புதன் ஜெயந்தி 2019: உங்க பிள்ளைங்க புத்திசாலியாக மாற புதனை வணங்குங்க
புதன் மகா விஷ்ணுவின் அம்சம். கிரகங்களில் புதன் உடற்கூறு இயக்கத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சூரியனிடமிருந்து அதிகமாக ஒளியை பெறும் கிரகம் புதன். இது அலி கிரகம்.
மதுரை: மனிதனின் மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு புதன் ஆதிபத்யம் வகிக்கிறார். புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். ஒருவரது ஜாதகத்தில் புதன் யோகம் பெற்றிருந்தால் அவர் அறிவிலும், புத்திக்கூர்மையிலும் சிறந்து விளங்குவார். அவரை உலகமே திரும்பிப் பார்க்கும்.
புத் என்ற வடமொழிச் சொல்லின் பொருளே அறிதல் என்பதுதான். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது பழமொழி. புதன் கிரகம் அறிவுத் தெய்வம். புதனை வணங்க அறிவு அதிகமாகும். புதன் என்றாலே புத்திக் கூர்மை ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக அமையப்பெற்றவர் புத்திக்கூர்மை மிக்கவர், ஞாபக சக்தி அதிகம் இருக்கும்.
புதன் பலம் பெற்றவர் பேச்சில் வல்லவர், எந்த நேரமும் கலகலப்பாகவும், நகைச்சுவையாகவும் பேசும் இவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். பெரிய விஞ்ஞானி, மேதைகளாக வருவார்கள், தன் திறமையால் பெரும் பொருட்கள் சேர்ப்பார்கள். புதன்கிழமையான இன்று புதன் ஜெயந்தி தினமும் ஆகும் இந்த நாளில் புதன் பகவானைப் பற்றி அறிந்து கொள்வோம்.
நரசிம்மர் ஜெயந்தி 2019: கடன் பிரச்சினை தீர்க்கும் லட்சுமி நரசிம்மர் ஹோமம்
ஆட்சி நாயகன் புதன்
மிதுன, கன்யா ராசிகளின் அதிபதி புதன். கன்னியில் உச்சமைடைகிறார் மீனம் ராசியில் நீசமடைகிறார். கையில் புத்தகம் ஏந்தி இருக்கும் இவருக்கான கடவுள் விஷ்ணு. தானியம் பயறு, மலர் வெண்காந்தள் மலர். ராசிக்கல் மரகதம். நான்கு கரங்கள் உடைய புதன், மஞ்சள் ஆடை அணிந்து தங்க ஆபரணங்கள் பூட்டி, சிம்ம வாகனத்தில் வலம் வருபவர். பச்சை நிறம் பிடித்தமானது. பூமியில் பயிர்களுக்கு எல்லாம் பசுமை தரும் கிரகம் புதன். வியாபாரத்தில் வெற்றி, தர்க்க சாஸ்திரத்தில் வல்லமை, கல்வி மேன்மை எல்லாம் வழங்குபவர்.
வித்தைக்காரகன் புதன்
மிதுன லக்னத்துக்கு லக்னாதிபதி புதன் லக்னத்தில் இருந்தாலும், உச்ச வீடான கன்னியில் இருந்தாலும் உயர் கல்வி, சொந்த வீடு, வசதியான வாழ்க்கை போன்ற யோக பலன்கள் ஜாதகருக்கு உண்டாகும். புதிய வித்தைகளில் ஜொலிப்பார். வாதம் விவாதங்களில் யாரும் இவரை வெல்லுவது கடினம், நகைச்சுவை உணர்வு, காதல் உணர்வும் மிக்கவர், சுக்ரனோடு சேரும் போது வலிமை மேலும் அதிகரிக்கும்.
புகழ் வெற்றி கிடைக்கும்
கன்னியில் இருக்கும் போது புதன் உச்ச பலமும் பெறுகிறார் சாமர்த்தியசாலி சூழலுக்கு ஏற்ற காரியங்களை செய்து வெற்றியும், புகழும் பெறுவார். தன் திறமையால் பெரும் பொருட்கள் சேர்ப்பார்கள், வியாபாரத்திலும் வல்லவர், வாழ்க்கையை நன்கு அனுபவித்து வாழ்வார். கணிதம், ஜோதிடம், புத்தகம், விளம்பரம், எழுத்தாளர்,ஓவியம், சிற்பம்,தகவல் தொடர்பு துறைகளில் ஜொலிப்பார்.
