திதி சூன்யத்தால் திருமண தடை, குழந்தையின்மையா? சஷ்டியில் விரதம் இருங்க!
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: இன்று நவராத்திரியின் ஆறாம் நாள். சஷ்டி திதி. திருமயிலை எனும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம் மற்றும் அனைத்து சிவாலயங்களிலும் நவராத்திரி திருவிழாவும் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகளும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
கந்தனின் அருள் வேண்டி பக்தர்கள் அனுஷ்டிக்கும் மிகமுக்கியமான விரதங்களில் கந்த சஷ்டி விரதமும் ஒன்று.
"சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்" என்ற பழமொழி அனைவரும் அறிந்ததே ஆனால் இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பது நிறையபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
மேலும் குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகவும் காணப்படுகின்றது
சஷ்டி திதியில் விரதங்கள் இருந்தால் குழந்தை பாக்கியம் உறுதியாகக் கிடைக்கும். அகப்பை என்பது உள்ளிருக்கும் கர்ப்பப்பையைக் குறிக்கிறது. அந்தத் திதியில் விரதம் இருந்தால் அகத்தில் இருக்கும் கருப்பை கருத்தரிக்கும் என்பது அர்த்தம். அதனால்தான் சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்று முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள்
சஷ்டிக்கும் குழந்தை பாக்கியத்திற்கும் என்ன சம்மந்தம்?
சஷ்டி விரதத்தை பற்றி அறிந்துக்கொள்ளும் முன் ஜோதிடத்தில் திதி சூன்ய ராசிகளை பற்றி கூறவேண்டியது அவசியமாகிறது.
ஒரு குழந்தை பிறந்தபோது நடப்பில் இருந்த ஒரு திதியால், சில ராசிகள் சூன்யம் அடைவதாக ஜோதிட சாஸ்த்திரங்களில் சொல்லப்பட்டுள்ளன. சூன்யம் என்றால் வெறுமை என்றும், ஒன்றுமே இல்லாதது என்றும் பொருள். இதை திதிசூன்யம் என்றும் விஷ சூன்யம் என்றும் ஜோதிடர்கள் குறிப்பிடுகிறார்கள். சூன்யமடையும் ராசியை சூன்யராசி என்றும், அந்த ராசிக்குடைய கிரகத்தை சூன்யகிரகம் என்றும், குறிப்பிடுகிறார்கள். எனவே திதிசூன்யத்தோடு தொடர்புடையவை ராசியும், அந்த ராசிக்குரிய கிரகமும் சூன்யம் அதாவது வெறுமை அடைந்துவிடுகிறது. அதனால் அந்த ராசிகளும் கிரஹங்களும் முரண்பாடான பலனளிக்கிறது.
திதிசூன்ய பலன் பார்க்கும்போது, சூன்யராசி எதுவென்றும், அதன் அதிபதியாகிய கிரகம் எத்வென்று மட்டுமே பார்த்து, அதற்குரிய பலன் அறியவேண்டும்
ஜோதிடத்தில் குறிப்பிட்ட திதிகளில் அமாவாசை, பெளர்ணமி தவிர ஏனைய 14 திதிகளில் பிறந்தவர்களுக்கும் திதி சூன்ய தோஷம் உள்ளது. இவைகளை கவனிக்காமல் பலன் சொல்லும் போது சொல்லிய பலன்கள் நடப்பதில்லை. ஜோதிடத்தின் வழிகாட்டியாக திதி சூன்யம் உள்ளது. திதிசூனியம் பெற்ற கிரகம் உச்ச நிலையில் இருந்தாலும் நற்பலன் அளிப்பதில்லை. சூன்யம் பெற்ற கிரகமும், சூன்ய ராசியில் உள்ள கிரகமும் பலத்தை இழப்பதோடு தமது காரக ஆதிபத்திய பலன்களையும் செய்வதில்லை.
எனவே திதி சூன்யம் பெறும் ராசிகளின் சந்திரன் சஞ்சரிக்கும் பொழுதும், திதி சூன்ய ராசி லக்னமாக நடைபெறும் சமயத்திலும், சுப காரியங்கள் செய்யலாகாது.
