போதாயன அமாவாசை தோன்றிய கதை
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: நாளை ஆடி அமாவாசை உள்ள நிலையில் இன்று பலர் போதாயன அமாவாசை என அனுஷ்டிக்கின்றனர். சதுர்த்தசி திதி அன்றே அமாவாசை வரும்பட்சத்தில் அது போதாயன அமாவாசை என அழைக்கப்படுகிறது.
போதாயன சூத்திரம்:
போதாயனர் என்று ஓர் மகரிஷி. விந்திய மலைக்கு தெற்கில் வாழ்ந்ததாக புராண இதிகாஸ நூல்களில் காணப்படுகிறது. இவரது வம்சத்தைச் சேர்த்தவர்களே போதாயன ஸூத்ரத்தைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
"கோத்திரம் தெரியாவதர்களுக்கு காசியப கோத்திரம்;
ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு போதாயன ஸூத்திரம்"
போதாயன ஸூத்திரம் பற்றி காஞ்சி பெரியவர் மிக உயர்வாக கூறியிருக்கிறார்.
போதாயன மகரிஷி:
போதாயன சூத்ரம்' என்ற நுாலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ஆபஸ்தம்பருக்கும் திதிகளை நிர்ணயம் செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஆபஸ்தம்பர் குருவிடமிருந்து விலகி தனியாக சூத்ரம் இயற்றினார். இதுவே ஆபஸ்தம்ப சூத்ரம் எனப்பட்டது. இருவர் வழியிலும் வைதிகக் கிரியைகளைச் செய்யும் முறை இன்றளவும் உள்ளது
போதாயன அமாவாசை:
போதாயனரின் சீடரே ஆபஸ்தம்ப மகரிஷி என்றுகூட சொல்வதுண்டு. இந்த போதாயன ஸூத்ரத்தைச் சேர்ந்தவர்கள் அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளே போதாயன அமாவாசை என்று கூறப்படுகிறது. பொதுவாக மற்றவருக்கான அமாவாசை நாளுக்கு முதல் நாள் போதாயன அமாவாசை நிகழும். இந்த போதாயன அமாவாசை முதன் முதலாக ஏற்பட்ட சரித்திரம் மஹாபாரதத்தில் காணப்படுகிறது.
மகாபாரதத்தில் அமாவாசை:
மஹாபாரதத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சமாதானம் ஏற்படாமல் இனிமேல் யுத்தம்தான் ஒரே தீர்வு என்று தீர்மானமானவுடன் துரியோதனன் யுத்தத்தில் தனக்கே வெற்றி கிடைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டன். எந்த நாளில் போர் துவங்கினால் எனக்கு வெற்றி கிட்டுமோ அந்த நல்ல நாளை குறித்துத் தா என்று பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சகாதேவனிடம் கேட்டான். சகாதேவனும் தர்மத்துக்கு கட்டுப்பட்டு அமாவாசை திதி நாளன்று யுத்தத்தை ஆரம்பித்தால் தாங்கள் ஸைன்யங்களுக்கு நிச்சயம் வெற்றி கிட்டும் என்று அறிவுரை சொல்கிறார்.
ஸ்ரீ க்ருஷணர் செய்த லீலை:
இதை அறிந்துகொண்ட பஞ்சபாண்டவர்கள் கவலையடைகிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணரிடம் சென்று இனிமேல் என்ன செய்வது? என்று கேட்க ஸ்ரீ கிருஷ்ணரும் "கவலை படாதீர்கள்! நான் பார்த்துக்கொள்கிறேன்" என அவருக்கே உரிய புன்னகையுடன் கூறிவிட்டு
அமாவாசைக்கு முதல் நாளே கிருஷ்ணர் நதிக்கரையில் அமர்ந்து திதி கொடுப்பதற்குத் தயாராகிவிட்டார்.
சூரியனும் சந்திரனும்:
திகைத்துப்போன சூரியனும், சந்திரனும் ஒன்றாக அங்கே தோன்றி, ஒரு சேர அவரிடம் கேட்டனர்:
சூரியனும் சந்திரனும் அடடா ஸ்ரீமன் நாராயனரே தவறுதலாக அமாவாசையை கணித்து விட்டார்கள் போலிருக்கிறதே நாளைதானே அமாவாசை என்ன செய்யலாம்? நாமே இவர்களிடம் நேரில் சென்று விவரத்தை சொல்லுவோமே என்று நினைத்து சூரியனும் சந்திரனும் ஸ்ரீ க்ருஷ்ண பகவானிடம்
"பகவானே! நாளை அல்லவா அமாவாசை?"
கிருஷ்ணர் எதிர்க் கேள்வி கேட்டார்: "நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் தினம்தானே அமாவாசை?"
"ஆமாம்" என்று இருவரும் பதில் அளித்தனர்.
கிருஷ்ணர் புன்னகைத்தார்." இப்போது நீங்கள் இருவரும் ஒன்றாகத்தானே இருக்கிறீர்கள்?"
அப்போதுதான் அவ்விருவருக்கும் அந்த மாயக் கண்ணனின் லீலை புரிந்த்து.
மகாபாரத வெற்றி:
ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னதை ஏற்றுக்கொண்டனர். ஸ்ரீ க்ருஷ்ணர் அமாவாசை தர்ப்பணம் செய்வதால் இன்றுதான் அமாவாசை என்று ் துரியோதனன் முதலான கௌரவர்களும் அமாவாசைக்கு முதல் நாளே பித்ரு தர்ப்பணம் செய்தனர். மேலும் அன்றே அதாவது அமாவாசைக்கு முதல் நாளே மஹாபாரத யுத்தத்தை ஆரம்பித்தனர். ஆகவேதான் மஹாபாரத யுத்தத்தில் துரியோதனன் சைன்யங்களுக்கு வெற்றி கிடைக்காமல் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது. இந்த நிகழ்ச்சி நடந்தது முதல் அமாவாசை என்பது இரண்டு விதமாக ஆகி போதாயன அமாவாசை என்பது புதிதாக ஆரம்பமாயிற்று.
சன்னையிட ஏற்ற சதுர்த்தசி திதி:
காலப்பிரகாசிகை போன்ற ஜோதிட நூல்களில் சதுர்த்தசியை சன்டையிட (போர் துவங்க) ஏற்ற திதியாக கூறப்பட்டுள்ளது. அதை நன்றாக அறிந்த ஸ்ரீ க்ருஷ்ணர் சதுர்த்தசியில் போர்துவங்க வேண்டும் என்பதற்க்காகவே கபட நாடகம் ஆடியதை மகாபாரத கதைகளில் அறியமுடிகிறது. அதனால்தான் நமது முன்னோர்கள் சதுர்த்தசி திதியில் எந்த முகூர்த்தமும் வைப்பதை தவிர்த்ததை கானும்போது " நாள் செய்வதை நல்லோர் செய்யார் " என்பதை உணர முடிகிறது.