1600 கிலோ அரிசி, 200 ஆடு,250 கோழி... களைகட்டிய வடக்கம்பட்டி பிரியாணி திருவிழா
மதுரை மாவட்டம் வடக்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற முனியாண்டி கோவில் பிரியாணி திருவிழா தை வெள்ளிக்கிழமையன்று விமரிசியாக நடைபெற்றது.
மதுரை: டி. கல்லுப்பட்டி அருகே உள்ள வடக்கம்பட்டியில் உள்ள முனியாண்டி கோயிலில் தை வெள்ளிக்கிழமையன்று பிரசித்தி பெற்ற பிரியாணி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
சீரக சம்பா அரிசியில் கறி போட்டு கார சாரமாய் மணக்க மணக்க பிரியாணி செய்து முனியாண்டிக்கு படையலிட்டு அதை பிரசாதமாய் பக்தர்களுக்கு அளிப்பது இந்த திருவிழாவின் சிறப்பம்சம்.
தை இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற இந்த விழாவில் 200 ஆடு, 250 கோழிகளை பலியிட்டு முனியாண்டிக்கு படையலிடப்பட்டது. பக்தர்களுக்கு 1600 கிலோ சீரக சம்பா அரிசியில் சமைக்கப்பட்ட பிரியாணி பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.
முனியாண்டி விலாஸ் பிரியாணி
முனியாண்டி விலாஸ் ஹோட்டல் பற்றி நம் ஊர் பக்கத்தில் ஒரு நகைச்சுவை கூறப்படுவதுண்டு. நிலாவில் நீல் ஆம்ஸ்ட்ராங் காலடி வைக்கும் முன் அங்கே ஒரு டீக்கடை இருந்ததாம் யாரென்று பார்த்தால் கேரளத்து நாயர் ஒருவர் டீக்கடை நடத்திக் கொண்டிருந்தாராம். சற்று தள்ளி போய் பார்த்த போது ‘மதுரை ஸ்ரீ முனியாண்டி விலாஸ்' என்ற அசைவ ஹோட்டலும் நிலாவில் இருந்ததாம் அந்த அளவிற்கு பிரபலமானது முனியாண்டி விலாஸ் ஹோட்டலும், பிரியாணியும்.
முனியாண்டிக்கு படையல்
முனியாண்டி விலாஸ் ஹோட்டல்களின் உரிமையாளர்கள், ஆண்டுதோறும் தை மாதத்தில் மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே வடக்கம்பட்டி முனியாண்டி கோயிலில் பொங்கல் விழா நடத்துவது வழக்கம். இக்கோயிலில் பொங்கல் விழா 24ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை நடந்தது.
முனியாண்டி தரிசனம்
தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் நடத்தும் உரிமையாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். வெள்ளிகிழமையன்று காலை முனியாண்டி சாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது.
நிலைமாலை ஊர்வலம்
மாலை சாமிக்கு சாற்றப்படும் நிலை மாலையை ஏந்தியபடி பூசாரி முன் செல்ல, ஆயிரக்கணக்கான பெண்கள் தேங்காய், பூ உள்ளிட்ட தட்டுகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற ஊர்வலம், இரவு 7 மணிக்கு கோயிலை அடைந்தது. முனியாண்டி சாமிக்கு மலர் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன.
200 ஆடு, 250 கிலோ கோழி
பக்தர்களால் நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட 200 ஆடுகள், 250 கோழிகளை கொண்டு 1,600 கிலோ சீரக சம்பா அரிசியில் பிரியாணி சமைக்கப்பட்டது. சாமிக்கு படைக்கப்பட்ட பின்னர் அதிகாலை 4 மணி முதல் பக்தர்களுக்கு பிரியாணி பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த விருந்தில் ஏராளமானவர்கள் பங்கேற்று முனியாண்டியை வணங்கி பிரியாணியை பெற்றுச்சென்றனர்.