For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகப்பேரு தரும் முகப்பேர் சந்தான ஸ்ரீனிவாச பெருமாள்

குழந்தை வரம் வேண்டுவோர் சென்னையிலுள்ள அண்ணாநகரை அடுத்த முகப்பேரில் உள்ள அருள்மிகு சந்தான ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் சந்தான கோபால பூஜை செய்யலாம்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: சென்னையிலுள்ள அண்ணாநகரை அடுத்த முகப்பேரில் உள்ள அருள்மிகு சந்தான ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் சந்தான கோபால பூஜை செய்வதன் மூலம் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பௌர்ணமி திருவோணம், சுவாதி ரேவதி புனர்பூசம்,ஆகிய நாட்களில் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஏதேனும் ஒரு தினத்தில் தம்பதி சமேதராக வந்து நம்பிக்கையோடு வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

"ஸீக்ரமேவ ஸத்புத்ர பாக்ய ப்ராப்தி ரஸ்து" என ஒரு திருமணமான பெண்னை வாழ்த்தும்போது அவள் அளவிடமுடியாத மகிழ்ச்சி அடைவாள்.திருமணத்திற்கு பின்பு சில பெண்களுக்கு பத்தாவது மாதத்திலேயே இந்த பாக்கியம் கிடைத்து விடுகிறது. ஒரு சிலருக்கு ஒரு வருடமோ, இரண்டு வருடமோ தள்ளி குழந்தை யோகம் அமைகிறது. இன்னும் சிலருக்கு 8, 10 வருடங்கள் கழித்துதான் குழந்தைபேறு கிடைக்கிறது.

சிலருக்கு குழந்தை பாக்யம் இல்லாத நிலையும் ஏற்பட்டு விடுகிறது. ஒரு சிலருக்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அதன்பிறகு ஆண் வாரிசுக்காக தவியாய்த் தவித்தாலும் அது கிடைப்பதில்லை. அதேபோல் முதலில் ஆண் குழந்தை பிறக்கும் தம்பதியர்களுக்கு பிறகு பெண் குழந்தை பாக்யம் ஏற்படுவதில்லை.

Blessed with a child Mugappair Santana Srinivasa Temple

அப்படியே கர்ப்பம் தரித்தாலும் அது தங்காமல் கருச்சிதைவு ஏற்பட்டு விடுகிறது. இதற்கு எல்லாம் என்ன காரணம்? எல்லா விஷயங்களுக்கும் ஜோதிட சாஸ்திரம் ஒரு
திறவுகோலாக இருப்பதால், இந்த விஷயத்தில் ஜாதக கட்டம் என்ன சொல்கிறது?

குருபகவான்

குரு புத்திரகாரகன். ஜாதகத்தில் குரு கெடாமல் இருந்தால், குரு புத்திர ஸ்தானத்தையோ, புத்திர ஸ்தானாதிபதியையோ பார்த்தால் அவர்களுக்கு நிச்சயம் குழந்தைப்பேறு இருக்கும். குரு புத்திரஸ்தானத்தில் இருந்தாலும் குழந்தைப் பேறு இருக்கும் என்று சில ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

புத்திர பாக்கியம்

சில லக்கினக்காரார்களுக்கு குரு பாவியாவதால் அவர் புத்திரஸ்தானத்தில் நிற்பதை நன்மை என்று அப்படியே ஏற்றுக்கொள்ள இயலாது. மேலும் பாவார்த்த ரத்னகாரா என்ற ஜோதிட கிரந்தத்தின் படி காரகோ பாவ நாஸ்தி, ஏற்படவும் வாய்ப்புள்ளது. மொத்ததில் புத்திரஸ்தானத்தில் அவர் நிற்பதைவிட புத்திர ஸ்தானத்தையோ, புத்திர ஸ்தானாதிபதியையோ பார்ப்பதே சிறந்த நிலையாகும்.

ஐந்தாம் பாவகம்

ஜாதகத்தில் ஐந்தாம் பாவம் அல்லது ஐந்தாம் வீடு புத்திர ப்ராப்தியை குறிக்கும் இடமாகும். குழந்தை,பாட்டன். வம்சா வழி அத்துனையும். பாட்டிகள். பூர்வ புண்யம். மனம். எண்ணம். காதல். சந்தோஷம். அதிர்ஷ்டம். யோகம். போட்டி. இஷ்ட தெய்வம். சிற்றின்பம். மந்திர உச்சாடனம். உபாசனை (இஷ்ட தெய்வம்) வழிபாடு. திருவிழாக் கோலங்கள். மன திருப்தி ஆகிய பாவ காரகங்களை தன்னகத்தே கொண்டது ஐந்தாம் பாவமாகும். எனவேதான் இதனை திரிகோண ஸ்தானங்களில் ஒன்றாகவும் லக்ஷமி ஸ்தானம் எனவும் கூறப்படுகிறது.

