குழந்தை வரம் தரும் சஷ்டி விரதம் - சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
முருகப்பெருமானுக்காக அவரது பக்தர்கள் மேற்கொள்ளும் விரதங்களில் முதன்மையானது சஷ்டி விரதம். சஷ்டி விரதம் இருந்தால் கவலைகள் நீங்கும் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சென்னை: 'சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்பார்கள். முருகனுக்கு உகந்த சஷ்டி விரதம் இருந்தால் அந்த முருகனே கருப்பையில் பிள்ளையாய் வளர்வான் என்பதைத்தான் அப்படி கூறியிருக்கின்றனர். முருகனுக்கு உகந்த விரதங்களில் சஷ்டி விரதம் முதன்மையானது. இன்று தேய்பிறை சஷ்டி முழுநாள் உள்ளது. இன்று சஷ்டி விரதம் இருக்க முடியாதவர்கள் மாலையில் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் படிங்க கவலைகள் காணாமல் போகும்.
ஐப்பசி மாதம் வளர்பிறையில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சூரபத்மனை வதம் செய்த விழா திருச்செந்தூரில் கொண்டாடப்படுகிறது. மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை சஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு கவலைகள் தீரும் திருமண பாக்கியம் கைகூடும், பிள்ளை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கந்தன் நம் கவலைகளை தீர்ப்பவன். கந்தனை நினைத்து விரதம் இருந்தால் கவலைகள் பறந்தோடும். முருகனுக்கு உரிய விரதம் சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், சஷ்டி விரதம். இந்த விரதங்களில் முதன்மையானது கந்த சஷ்டி விரதம். சஷ்டி விரதம் இருந்தால் துன்பங்கள் நீங்கும், வேலைவாய்ப்பு பெருகும் கடன் தொல்லைகள் நீங்கும்.
சஷ்டி தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு வீடு முழுவதுமோ அல்லது வீட்டின் பூஜை அறையை மட்டுமோ சுத்தம் செய்ய வேண்டும். பின்பு பூஜையறையில் முருகன் படத்திற்கு முன்பு தீபமேற்றி, தூபங்கள் காட்டி, பால்,பழம் நிவேதனம் செய்ய வேண்டும்.
காலையிலிருந்து சாப்பிடலாமல் பூஜையறையில் சஷ்டி கவசம், ஸ்கந்த குரு கவசம் படிக்கலாம். வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள், ஓம் முருகா என்று மனதிற்குள் ஜபித்தவாறு தங்கள் வேலையில் ஈடுபடலாம். இந்த விரதம் இருப்பவர்கள் மாமிசம் சாப்பிடக்கூடாது. நல்லதை நினைத்து நல்லதையே பேச வேண்டும்.
நல்ல உடல்நிலைக் கொண்டவர்கள் முடிந்தால் மூன்று வேளை சாப்பிடாமல் இருக்கலாம். இல்லாவிட்டால் ஓன்று அல்லது இரண்டு வேளை உணவு உட்கொண்டு மேற்கொள்ளலாம். வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மூன்று வேளை சாப்பிட்டு விட்டு கந்த சஷ்டி கவசம் சொல்லி இவ்விரதத்தை மேற்கொள்ளலாம்.
இந்த சஷ்டி தினத்தன்று குழந்தையில்லாப் பெண்கள் விரதமிருப்பதால், அவர்களின் உடலின் குறைகள் நீங்கி முருகனின் அருளால் பெண்களின் குழந்தை வரம் கிடைக்கும். இவ்விரதத்தை மாதந்தோறும் வரும் சஷ்டி தினத்தன்று மேற்கொள்வதால் நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உடலாரோக்கியம் மேம்பட்டு, அந்நோய்கள் படிப்படியாக நீங்கும். இவ்விரதத்தை தொடர்ந்து மேற்கொள்பவர்களுக்கு அந்த முருகப்பெருமானின் அருளால் மிகுந்த செல்வமும், எல்லாவற்றிலும் வெற்றியடையும் யோகமும் கிட்டும்.
உண்ணா நோன்பு உடலுக்கு நல்லது. ஆன்மாவுக்குப் பலம் தருவது. எல்லாச் சமயங்களும் இதைக் கடைப்பிடிக்கின்றன. கந்த சஷ்டி விரதம் இருந்தால் நிச்சயம் கவலைகள் தீரும். இன்று சஷ்டி விரதம் இருக்க முடியாதவர்கள் மாலையில் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் படிங்க கவலைகள் காணாமல் போகும்.