எதிரிகள் தொல்லை நீக்கும் பிரம்மதேசம் கைலாசநாதர் கோவில் - நாலாயிரத்தம்மனுக்கு புஷ்பாஞ்சலி
அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் பிரஹந்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் நாலாயிரத்தம்மனுக்கு 21வது ஆண்டு புஷ்பாஞ்சலியும், நந்தி பெருமானுக்கு சந்தனக்காப்பு விழாவும் நடந்தது.
திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பிரஹந்தநாயகி சமேத கைலாசநாதர் கோயிலில் நாலாயிரத்தம்மனுக்கு 21ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி மற்றும் நந்தி பெருமானுக்கு சந்தனக்காப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாலாயிரத்தம்மன் ஊரின் காவல் தெய்வமாக விளங்குகிறார். பஞ்சம், நோய், திருடர் பயம் போன்றவற்றில் இருந்து நாலாயிரத்தம்மன் தங்களைக் காப்பதாக இந்த ஊர் மக்கள் நம்புகின்றனர். இந்த நாலாயிரத்தம்மனுக்கு ஆண்டு தோறும் புஷ்பாஞ்சலி விழா நடைபெறுகிறது.
காலையில் கணபதி பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்ய பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து கைலாசநாதர், பிரகந்தநாயகி மற்றும் நாலாயிரத்தம்மனுக்கு கும்ப பூஜை, 108 கலச பூஜை, 108 சங்கு பூஜை மற்றும் மூலிகைகளை கொண்ட ஹோமமும் விசேஷ தீபாராதனையும் நடந்தது. பின்னர் 11 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தி பெருமானுக்கு பூஜிக்கப்பட்ட 108 சங்காபிஷேகம், புனிதநீர் அபிஷேகம், 108 லிட்டர் பாலாபிஷேகமும் அலங்கார தீபாராதனையும் நடந்தது.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு பூந்தட்டு ஊர்வலம், 6.30 மணிக்கு நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரமும், தீபாராதனையும், நாலாயிரத்தம்மனுக்கு புஷ்பாஞ்சலியும் நடந்தது. நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதி பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பிரம்மாவின் பேரனாகிய ரோமச முனிவர், இலந்தையடிநாதர் எனும் சிவ சுயம்புலிங்கத்தை இங்கு கண்டுபிடித்து முதன் முதலில் பூஜை செய்து வழிபட்டார். இதனால் பிரம்மனின் நினைவாக இந்த ஊருக்கு பிரம்மதேசம் என்ற வந்துள்ளது. சிவபெருமானை அவமதிக்கும் வகையில் தட்சனின் யாகத்தில் பங்கேற்ற பிரம்மன் இந்த தலத்தில் தன் தவறை உணர்ந்து கைலாசநாதரை வணங்கி வழிபட்டு தீர்த்த குளம் ஒன்றை ஏற்படுத்தினார் இதனால் இந்த தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என விளங்குகிறது.
சனிப்பெயர்ச்சி 2020: கடகத்திற்கு கண்டச்சனி- வம்பு சண்டைக்கு போகாதீங்க
காசிக்கு சென்று வந்த புண்ணியம்
ஆதி கயிலாயங்களில் முதன்மையானதாகவும், தென்மாவட்ட நவக்கிரக ஸ்தலங்களில் சூரியன் ஸ்தலமாகவும், பஞ்ச பீட ஸ்தலங்களில் கூர்ம பீடமாகவும் உள்ளது இக்கோவில். பிரம்ம தேசத்தில் ஓடிக்கொண்டிருக்கும் கடனா நதியானது தெற்கில் இருந்து வடக்கு நோக்கி கயிலாசநாதரை வலம் வருவதால் காசிக்கு சென்று சிவதரிசனம் செய்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அந்த புண்ணியம் இங்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
எதிரிகள் தொல்லை நீங்கும்
உத்தராயணம் தட்சிணாயனம் காலங்களில் சூரியன், கயிலாசநாதர் கருவறை வந்து தனது வெம்மையான கரங்களால் இறைவனை தழுவுகிறார். அந்த நேரத்தில் இத்தல இறைவனை வழிபட்டால் வேண்டியது அனைத்தும் நினைத்தபடி கிடைக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும்.