எந்தெந்த திதிக்கு, சூன்ய தோஷ ராசிகள், கிரகங்கள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.
பிரதமை திதியில் சூன்யம் பெறும் ராசி - மகரம், துலாம், கிரகம் சனி, சுக்கிரன்,
துவிதியை திதியில் சூன்யம் பெறும் ராசி - தனுசு, மீனம், கிரகம் -குரு.
திரிதியை திதியில் சூன்யம் பெறும் ராசி- மகரம், சிம்மம், கிரகம்-சனி, சூரியன்,
சதுர்த்தி திதியில் சூன்யம் பெறும் ராசி- கும்பம், ரிஷபம், கிரகம் - சனி, சுக்கிரன்.
பஞ்சமி திதியில் சூன்யம் பெறும் ராசி - மிதுனம், கன்னி, கிரகம் - புதன்,
சஷ்டி திதியில் சூன்யம் பெறும் ராசி- மேஷம், சிம்மம் , கிரகம் -செவ்வாய், சூரியன்,
சப்தமி திதியில் சூன்யம் பெறும் ராசி - தனுசு, கடகம், கிரகம் - குரு, சந்திரன்.
அஷ்டமி திதியில் சூன்யம் பெறும் ராசி - மிதுனம், கன்னி, கிரகம் - புதன்,
நவமி திதியில் சூன்யம் பெறும் ராசி - சிம்மம், விருச்சிகம், கிரகம் - சூரியன், செவ்வாய்,
தசமி திதியில் சூன்யம் பெறும் ராசி - சிம்மம், விருச்சிகம், கிரகம் - சூரியன், செவ்வாய்.
ஏகாதசி திதியில், சூன்யம் பெறும் ராசி - தனுசு, மீனம், கிரகம் - குரு,
துவாதசி திதியில் சூன்யம் பெறும் ராசி - மகரம், துலாம், கிரகம் - சனி, சுக்கிரன்,
திரயோதசி திதியில் சூன்யம் பெறும் ராசி - ரிஷபம், சிம்மம், கிரகம் - சுக்கிரன், சூரியன்,
சதுர்த்தசி திதியில் சூன்யம் பெறும் ராசி - மிதுனம், கன்னி, கிரகம் - புதன்.
அமாவாசை, பௌர்ணமி திதிகளுக்கு எவ்வித திதி சூன்யமும் இல்லை. தோஷமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிடத்தில் சஷ்டி திதி:
இந்து மதத்தின் பிரிவுகளில் உள்ள ஆறு பெரும் பிரிவு மதங்களில், மிகப் பழைமையானது கௌமாரம். கார்த்திகேயனை வணங்குபவர்கள் கௌமாரம் மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களே முருக பக்தர்கள்!
ஒவ்வொரு மாதத்தின் ஆறாம் திதி சஷ்டி. இந்த சஷ்டியும் இந்த குமரனுக்கு உரிய நாள். எனவே கௌமாரர்கள் அனைவரும் சஷ்டி விரதம் இருப்பார்கள்.
ஜோதிடத்தில் அழகை குறிக்கும் கிரஹம் சுக்கிரன். குழந்தை பிறப்பிற்க்கு தேவையான காமத்திற்க்கும் சுக்கிலத்திற்கும் அதிபதி சுக்கிரன். சுக்கிரனை குறிக்கும் எண் ஆறு.
தெய்வங்களில் அழகன் எனப்போற்றப்படுபவர் முருகன். முருகனுக்கு ஆறு முகங்கள். முருகனை வளர்த்தவர்கள் ஆறு கார்த்திகை பெண்டீர். முருகனுக்குகந்த திதி ஆறாவது திதியான சஷ்டி. ஆண்மையை குறிக்கும் கடவுள் முருகப்பெருமான் ஆகும். "சுக்கிற்க்கு மிஞ்சின மருந்தும் இல்லை! சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" எனும் சொலவடை உண்டு.
ஜாதகத்தில் செவ்வாய் என்பது ஆண்மையையும் வீரியத்தையும் குறிக்கும். சூரியன் ஆன்மா உற்பத்தியாவதை அதாவது கருவளர்ச்சிக்கு தேவையான சீதோஷ்ணத்தை தருவது சூரியன். சஷ்டி திதியில் பிறந்தவர்களுக்கு மேஷமும் சிம்மமும் மற்றும் அதன் அதிபதிகளான செவ்வாயும் சூரியனும் பலமிழந்துவிடுவார்கள் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.
