மதுரை மீனாட்சி சொக்கநாதர் முன்னிலையில் திருப்பரங்குன்றம் முருகனுக்கு திருக்கல்யாணம்
திருப்பரங்குன்றம் முருகன் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு மீனாட்சி அம்மன் தனது கணவர் சொக்கநாதருடன் சென்றுள்ளதால் காலை முதல் இரவு வரை கோவில் நடை சாத்தப்பட்டுள்ளது.
மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் தெய்வானை திருக்கல்யாணம் மதுரை மீனாட்சி சொக்கநாதர் முன்னிலையில் நடைபெறுகிறது. தம்பதி சமேதராக திருப்பரங்குன்றம் கிளம்பியுள்ளதால் இன்று காலை முதல் மீனாட்சியம்மன் கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளது.
முருகப்பெருமானில் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 15 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழா கடந்த மார்ச் 21ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 4ஆம்தேதி வரை 15 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கைப்பாரம் கடந்த 25ஆம் தேதி நடைபெற்றது. திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக 30ஆம் பங்குனி உத்திரமும், 31ஆம்தேதி சூரசம்ஹார லீலை நடைபெற்றது. அன்று ஏராளமான பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
ஏப்ரல் 1ஆம் தேதியான நேற்று முருகப் பெருமானுக்கு தங்கிரீடம் சூட்டி, நவரத்தினங்களான செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகப்பெருமான்-தெய்வானையின் திருக்கல்யாணம் இன்று சிறப்பாக நடக்கிறது.
மதுரையில் இருந்து மீனாட்சியம்மன், பிரியாவிடையுடன் சுந்தரரேசுவரர் பங்கேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் சோலைமலை முருகப்பெருமான் கோவிலில் இருந்து திருக்கல்யாண சீர்வரிசை கொண்டு வரப்பட்டது. திருக்கல்யாணத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
பங்குனி திருவிழாவின் மகா தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் பக்தர்கள் வெள்ளத்தில் பெரிய தேர்வலம் வருகிறது. திருவிழாவின் நிறைவு நாளான 4ஆம் தேதி தீர்த்த உற்சவம் நடக்கிறது.
மதுரையில் இருந்து மீனாட்சி அம்மனுடன் சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் வந்துள்ளதால் மீனாட்சியம்மன் கோவில் நடை காலை முதல் அடைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு பங்குனி உத்திர விழாவின்போது நடை சாத்தப்பட்டாலும் ஆயிரங்கால் மண்டபம் வரை பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தீ விபத்து பாதிப்பால் ஆயிரங்கால் மண்டப பகுதி மூடப்பட்டுள்ளதால் இன்று நாள் முழுவதும் நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.