல்வம் சேர்ப்பவர்கள், திருடர்கள், கொலை செய்பவர்கள், மோசடி செய்பவர்கள்தான் சிறைக்கு செல்வார்கள். சிறை செல்லும் ஜாதக அமைப்பு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். ஜோதிட சாஸ்திரம் இந்த பந்தன யோகத்தைப் பற்ரி நிறைய சொல்லி இருக்கிறது. ஒரு ஜாதகத்தில் உள்ள 12 பாவங்களுமே ஏதோ ஒரு விதத்தில் இந்த பந்தன யோகத்திற்கு காரணமாகின்றது. முக்கியமான பாவங்கள் 6, 8 12.
• லக்னாதிபதியும் 6 ம் அதிபதியும் சேர்ந்து கேந்திரம் அல்லது திரிகோணத்தில் சனியுடன் சேர்ந்து அமர்ந்து ராகுவால் பார்க்கப்பட்டாலும் (கேதுவுடன் சேர்ந்து அமரும் நிலை) பந்தன யோகம் ஏற்படும். 9 ம் பாவத்திலும் 10 ம் பாவத்திலும் தீயவர் வாசம் செய்து சுபர் தொடர்பு இல்லாமல் இருப்பின் அங்கு பந்தன யோகம் ஏற்படும்.
•ஒருவருடைய ஜாதகத்தில் 8ஆம் இடத்தில் ராகு இருந்தால் அவர் சிறை செல்வார். மேலும், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. அதே ராகு 12ஆம் இடத்தில் இருந்தால் பலமுறை சிறை செல்ல வேண்டி வரும் எனத் தெரிவித்துள்ளார்.
• 2-12 ம் பாவங்களில் தீய கிரகங்கள் அமர்ந்து அவை வேறு தீய கிரகங்களால் பார்க்கப்பட்டால் பந்தன யோகம் ஏற்படும். 4 ம் பாவத்தில் சூரியன் அல்லது செவ்வாய் அமர்ந்து 10 ல் சனி அமர்ந்தாலும் அல்லது 10 ம் பாவத்தை சனி பார்த்து 4 ம் வீட்டை சூரியன், செவ்வாய் பார்த்தாலும் பந்தன யோகம் ஏற்படும்.
•ஒருவரது ஜாதகத்தில் ஆறாம் அதிபதி பாவியாக வந்து தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் சம்பந்தப்படுமானால் அரசுக்கு விரோதமான தொழில் ஈடுபட்டு குறைவான காலத்தில் பொருள் சேர்ப்பார்கள்.
•பத்தாமிடத்தை சனி,செவ்வாய் சேர்ந்து பார்க்கப்படும்போது சட்ட விரோத தொழிலில் ஈடுபட்டு சனி திசை செவ்வாய் புத்தி அல்லது செவ்வாய் திசை சனி புத்தி நடக்கும் காலங்களில் சிறை செல்ல வேண்டியிருக்கும்.சுபர் பார்வை ஏற்பட்டால் தண்டனை குறையலாம்.
•ஒருவரது ஜாதகத்தில் இரண்டு ,பணிரெண்டாமிடங்களில் பாவிகள் இடம்பெறுவதும், இவர்களுடன் லக்னாதிபதி இவ்விடங்களில் அமர்வதும் சிறை செல்லும் அமைப்பை தரும்.
•தனகாரகனான குரு பகவான் ஏழு மற்றும் பத்தாம் அதிபதியாகி நீசம் பெற்று தனஸ்தானத்தில் இருப்பதும்,இரண்டாம் பாவத்திற்கு ராகு ,கேது சம்பந்தம் சிறை செல்லும் யோகத்தை உண்டாக்கும்.
•ஆறு,எட்டு மற்றும் ஜீவனஸ்தானம் போன்ற இடங்களை உச்ச வக்கிரம் பெற்ற குருபகவான் பார்வை பெறுவதும் குறுக்கு வழியில் பணம் ஈட்ட செய்யும்.
• குருவோடு ராகு அல்லது சனி பகவான் சேர்ந்து "குரு சண்டாள யோகம் பெற்றவர்களும் ஆன்மிக நாட்டம் குறைந்து காணப்படுவதோடு தவறான வழியில் ஈடுபட வைக்கும்.
•ஒருவருக்கு சுபர் பார்வையில்லாத அட்டமாதிபதியின் திசையோ அல்லது அட்டம சனி நடைபெறும் காலங்களில் எச்சரிக்கையாக இருத்தல் நலம்.இல்லையெனில் வீண் வம்புகளில் ஈடுபட்டு சிறை செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
• பத்தாமிடத்தில் சனி,செவ்வாய் மற்றும் ராகு சேர்க்கை மற்றும் சம்பந்தபட்டவர்கள் அரசுக்கு விரோத தொழில் ஈடுபட்டு அதனால் சிறை செல்லும் வாய்ப்பு உருவாகலாம்.
• லக்னம் ஆயுத, சர்ப்ப அல்லது பாச திரேக்காணத்தில் விழுந்தால் ஜாதகருக்கு பந்தன யோகம் ஏற்படும். விருச்சிக லக்னத்தாருக்கு 2, 5, 9 பாவங்களில் தீயவர் அமர்ந்து சுபர் பாதிப்பு எதுவும் இல்லை என்றால் அவருக்கு பந்தன யோகம் ஏற்படும்.
நம் ஊரில் அரசியல்வாதிகள் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டு அவ்வப்போது சிறைக்கு செல்கின்றனர். இதெல்லாம் சிறைதோஷத்தை கழிப்பதற்கான பரிகாரம் என்று எத்தனை பேருக்கு தெரியும். உங்க ஜாதக அமைப்பு இப்படி இருந்தால் நீங்களும் பரிகாரம் பண்ணிடுங்க. செய்யாத தவறுக்கு கம்பி எண்ணுவதில் இருந்து தப்பிக்கலாம்.