வெற்றி கொடுத்த நாயகி
தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன், பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தான். அப்போது அவன் இந்த பகுதிகளை கைப்பற்றி சோழ நாட்டோடு இணைய வைத்தான். இவ்வூர் அருகில் உள்ள திருவாலிநாதர் சுவாமி கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு இந்த ஊரில் கொலுவீற்றிருக்கும் கயிலாசநாதர், பிரஹந்நாயகியின் அருளால் செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றி கிடைத்தது. இதனால் மனம் மகிழ்ந்த மன்னன், இந்த ஊரை அந்தணர்களுக்கு காணிக்கையாக கொடுத்தான். நான்மறைகள் ஓதிய அந்தணர்களுக்கு மன்னர், மானியமாக வழங்கியதால் ‘ராஜராஜ சதுர்வேதி மங்கலம்' அல்லது ‘பிரம்மதாயம்' என பெயர் கொண்டு பின்னர் பிரம்மதாயம் என்பது ‘பிரம்மதேசம்' என்று திரிவடைந்ததாக கூறப்படுகிறது.
பரிகார தலம்
இத்தலத்தில் சரஸ்வதிக்கும் தனி சன்னிதி இருக்கிறது. இங்கு தாமிரபரணி உத்தரவாகினியாக ஓடுகிறாள். அதாவது தெற்கில் இருந்து வடக்கு நோக்கி கோவிலை வலம் வந்து வணங்குகிறாள். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த நதியில் தங்களது கால்களை நனைத்த பின்னரே கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்பது ஐதீகம். குழந்தைப்பேறு விரும்பி வரும் தம்பதியினர், இந்த ஆற்றில் குளித்த பின்னரே இலந்தையடிநாதரை தரிசிக்கச் செல்கிறார்கள்.
அம்மனுக்கு சந்தனக்காப்பு
இக்கோவிலில் பங்குனி உத்திர திரு விழாவும், ஐப்பசி திருக்கல்யாண விழாவும், பவித்ரோத்சவம், வசந்த திருவிழா ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, சிவராத்திரி போன்ற விழாக்களும், தினசரி பூஜைகளும் நடந்து வருகிறது. ஆடி மாதத்தில் அம்மனுக்கு புஷ்பாஞ்சலி நடைபெறுவது சிறப்பம்சம்.
நாலயிரம்மனுக்கு புஷ்பாஞ்சலி
சோழர்கள் காலத்தில் புகழ்பெற்ற இந்த ஊரில் அடிக்கடி திருடர்கள் தொந்தரவு இருந்தது. இவ்வூர் மக்களின் பாதுகாப்புக்கென ராஜராஜ சோழன் தன்னுடைய படைவீரர்கள் நாலாயிரம் பேரை, இங்கு காவல் வைத்திருந்தான். இந்த காவல் வீரர்கள் வழிபட்ட துர்க்கைக்கு, நாலாயிரத்தம்மன் என்று பெயரிட்டனர். இன்றும்கூட நாலாயிரத்தம்மன் ஊரின் காவல் தெய்வமாக விளங்குகிறார். பஞ்சம், நோய், திருடர் பயம் போன்றவற்றில் இருந்து நாலாயிரத்தம்மன் தங்களைக் காப்பதாக இந்த ஊர் மக்கள் நம்புகின்றனர். இந்த நாலாயிரத்தம்மனுக்கு ஆண்டு தோறும் புஷ்பாஞ்சலி விழா நடைபெறுகிறது. நேற்றைய தினம் நாலாயிரத்தம்மனுக்கு 21வது ஆண்டு புஷ்பாஞ்சலியும், நந்தி பெருமானுக்கு சந்தனக்காப்பு விழாவும் நடந்தது.
இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.