சகல தோஷங்களும் நீங்கி சந்தோஷம் மட்டும் நிலைக்கனுமா? காவேரி புஷ்கரத்துக்கு வாங்க!
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: நீண்ட நாட்களாக குருபெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில் தற்போது கன்னிராசியில் இருக்கும் குரு பகவான் துலாராசிக்கு வாக்கிய பஞ்சாங்கபடி கடந்த ஆவனி பதினேழாம் தேதி (2-9-2017)யிலும் திருக்கணித பஞ்சாங்கபடி ஆவனி 27ம்தேதி (12-9-2017)யிலும் பெயர்சியாவதை முன்னிட்டு காவேரி ஆற்றின் பல கட்டங்களில் காவேரி புஷ்கரம் கொண்டாடப்படுகிறது.
இந்த காலங்களில் குரு பகவான் காவேரி ஆற்றில் பயணிப்பதால் நதி பிரகாசமாக இருக்கும் என்றும், அந்த நேரம் நதியில் நீராடினால் நமது கவலைகள், பாவங்கள் தொலைந்து விடும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
ஒரு முறை அகத்திய முனிவரிடம் காவேரி எடுத்தெறிந்து பேசியதால் கோபம் கொண்ட அகத்திய முனிவர் காவேரியை தன் கமண்டலத்தில் அடைத்து வைக்க, இதை கண்ட தேவர்கள், விநாயகரிடம் முறையிட, விநாயகப்பெருமான், காக்கை உருவத்தில் வந்து, அகத்தியர் முனிவரின் கமண்டலத்தை தள்ளி விட்டார். விக்னங்களை போக்கும் விக்னேஷ்வரனால் காவேரி தாய் மீண்டும் பரந்துவிரிந்து ஓடினாள்.
தட்சிணகங்கை என்று போற்றப்படும் காவேரிக்கு பொன்னி, விதிசம்பூதை, கல்யாணி, சாமதாயினி, கல்யாண தீர்த்தரூபி, உலோபமுத்ரா, சுவாசாஸ்யாமா, கும்பசம்பவ வல்லவை, விண்டுமாயை, கோனிமாதா, தக்கணபதசாவணி என பல பெயர்கள் உள்ளன.
காவேரி நதி ஒரு புண்ணிய நதியாகும். இதில் ஸ்நானம் (நீராடினால்) செய்தால் பாவங்கள் நீங்கும். இதை மக்கள் உணர்வதற்கு புராணத்தில் ஒரு சம்பவம் இருக்கிறது. மக்கள் தங்களுடைய பாவங்களை போக்க கங்கையில் நீராடி நீராடி கங்கைக்கே பாவம் அதிகமாக சேர்ந்து தோஷம் ஏற்பட்டது. தன் பாவங்கள் தீர என்ன செய்ய வேண்டும்? என்று விஷ்ணு பகவானிடம் கேட்டாள் கங்கை. அதற்கு ஸ்ரீமகாவிஷ்ணு, "நீ காவேரி நதியில் நீராடு. உன் பாவம் நீங்கும்" என்றார்.
அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதி |
புண்ய க்ஷேத்ரே கிருதம் பாபம் வாரனாச்யாம் விநச்யதி |
வாரனாச்யாம் க்ருதம் பாபம் கும்பகோனே விநச்யதி |
கும்பகோனே க்ருதம் பாபம் காவேரி ஸ்நானே விநச்யதி |
என்று காவேரி ஸ்நானத்தின் மகிமையை வேதம் போற்றுகிறது.
அதன்படியே ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசையன்று கங்காதேவி காவேரியில் நீராடி மக்கள் தன்னிடம் கரைத்த பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்று புரான இதிகாசங்களில் போற்றப்படுகின்றது.
