மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு நாளை திருக்கல்யாணம் - விருந்து சாப்பிட வாங்க மக்களே
சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நாளை கோலாகலமாக நடக்கிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
மதுரை: சித்திரை மாதம் பவுர்ணமிக்கு முன்னதாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளைய தினம் மதுரையில் நடக்கிறது. ஆண்டு தோறும் இந்த திருக்கல்யாணத்தை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் மதுரையில் கூடுவார்கள். மனிதர்களின் திருமணத்திற்கே விருந்து களைகட்டும். தெய்வீக திருமணம் என்றால் கேட்கவா வேண்டும் வகை வகையாக விருந்தும் வடை பாயசத்துடன் பலகாரங்கள் உண்டு. இந்த விருந்தினை சுவைக்கவும், விருந்தில் பங்கேற்று சேவை செய்யவும் மதுரைக்கு வாங்க மக்களே.
மாப்பிள்ளை அழைப்பு விருந்தில் கேசரி பொங்கல் வடை என சுவையான உணவு பரிமாறப்பட உள்ளது. இந்தண் டு திருக்கல்யாணம் நாளை நடக்கிறது பல்லாயிரம் பேருக்கு விருந்து வழங்கபடுகிறது. பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை சார்பில், மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திருக்கல்யாண விருந்து நடத்தப்படுகிறது.இந்த விருந்தில், பூந்தி, வாழைப்பழம் , கல்கண்டு சாதம் , எலுமிச்சைச்சாதம் , தக்காளிச்சாதம் , சாம்பார்ச்சாதம் மற்றும் தயிர்ச்சாதம் தண்ணீர் பாக்கெட் தட்டில் வழங்கப்படும்.
தென்தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழாவான மதுரை சித்திரைத் திருவிழா, கடந்த வாரம் முதல் நடந்து வருகிறது. விழாவின் எட்டாம் நாளான நேற்று, மீனாட்சி பட்டாபிஷேகம் நடைபெற்றது. மதுரையின் அரசியாக மீனாட்சி முடிசூடிக்கொண்டார். இன்று திக் விஜயம் நடைபெறுகிறது.
தெய்வீக திருமணம்
விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நாளை காலை நடைபெறுகிறது. மதுரையின் அரசியாம் மீனாட்சிக்கு திருமணம் என்றால் சாதாரணமாக இருக்கும். பிரம்மாண்டமாக இருக்கும். பந்தல் அலங்காரமும் பக்தர்கள் கூட்டமும் களைகட்டும்.
கோடிக்கணக்கான மலர்களால் அலங்காரம்
மீனாட்சியம்மன் கோயிலின் வடக்கு ஆடி வீதி, மேல ஆடி வீதி சந்திப்பில் பிரமாண்டமான மணமேடை அமைக்கப்பட்டு, வெட்டிவேர் பந்தல் போட்டு, கோடிக்கணக்கான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தயாராகிக் கொண்டிருக்கிறது மணமேடை. மாசி வீதிகளை வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா வந்து அன்னை மீனாட்சியும் அலங்காரமாக சுந்தரேஸ்வரமும் மண மேடையேறுவார்கள்.
புதுத்தாலி அணியும் பெண்கள்
வேத மந்திரங்கள் ஓத, பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிப்பார் சுந்தரேஸ்வரர். அப்போது திருமண நிகழ்ச்சியை காண வந்திருக்கும் மணமான பெண்கள், தங்கள் கழுத்தில் உள்ள தாலியை மாற்றி புதுத்தாலி அணிந்துகொள்வார்கள்.
தம்பதி சமேதராக வீதி உலா
இதனையடுத்து பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். மாலையில் மாப்பிள்ளை யானை வாகனத்திலும், புதுப்பெண் மீனாட்சி பூப்பல்லக்கிலும் வீதி உலா வருவார்கள். தம்பதியரின் அழகைக் காண பட்டி தொட்டி எங்கும் இருந்தும் மக்கள் திரண்டு வருவார்கள். திருக்கல்யாணத்தை கண்ணார கண்டால் நம் வீட்டில் மணமாகாமல் இருக்கும் மகளுக்கோ மகனுக்கோ திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
சேவையில் பங்கேற்கலாம்
திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 8 மணி முதல் விருந்து நடைபெறுகிறது. இதற்கான அரிசி, காய்கறிகள் முதல் கடுகு வரையிலான அத்தனை பொருட்களையும் மதுரை மக்கள் உபயமாக அளித்துக் கொண்டிருக்கின்றனர். டன் கணக்கில் குவிந்துள்ள காய்கறிகளை நறுக்கித் தருவதற்காக, பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து அரிவாள் மனை, கத்தியுடன் பங்கேற்பார்கள்.
திருக்கல்யாண விருந்தில் பங்கேற்கலாம்
இன்று மாலை 5 மணி முதல் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் காய்கறி நறுக்குதல் போன்ற பணி துவங்குகிறது, இன்றைய மாப்பிள்ளை அழைப்பு விருந்தில் கேசரி ,பொங்கல், வடை இடம்பெறும். விருந்துக்கு தேவையான மளிகைப் பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் கொடுக்கலாம்.
திருக்கல்யாண விருந்துக்கு சேவை செய்ய அழைக்கிறோம் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம். "பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை " Regd.No 32/16 C/o சாமுண்டி விவேகானந்தன் cell: 9442408009 Shop: 0452 2345601. மதுரை மீனாட்சிக்கு கல்யாணம்னா சும்மாவா நம்ம வீட்டு கல்யாணம் போல எல்லா வேலையும் எடுத்து போட்டு செய்யலாம் வாங்க.