ஜாதக கட்டம்

ஜாதக கட்டம் ஒவ்வொன்றிற்கும் ஒரு ஆதிபத்யம் உள்ளது. அந்த வகையில் ஐந்தாம் இடம், குழந்தை பாக்யத்தைக் குறிக்கும். அந்த வீட்டின் அதிபதியும் மிக
முக்கியம். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தையும், ஒன்பதாம் இடத்தோடு, நான்காம் வீட்டையும் பார்க்க வேண்டும். இந்த 4, 5, 9 ஆகிய வீடுகள் (ராசிகள்) பலம் பெற்றும் அந்த வீட்டிற்குடைய கிரகங்கள் நீச்சம் அடையாமலும் 6, 8, 12ல் மறையாமலும் இருப்பது அவசியமாகும். நீச்ச கிரகத்துடன் சேராமல் இருப்பது மிக முக்கியமாகும்.

குரு செவ்வாய்

ஆண், பெண் இருவரின் ஜாதகங்களில் குரு, செவ்வாய், சுக்கிரனின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகும். குருவிற்கு புத்திர பாக்யம் தருவதில் மிக முக்கிய பங்கு
உண்டு. ஏனென்றால் குரு புத்திர காரகன் ஆவார். அதாவது புத்திர யோகத்தை தரக்கூடிய அதிகாரம் பெற்றவர். செவ்வாய் அருளால்தான் தாம்பத்யத்தில் முழுமையாக ஈடுபட முடியும். பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளுக்கு காரணமாக இருப்பவர் இவர். பெண்கள் பூப்பெய்துவதற்கும் இவரே முக்கிய காரணம். ரத்த சம்பந்தமான நோய்கள் இவர் மூலம் உண்டாகும்.

சுக்கிரன்

சுக்கிரன், சிற்றின்பத்தில் நாட்டம் கொள்ளச் செய்பவர். திகட்டாத தாம்பத்யத்தையும் ஈர்ப்பு சக்தியையும் தரக்கூடியவர் ஆண்களின் சுக்கிலத்திற்கும் பெண்களின்
சுரோணிதத்திற்கும் இவரே காரண கர்த்தா. ஒரு தம்பதியின் ஜாதகங்களில் இந்த மூன்று கிரகங்கள் நல்ல வலிமையுடன் ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம் பெற்று நல்ல அம்சத்தில் இருந்தால் விரும்பிய புத்திர யோகம் தானாக கூடிவரும்.

புத்திர பாக்ய தடை ஏற்படுத்தும் அமைப்புகள்

ஆண், பெண் இருவரின் ஜாதகங்களிலும் ஏதாவது குறை இருந்தால்தான் குழந்தை பாக்யம் தடைபடும். இருவரில் ஒருவருக்கு பலம் இருந்தால் தடைகள் நீங்க
வாய்ப்புண்டு. லக்னத்திற்கு ஐந்தாம் இடம் புத்திரபாக்யம் தரும் இடம். ஐந்தாம் அதிபதி புத்திர ஸ்தானாதிபதியாவர். இந்த இரண்டும் பலமாக இருப்பது
அவசியம்.

ஐந்தாம் இடத்தில் ராகு-கேது இருந்தால் புத்திரதோஷம் ஏற்படும். நீச்சக் கிரகம் இருந்தால் புத்திர தடை; 6, 8, 12ம் அதிபதிகள் இருந்தால் கருச் சிதைவு;
இரண்டுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் தாமதம்; ஐந்தாம் அதிபதி நீச்சம் அடைந்தால் புத்திர தோஷம். ஐந்தாம் அதிபதி ராகு-கேதுவுடன் சேர்ந்தால் புத்திரத்தடை;
ஐந்தாம் அதிபதி நீச்சக் கிரகத்துடன் சேர்ந்தால் புத்திரதோஷம். ஐந்தாம் அதிபதியும் குருவும் பலவீனமடைந்தால் புத்திர தடை.