ஒருமுறை, பிரம்மனின் புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரஸ மகரிஷிக்குப் பிறந்தவரான குரு பகவான், பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்தார். அவரின் தவத்தை மெச்சிய பிரம்மன் தோன்றினார். குரு பகவானை நோக்கி "உனக்கு என்ன வேண்டும" என்று கேட்டார். அதற்கு பதிலளித்த குருபகவான்," எனக்கு தங்களுடைய புஷ்கரம் தான் வேண்டும்" என்று கேட்டார். குரு பகவானின் விருப்பப்படியே தன்னிடமுள்ள புஷ்கரத்தை அவருக்கு அளிக்க ஒப்புக் கொண்டார் பிரம்மன். ஆனால் புஷ்கரம் பிரம்மனை விட்டுப் பிரிந்து குருவிடம் செல்ல மறுத்தது. இதனால் தர்ம சங்கடமான பிரம்மன் புஷ்கரத்திற்கும் குரு பகவானுக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அதன்படி மேஷ ராசி முதல் மீன ராசி வரை 12 ராசிகளிலும் அந்தந்த ராசிக்கு உகந்த புண்ணிய நதிகளில் புஷ்கரம் இருக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி புஷ்கரம் மேஷம் ராசியில் (கங்கை நதியிலும்), ரிஷபம் ராசியில் (நர்மதை நதியிலும்), மிதுனம் ராசியில் (சரஸ்வதி நதியிலும்), கடகம் ராசியில் (யமுனை நதியிலும்), சிம்மம் ராசியில் (கோதாவரி நதியிலும்) கன்னி ராசியின் போது (கிருஷ்ணா நதியிலும்), துலாம் ராசியில் (காவேரி நதியில்) விருச்சிக ராசியில் (தாமிரபரணி ஆற்றிலும்), தனுசு ராசியின் போது (சிந்து நதியிலும்), மகரம் ராசியில் (துங்கபத்திரா ஆற்றிலும்), கும்பம் ராசியில் (பிரம்ம நதியிலும்), மீனம் ராசியில் (பிரணீதா ஆற்றிலும்) என குருபகவான் எந்தெந்த ராசியில் பெயர்ச்சி செய்கிறாரோ அந்தந்த நேரத்தில் புஷ்கரம் அங்கு தங்கி இருக்கும். அப்போது பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் முதலான முப்பது முக்கோடி தேவர்கள் எல்லாம் இந்நதியில் தங்கியிருப்பார்கள் என்று உடன்படிக்கை செய்யப்பட்டது.
மேற்படி 12 நதிகளில் குரு பகவான் பிரவேசிக்கும் நேரத்தில் 12 நாட்கள் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்கு சமம் என்று கூறப்படுகிறது.
இம்முறை குரு பகவான் துலா ராசியில் வரும் செப்டம்பர் 12 அன்று பிரவேசிப்பதால் காவேரி ஆற்றில் புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. மேலும் இம்முறை கொண்டாடப்படும் காவேரி புஸ்கரம் என்பது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் காவேரி மகா புஷ்கரம் ஆகும்.அதனால் வரும் செப்டம்பர் 12 அன்று தொடங்கி செப்டம்பர் 24 அன்று காவேரி ஆதி புஷ்கரமாகவும். செப்டம்பர் 25 அன்று தொடங்கி அக்டோபர் 7 வரை அந்திம புஷ்கரமாகவும் கொண்டப்படுகிறத ஜோதிடத்தில் தீர்த்த யாத்திரை மற்றும் செய்யும் அமைப்பு யாருக்கு?
ஜோதிடத்தில் ஒன்பதாம் வீட்டை தர்மஸ்தானம் என சிறப்பாக கூறப்படுகிறது. எனவே தீர்த்த யாத்திரை போன்ற புன்னிய காரியங்கள் செய்ய லக்கினமும் ஒன்பதாம் பாவமும் பலமான தொடர்பில் இருக்கவேண்டும்.
ஜாதகத்தில் பன்னிரெண்டாம் பாவத்தை அயன சயன போக மோக்ஷ ஸ்தானம் என போற்றப்படுகிறது.
கால புருஷனுக்கு தனுர் ராசி ஒன்பதாம் பாவமும் மீனம் பன்னிரெண்டாம் பாவமும் ஆகும். எனவே அதன் அதிபதியான குரு தர்ம காரியங்கள் மற்றும் தீர்த்த யாத்திரை போன்ற ஆன்மீக பயணங்களுக்கு செய்ய முக்கிய பங்கு வகிக்கிறார்.
ஜாதக ஒன்பதாம் அதிபதி அல்லது கால புருஷ ஒன்பதாம் அதிபதி ஜலராசியில் இருந்து சுபகிரகத்தின் பார்வை பெரும் போது அந்த ஜாதகன் புனித பயணங்களை மேற்கொள்வான். மேலும் புனித நதியில் நீராடும் பாக்கியம் பெறுவான்.
