போகிப் பண்டிகை 2020: நிலைப்பொங்கல் வைத்து முன்னோர்களை நினைவு கூறும் போகிப்பண்டிகை
போகி பண்டிகை தினத்தன்று, நிலைப்பொங்கல் வைத்து வணங்குவார்கள் வீட்டின் தலைவாசல் எனப்படும் முன்வாசல் நிலைக்கு மஞ்சள் பூசி, பொட்டு வைத்து, நன்கு தோகை போல் விரிந்த கரும்பு ஒன்றை சாற்றி வைத்து, வாழைப்பழம்,
மதுரை: போகிப் பண்டிகை என்பது தேவர்களின் தலைவனான இந்திரன் முதலானவர்களை பூஜித்து திருப்தி செய்ய வேண்டிய நாள் ஆகும். அன்றைய தினத்தில் போளி, வடை, பாயசம் போன்றவற்றை இறைவனுக்கு நிவேதனம் செய்து, பூஜித்து தரிசிக்க வேண்டும். அக்கால வழக்கப்படி, மார்கழி மாதத்தின் கடைசி நாளானது ஆண்டின் கடைசி நாள் என்பதால் நடந்து முடிந்த நல்ல நிகழ்வுகளுக்காக இறைவனுக்கு நன்றி சொல்லும் நாளாக போகிப் பண்டிகையை கொண்டாடி வருவதாகவும் கருதப்படுகிறது.
சிறுவர்கள் முதல், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வரைக்கும் ஒரு ஆண்டில் மிகவும் பிடித்தமான மாதம் எது என்றால், ஜனவரி மாதம் தான் ரொம்ப ரொம்ப நல்ல மாதம் என்று யோசிக்காமல் சொல்வார்கள். காரணம், இந்த மாதத்தில் தான் அதிகபட்சமாக 15 நாட்கள் வரையிலும் விடுமுறை கிடைத்து நன்றாக அனுபவிக்க முடியும் என்பதால் தான். அதிலும் மற்ற நாட்களை விட, தமிழர்களின் பாரம்பரிய திருவிழா நாட்களான தைப் பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் நாட்கள் தான்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப, தை மாதம் பிறந்துவிட்டால் தங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்கள் விலகி நல்வாழ்வு மலரும் என்ற ஏக்கத்தில் தான். அதற்காகவே தை பொங்கல் நாளுக்கு முதல் நாளான மார்கழி மாத கடைசி நாளை, அது நாள் வரையிலும் தாங்கள் அனுபவித்து வந்த துன்பங்களை போக்க வேண்டும் என்பதாற்காக போகி என்ற பெயரில் தமிழர்கள் பழங்காலத்தில் இருந்தே திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.
கஷ்டங்கள் நீக்கும் போகி
போகி பண்டிகை நாளன்று, தாங்கள் அன்றைய நாள் வரை பயன்படுத்தி வந்த பழைய பொருட்களான, தேங்கயிருந்த குப்பைகள், உடைந்த மரச் சாமான்கள், உடைந்த மண்பானைகள், வாகனங்களின் டயர்கள் என அனைத்தையும் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை வீட்டுக்கு வெளியில் போட்டு கொளுத்திவிடுவதுண்டு. இதனால், தாங்கள் அதுவரை அனுபவித்து வந்த அனைத்து கஷ்டமெல்லாம் பறந்தோடிப் போகும் என்று நம்புகின்றனர்.
போகி வழிபாடு
உண்மையில், போகி பண்டிகை என்பது, நம்முடைய மனதில் படிந்துவிட்ட அனைத்து கவலைகளையும், வெறுப்பு, கோபம், பொறாமை என தீய எண்ணங்களை அனைத்தையும் மனம் என்னும் வீட்டில் இருந்து வெளியில் தூக்கிப் போட்டு எரித்துவிட்டு, தை முதல் நாள் முதல் புது மனிதனாக நல்லவற்றை மட்டுமே செய்யும் புது மனிதனாக மாற வேண்டும் என்பதை உணர்த்தவே போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
போகியின் நோக்கம்
கண்ட கண்ட கெட்ட எண்ணங்களால் பாழாகிப் போன நம்முடைய மனதை போக்கிவிட்டு, புது மனிதனாக தை முதல் நாளில் அவதாரமெடுக்க வேண்டும் என்பதை உணர்த்தவே போகி கொண்டாடப்படுவதன் தாத்பர்யமாகும். இதன் காரணமாகவே இதற்கு போக்கி என்ற பெயர் உண்டானது. ஆனால் அதுவே காலப் போக்கில் மருவி போகி என்றாகிவிட்டது. கிராமங்களில் இன்றைக்கும் போகி பண்டிகை நாளன்று விட்டுக்கு வெள்ளையடித்து, புது வர்ணங்கள் பூசி, வீட்டை அழகுபடுத்துவார்கள். வீட்டின் கூரையில் கண்ணுப்பீழை எனப்படும் பூலாப்பூ மற்றும் வேப்பிலையையும் சேர்த்து கட்டி வைப்பார்கள்.
இந்திர வழிபாடு
போகி பண்டிகை தினத்தில், வீட்டுக்குள் தெய்வீக உணர்வுகளை, குணங்களையும் தூண்டுவதற்காகவும், நம்முடைய மனதையும், ஆன்மாவையும் தூய்மைப்படுத்துவதற்காகவும் தான் வீட்டின் கூரையில் கண்ணுப்பீழையை கட்டி வைக்கின்றனர். போகி தினத்தில் தேவர்களின் தலைவனான இந்திரன் முதலான தேவர்களை பூஜித்து அவர்களை திருப்தி செய்ய வேண்டிய நாளாகும்.
நிலைப்பொங்கல்
போகி பண்டிகை தினத்தன்று, நிலைப்பொங்கல் நிகழ்வு நடைபெறும். வீட்டின் தலைவாசல் எனப்படும் முன்வாசல் நிலைக்கு மஞ்சள் பூசி, பொட்டு வைத்து, நன்கு தோகை போல் விரிந்த கரும்பு ஒன்றை சாற்றி வைத்து, வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி காட்டி வீட்டிலுள்ள தெய்வத்தை வணங்க வேண்டும்.
மார்கழி கடைசி நாள்
அன்றைய தினத்தில் போளி, வடை, பாயாசம் போன்ற பலகாரங்களை இறைவனுக்கு நிவேதனம் செய்து பூஜித்து வணங்க வேண்டும். மேலும், போகி பண்டிகை நாளானது, அன்றைய கால வழக்கப்படி மார்கழி மாத கடைசி நாள் என்பது ஆண்டின் கடைசி நாள் என்பதால் அது வரையில் நடந்து முடிந்த அனைத்து நல்ல நிகழ்வுகளுக்காக இறைவனுக்கு நன்றி சொல்லும் நாளாகவே போகிப் பண்டிகையை கொண்டாடி வருவதாக ஐதீகம்.
கிராம பொங்கல்
இன்றைக்கும் கிராமப் புறங்களில், இறந்த முன்னோர்களின் நினைவாக சர்க்கரை பொங்கல் இட்டு, அவர்களுக்கு பிடித்தமான கருவாட்டு குழம்பு வைத்து வழிபட்டு வருகின்றனர். போகி நாளில் முன்னோர்களையும், கிராம தேவதைகளையும் வணங்கி வழிபடுவோம் வாழ்வில் வளம்பெறுவோம்.