தாமத புத்திரபாக்கியம்

ஐந்தாம் இடத்தில் குரு இருந்தால் தாமதமாக குழந்தை பிறக்கும். குரு புதன் வீடான மிதுனம், கன்னியில் இருந்தால் தாமத புத்திர பாக்கியம். ஐந்தாம் இடத்தில் சூரியன் இருந்து செவ்வாய் பார்த்தால் கருச்சிதைவு. ஐந்தாம் இடத்தை ரிஷபம், கடகம், துலாம் ஆகி சுக்கிரன், சந்திரன் பார்த்தால் பெண் குழந்தைகள் அதிகம் பிறக்கும்.
ஆண் ஜாதகத்தில் விருச்சிக ராசியில் சூரியன், சுக்கிரன் சேர்ந்து இருந்தால் புத்திர தடை. ஐந்தாம் அதிபதியும்-ராகுவும் சேர்ந்து 6, 8, 12ல் இருந்தால் தத்து புத்திரயோகம்.

குறைபாடு உள்ள குழந்தை

ஆண்கள் ஜாதகத்தில் நபும்ஸ கிரகங்கள் என்று சொல்லப்படும் அலித்தன்மையுடைய கிரகங்களான புதனும், சனியும் சேர்ந்து லக்னம், மூன்று, ஏழு ஆகிய இடங்களில் இருந்தாலும், பார்த்தாலும் விந்தணு குறைபாடுகள், வீரியக் குறைவு ஏற்படும். இதனால் குழந்தை பாக்ய தடை ஏற்படலாம். அல்லது அங்கம் குறை உள்ள குழந்தை பிறக்கும்.

குழந்தை பிராப்தம் கிடைக்கும் காலம்

எல்லா கிரக அம்சங்கள், யோகம், பிராப்தம் இருந்தாலும் அதை அனுபவிக்கக்கூடிய நேரம், காலம் வரவேண்டும். குழந்தை யோகமும் அப்படித்தான். கணவன், மனைவி இருவருக்கோ அல்லது ஒருவருக்கோ லக்னாதிபதி, நான்காம் அதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோரின் தசா, புக்தி, அந்தரங்களில் குழந்தை பாக்யம் கூடி வரும். ராகு-கேது திசைகளில் யோகாதிபதிகளின் புக்தியில் சந்ததி விருத்தி ஏற்படும். மற்ற தசாபுக்திகளில் தடைகள், கர்ப்பச்சிதைவு ஏற்பட்டால் உரிய பரிகார தலங்களுக்கு செல்வதன் மூலம் சத்புத்திர யோகம் கிடைக்கும்.

சந்தான ப்ராப்திக்கான பரிகார ஸ்தலம்:

குழந்தை வரம் வேண்டுவோர் சென்னையிலுள்ள அண்ணாநகரை அடுத்த முகப்பேரில் உள்ள அருள்மிகு சந்தான ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் சந்தான கோபால பூஜை செய்வது சிறந்த பலனளிக்கும். மகப்பேற்றிற்காக விஷேசமாக தம்பதி சமேதராக வந்து சந்தான கோபால பூஜையில் கலந்து கொண்டு குழந்தை செல்வம் பெறுகின்றனர். தம்பதியர் இருவர் பெயரிலும் அர்ச்சனை செய்து ஸ்ரீ சந்தான கோபால ஸ்வாமியை இருவர் மடியிலும் எழுந்தருளச் செய்யப்படும்

சந்தான கோபால ஸ்வாமியை தம்பதிகளிருவரும் மடியில் வைத்துக்கொண்டு தங்கள் குல தெய்வத்தை ப்ரார்தித்து பின் கீழ்கண்ட ஸ்லோகத்தை பக்தியுடன் கூறி ப்ரார்தனை செய்ய இஷ்டபடி புத்திர பாக்கியம் ஏற்படும்.

ஓம்-ஸ்ரீம்-ஹ்ரீம்-க்லௌம்-தேவகீ சுத
கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே
தனயம் க்ருஷ்ண த்வா மஹம் சரணம் கத:
தேவதேவ ஜகந்நாத கோத்ர விருத்திகர ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம்

பௌர்ணமி திருவோணம், சுவாதி ரேவதி புனர்பூசம்,ஆகிய நாட்களில் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஏதேனும் ஒரு தினத்தில் தம்பதி சமேதராக வந்து நம்பிக்கையோடு வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை ..!

English summary
Santana Srinivasa Temple is located in Mugappair West near Anna Nagar in Chennai. The place was originally known as "Maga-pperu" in Tamil which means "Blessed with a child".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X