சனி தோஷம் போக்கி சந்தோஷம் தரும் போகி!
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
மார்கழி மாதம் முடிய இன்னும் மூன்று நாட்களே உள்ளது. வரும் சனிக்கிழமை நாளை மார்கழி மாதத்தின் கடைசி நாள். நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களின் ஒரு நாள். அதில் உத்திராயணம் என்பது பகல் பொழுது. தக்ஷிணாயனம் என்பது இரவுப்பொழுது. அதில் மார்கழி மாதம் என்பது தேவர்களின் ப்ரும்ம முகூர்த்த காலமாகிய விடியற்காலை பொழுதாகும். இன்றோடு தேவர்களின் இரவுப்பொழுது முடிவுறும் நாள். பழையன கழிதலும், புதியன புகுதலுமே போகியின் தத்துவமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. "வங்கக்கடல் கடைந்த மாதவனை" என்று தொடங்கும் திருப்பாவையின் முப்பதாவது பாடலுக்குறிய நாள்.
போகிப்பண்டிகை:
இந்த பண்டிகை துயரங்களை போக்குவதாக கருதப்படுவதால் அதை ‘போக்கி' என்றார்கள். அந்த சொல்லே நாளடைவில் மருவி ‘போகி' என்றாகிவிட்டது. தாழ்ந்த உலகியல் ஆசைகளான போக புத்தியை, ஞானம் என்னும் அக்னியால் எரிக்க வேண்டும் என்பதே இந்த பண்டிகையின் தத்துவம். அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசி நாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.
பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழைய பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர். இவ்வாறாக பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக இந்த போகி பண்டிகை அமைந்திருக்கும்.
போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
இந்திர விழா:
இந்த போகி உருவானதற்கு காரணமாக ஒரு கதையும் சொல்லப்படுகிறது. அதன்படி, தேவர்கள் தலைவன் இந்திரனுக்கும் போகி என்று பெயர் உண்டு. அவன் அருளால் மழை பெய்து பயிர் விளைந்ததை குறிக்கும் வகையில் பண்டைய தமிழகத்தில் இந்திரனுக்கு உரிய விழாவாக போகி கொண்டாடினர். ஆனால், கிருஷ்ண பரமாத்மா கோகுலத்தில் வளர்ந்த நாட்களில் இந்திரனுக்கு வழிபாடு செய்வதை நிறுத்தினர். அதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற இந்திரன், கோகுலத்தின்மீது 7 நாட்கள் தொடர்ந்து பெருமழை பெய்யச் செய்தான்.
தனது பகுதி மக்களை கோவர்த்தனகிரி மலையை குடையாக ஒற்றை விரலால் உயர்த்திப் பிடித்து காத்தார் கிருஷ்ணர். இதனால், கர்வம் அடங்கிய இந்திரன், கீதை தந்த கிருஷ்ண பரமாத்மாவின் பாதம் பணிந்தான். அவனை மன்னித்து இந்திர வழிபாடு செய்ய கிருஷ்ணர் ஒதுக்கிய நாள்தான் போகி என்கிறார்கள்.
ஜோதிடத்தில் போகி:
சரி! ஜோதிடத்தில் இந்த போகியின் நாயகர்கள் யாரென்று தெரியுமா உங்களுக்கு? சனீஸ்வர பகவானும் சுக்கிர பகவானும் தான். பழைய, முதிய, கழிந்த போன்ற வார்த்தைகளுக்கு காரகர் சொந்தக்காரர் சனீஸ்வரர் தான்.
உழைப்புக்கு சனீஸ்வர பகவானும் அதன் பலனான போக வாழ்விற்க்கு சுக்கிரனும் காரகமாக அமைந்தது பொருத்தம் தானே!
இந்த ஆண்டு சனி கிழமை போகிப்பண்டிகை வருவது கூட சிறப்புதான். மேலும் சனீஸ்வர பகவானின் நட்சத்திரமான அனுஷத்தில் அமைந்திருப்பதும் மேலும் சிறப்பு ஆகும். புதிய விடியலான உத்திராயணத்திற்க்கு முன் தேவையற்ற விஷங்களை போக்கி சுத்தமாவதும் சிறப்பு தானே!
அதே போல "புதிய" என்ற வார்தையின் நாயகனே நம்ம சுக்கிரன் தான். புத்தாடை, புத்துணர்சி,புது வீடு, புதிய வாகனம். இப்படி புதிய என தொடங்குமிடத்திலெல்லாம் சுக்கிரனின் ஆட்சிதான். ஆக போகியன்று பழைய கஷ்டங்கள், பழைய பொருட்கள், பழமையை குறிக்கும் இருட்டு ஆகிய அனைத்தும் விலகி புதிய விடியலை ஏற்படுத்தும் தினம் என்பதால் சுக்கிரனுக்குறிய தினம்தானே! அதிலும் சுக்கிர வாரத்திலேயே அமைந்தது சிறப்பு தானே!
போக வாழ்வை அருளும் கிரகமும் சுக்கிரன்தான். ஜோதிடத்தில் சுக்கிரனின் அதிதேவதையாக ஸ்ரீமகாலக்ஷமியின் அம்சமான இந்திரானி என கூறப்படுகிறது. இந்திரானி ௭ன்பவள் இந்திரனின் மனைவி. இந்திரனுக்கும் இந்திரானிக்கும் எடுக்கும் விழாவான போகி சுக்கிரனுக்குமான விழா என்பது சரிதானே!
திருஷ்டி தோஷம்:
போகி பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய துடைப்பம் போன்ற குப்பைகளை தீயிட்டு கொளுத்தி விடுவார்கள். இதனால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என்பது ஒரு ஐதீகம். பிறகு வீட்டின் வாசலில் அழகான கோலம் போடவேண்டும்.
பொதுவாக முக்கியமான வேலைகளை சனிக்கிழமைகளில் தொடங்கினால் வேலை வளரும் எனும் நம்பிக்கை பலரிடம் உண்டு. அதனால் வேலையை தொடங்க மாட்டார்கள். ஆனால் வீட்டை சுத்தம் செய்வது மட்டும் சனிக்கிழமைகளில் செய்வது சிறப்பாகும்.
தேவையற்றதை தேவைபடுபவர்களுக்கு தரலாம்:
கால தேச வர்த்தமான ஜாதி மத நிற பேத யுக்தி ஸ்ருதி அனுபவம் தான் ஜோதிடம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே கால மாற்றத்திற்க்கு ஏற்றாற்போல் நமக்கு தேவையற்ற அதே சமயத்தில் உபயோகப்படக் கூடிய பழைய பொருட்களைத் தேவைப்படுவோர்க்குக் கொடுத்து விடலாம். அதனால் சனியினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி சந்தோஷம் நிலைக்கும் என்பது நிதர்சனம்!