குரு பகவான் ஒன்பதாம் வீட்டை பார்த்தாலும் ஒன்பதாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் சேர்ந்து தர்மகர்மாதிபதி யோகம் பெற்று இருந்தாலும்
அந்த ஜாதகன் பல புனித பயணங்களை மேற்கொள்வான்.
ஒன்பதாம் வீட்டை குரு பகவான் பார்வை செய்தாலும் சந்திரனுக்கு ஒன்பதாம் வீட்டில் ஒரு சுப கிரகம் இருந்தாலும் அவன் பலமுறை புனித யாத்திரை செல்வான்.
ஒன்பதாம் அதிபதி லக்னத்தில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றால் அந்த ஜாதகன் புனித நீராடுவான்.
சுபகிரகத்தின் பார்வை பன்னிரெண்டாம் வீட்டின் மீதும் பன்னிரெண்டாம் அதிபதி மீதும் இருக்கும் போது மத ரீதியிலும் தர்ம கார்யங்களுக்காகவும் ஆன்மீக பயணங்களுக்காகவும் தனது சொத்தை செலவிடுவார்.
பன்னிரெண்டாம் அதிபதி சுபகிரகத்துடன் கூடி நின்றால் அந்த ஜாதகனை மரியாதைக்குரிய செலவு செய்ய வைக்கும்.
ஜோதிடத்தில் மேஷம்,சிம்மம் மற்றும் தனுசு தர்ம திரிகோணங்கள் எனப்படும். மேலும் கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய மூன்றும் மோக்ஷ திரிகோணங்கள் எனப்படும். தர்ம திரிகோண அதிபதிகளும் மோக்ஷ திரிகோண அதிபதிகளும் பரிவர்தனை பெற்று நின்றால் அடிக்கடி தீர்த்த யாத்திரை மற்றும் புனித யாத்திரை செய்யும் அமைப்பு ஏற்படும்.
மோக்ஷ திரிகோணங்களில் ஸர்ப கிரகங்கள் நின்றாலும் ஒன்பதாம் வீடு, ஒன்பதாம் வீட்டதிபதி ஸர்ப கிரங்களின் தொடர்பு பெற்றால் புனித யாத்திரை செய்யும் அமைப்பு ஏற்படும்.
குருபகவான் நீரினை குறிக்கும் சந்திரன் மற்றும் சுக்கிரனோடு தொடர்பு கொள்ளும்போது தீர்த்தயாத்திரை செய்யும் நிலை ஏற்படும்.
இந்த காவேரி புஷ்கரம் நடைபெறும் 12/09/2017 அன்று திருக்கணித பஞ்சாங்கபடி கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு செல்கிறார்.
மேலும் துலா ராசியில் இருந்து கும்பம், மேஷம் மற்றும் மிதுன ராசிகளை பார்க்கிறார்.
கும்ப ராசி, மிதுன ராசி மற்றும் லக்னத்திற்கு ஒன்பதாம் வீடாகவும் துலா ராசி மற்றும் லக்னத்திற்கு ஐந்தாம் வீடாகவும்
மேஷ ராசி, கடக ராசி மற்றும் லக்னத்திற்கு ஒன்பதாம் வீடாகவும் தனுர் ராசி மற்றும் லக்னத்திற்கு ஐந்தாம் வீடாகவும்
மிதுன ராசி, துலா ராசி மற்றும் லக்னத்திற்கு ஒன்பதாம் வீடாகவும் கும்ப ராசி மற்றும் லக்னத்திற்கு ஐந்தாம் வீடாகவும் அமைந்து குரு பார்வை பெறுகிறது.
எனவே, மேஷம், மிதுனம், கடகம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசி மற்றும் லக்ன காரர்கள் இந்த தீர்த்த யாத்திரையில் கலந்துக்கொள்வார்கள்.
ஸ்நானம் என்னும் நீராடல் உடல் தூய்மைக்காக மட்டுமல்ல புறக்கண்களுக்குப் புரிபடாத ஆன்ம தூய்மைக்காகவும் கடைபிடிக்கப்படுகிறது.
புண்ணியத் தலங்களுக்குச் செல்லும்போது தவறாமல், அங்குள்ள புண்ணிய நதி, கிணறு, குளம் ஆகியவற்றில் ஸ்நானம் செய்வது அவசியம் என்கிறது சாஸ்திரம்.