மேஷம் கால புருஷனுக்கு லக்ன பாவம். செவ்வாயின் மூல த்ரிகோண வீடு. சூரியன் உச்சமாகுமிடம். ஆண்மையை குதிரையோடு ஒப்பிடுவது வழக்கம். குதிரையை குறிக்கும் அஸ்வினி நக்ஷத்திரம் முதல் நக்ஷத்திரமாக அமைந்திருப்பதும் மேஷத்தில்தான். ஆக ஆண்மைக்கும் செவ்வாய்க்கும் உள்ள தொடர்பு இப்போது புரிந்திருக்கும்.
அடுத்தது சிம்ம ராசி. சிம்ம ராசி கால புருஷனுக்கு ஐந்தாமிடம் எனப்படும் புத்திரஸ்தானம் ஆகும். அதற்குறிய கிரகம் சூரியன் ஆகும். இந்த இரண்டு ராசிகளும் கிரஹங்களும் நன்றாக இருந்தால் தான் ஒருவர் தகப்பன் ஆகும் பாக்கியம் ஏற்படும்.
நவராத்திரியின் ஆறாம் நாள்
நவராத்திரியின் ஆறாம் நாளான சஷ்டியில் இன்று சக்தி தேவியை கௌமாரி தேவியாக வழிபட வேண்டும். மயில் வாகனமும், சேவல்கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள்; ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள். கல் யானை வடிவத்தை எடுப்பவள்.
பராசக்தியினின்று உதித்த கௌமாரி அழகு, அறிவு, வீரம் ஆகியவற்றின் உறைவிடமான குமரக்கடவுளின் அம்சம். பக்தர்களின் விருப்பங்களை தட்டாமல் நிறைவேற்றுபவள்.
இந்த அம்பிகை ஆறுமுகங்கள் கொண்டவள். பன்னிரு கண்களும், கரங்களும் கொண்டவள். மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பவள். வில், அம்பு, பாசம், அங்குசம், பரசு, தண்டம், தாமரை, வேல், கத்தி, கேடயம் போன்ற ஆயுதங்களோடு அபயமும், வரதமும் தரித்தவள். அடியார்க்கு வரங்களை வாரி வழங்குவதால் சிவந்த கரம் கொண்டவள். விஷ்ணு தர்மோத்திரம் என்ற நூல் இந்த அன்னையைப் பற்றி விரிவாக விளக்குகிறது.
காலத்தின் வடிவை ஸ்தூலமாய் உருவகப்படுத்தினால் 60 வருடங்களையும் அறுபது படிகளாகக் கொண்டு அதன் மேல் கோலோச்சும் சுவாமிநாதன் 60 வருடங்களாகிய காலத்தின் ஸ்தூல ரூபம். காலத்தை ஒரு வருடத்தின் உருவமாகக் கொண்டால் முருகனின் இரு கால்கள் தட்சிணாயனம், உத்ராயணம் ஆகிறது. ஆறு ருதுக்களும் ஆறுமுகங்கள், பன்னிரண்டு கரங்களே பன்னிரண்டு மாதங்களாகும்.
அதேகாலம் ஒரு நாளாய் உருவம் கொண்டால் இரவு, பகல் என்றாகிறது. அதுவே முருகனின் வடிவமாய் எடுத்துக்கொண்டால் இரவு வள்ளி, பகல் தேவஸேனை.
இந்த இரண்டு கௌமார சக்திகளும் இணைந்த ஒருவரே முருகனின் ரூபம். முருகனை காலரூபமாகவும், காலத்தை தன் வசத்தில் வைத்திருப்பவனாகவும் பேசுகிறது கந்தபுராணம்.
மகிமை வாய்ந்த, திருமண தடை நீக்கி புத்திரப் பேற்றினை தட்டாமல் தரும் சகல வல்லமை பொருந்திய முருகனின் சக்தியான கௌமாரி, தன்னை வணங்குபவர் வாழ்வில் வளம் சேர்ப்பாள்