நோய்கள் பாதிப்பு
புதனுக்கு வக்ரம், அஸ்தங்கம், நீச்சம் போன்ற பலம் குறையும் கால கட்டங்கள் உண்டு. இந்தக் கால கட்டத்தில் பிறந்த குழந்தைகள் புதனின் ஆற்றலை குறைவாக பெற்றிருப்பார்கள். புதன் வக்ரமாக இருக்கும் காலங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடாது. புதன் பாதிக்கப்பட்டால் நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை, வலிப்பு நோய்கள், கிறுகிறுப்பு, தலைச்சுற்றல், தலைவலி, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், ஞாபக மறதி, உணர்ச்சியற்றுப்போதல், கை, கால்கள் மரத்துப்போகும்.
நரம்பின் நாயகன்
நரம்பு மண்டலத்திற்கு காரகனான புதன் ஜாதகத்தில் பலமிழந்து பாவிகளின் சேர்க்கை, அல்லது பாவிகளின் பார்வை பெற்றால் தலையில் இரத்த ஒட்டம் பாதிக்கும். மூளையில் கட்டி, அடிக்கடி தலை வலி ஏற்படும் அமைப்பு உண்டாகும். புதன் மற்றும் சனி சேர்க்கை பெற்று சுப கிரக சேர்க்கை பார்வை இன்றி சனி பலம் இழந்து புதனுடன் இணைந்தாலும், மனக்கவலை, அச்சம், மனச்சோர்வு உண்டாகும். தலை வலியால் சோர்வு, தூக்கமின்மை, நரம்பு தளர்ச்சி, வலிப்பு நோய் உண்டாகும்.
புதன் கெட்டுப்போனால்
புதன் சமநிலை கிரகம். இந்தக் கிரகம் ஒருவரை நல்ல வழியிலும் செலுத்தும், தீய வழியிலும் கொண்டு செல்லும். ஜாதகத்தில் புதன் பலம் இழந்திருந்து பாவிகள் சேர்க்கை பெற்றால் மூளையில் கோளாறு, நரம்பு மண்டலம் பாதிக்கும் அமைப்பு உண்டாகும். ஒருவர் ஜாதகத்தில் புதனுடன் நீசக் கிரகங்கள், வக்ர கிரகங்கள், பாவகிரகங்கள், 6, 8, 12ம் இட ஆதிபத்யம் பெற்ற கிரகங்கள் சேர்ந்தாலோ பார்த்தாலோ ஜாதகரின் புத்தி, ஆற்றல் எல்லாம் தீயவழிகளில் செல்லும். ஜாதகத்தில் புதன் கிரகம் செவ்வாய் உடன் 6,8,12ஆம் இடத்தில் இணைந்திருந்தால் ஒய்வில்லாத பணி, யோசனையால் தலைவலி, எரிச்சல், கோபம் ஏற்படும்.
தனிமையில் சுயஇன்பம் காணும் ஆவலை தூண்டும் கிரகம் புதன் ஆகும். ஓரினச் சேர்க்கைகள் மூலம் உண்டாகும் நோய்கள், பறவைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் மூலம் உண்டாகும் நோய்கள், விஷ வாயு தாக்கி கை, கால்கள் செயல் இழப்பு மற்றும் மூளை துக்கும் புதனே காரணமாக திகழ்கிறார்.
மதுரை மீனாட்சியம்மன்
மதுரை மீனாட்சியம்மன் புதன் தலம் என்றாலும் நாகை மாவட்டத்தில் உள்ள திருவெண்காட்டில் புதனுக்கான ஆலயம் உள்ளது. திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ள சிவனின் பெயர் சுவேதாரண்யேச்வரர். அம்பாளின் பெயர் பிரும்மவித்யாம்பிகை. இத்தலம் சீர்காழியில் இருந்து தரங்கம்பாடி செல்லும் வழியில் உள்ளது. கல்வியிலும் புத்திசாலித்தனத்திலும் சுமாராக இருக்கும் பிள்ளைகளை இங்கு அழைத்து சென்று வணங்கி வரலாம்.