அமாவாசை நாளில் சந்திர ஹோரையில் வேட்புமனு தாக்கல் செய்த ராகுல் காந்தி - வெற்றி கனியை ருசிப்பாரா
பங்குனி அமாவாசை தினமான இன்று குருவின் ஆதிக்கம் நிறைந்த வியாழக்கிழமை நாளில் கேரள மாநிலயம் வயநாட்டில் இன்று காலை 11.30 மணியளவில் சந்திர ஹோரையில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
மதுரை: நிறைந்த அமாவாசை நாளில் செய்யும் காரியம் ஜெயமாகும் என்பார்கள். போருக்கு போகும் முன்பு கூட அமாவாசையில் பூஜை போடுவார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் அதே சென்டிமென்டை கையில் எடுத்திருக்கிறார். அமேதியில் போட்டியிட்டாலும் கேரளாவின் வயநாட்டில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை அமாவாசை தினமான இன்று சந்திர ஹோரையில் தாக்கல் செய்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதி எம்.பியாக உள்ளார் ராகுல் காந்தி. கடந்த முறை இவரிடம் தோல்வியடைந்த ஸ்மிருதி இரானி இம்முறையும் பாஜக சார்பில் அமேதியில் களம் காண்கிறார்.
இந்த நிலையில், கேரளாவின் வயநாட்டிலும் 2வது தொகுதியாக ராகுல் காந்தி போட்டியிட முடிவு செய்துள்ளார். அவருக்கு எதிராக பலமான வேட்பாளர்களை எதிர்கட்சியினர் களம் இறக்குகின்றனர்.
வேட்புமனு தாக்கல் செய்யும்போது, அவருடன், சகோதரி பிரியங்கா காந்தி, கேரளா காங்கிரஸ் தலைவர்கள் கே.சி.வேணுகோபால், முல்லப்பள்ளி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.தென் இந்தியாவை பாஜக புறக்கணித்துவிட்டால் அங்குள்ள மக்கள் அதிருப்தியில் உள்ளனர். உங்களோடு நான் இருக்கிறேன் என்பதை காண்பிக்க வயநாட்டில் நான் போட்டியிட உள்ளேன் என்று தனது பேட்டியில் விளக்கம் கொடுத்தார் ராகுல் காந்தி. ராகுலின் ஜாதகம் என்ன சொல்கிறது. தேர்தல் நடைபெறும் தேதி, வேட்புமனு தாக்கல் செய்த தேதி நேரம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
இதுதான் சீக்ரெட் மெசேஜ்.. பிரியங்கா காந்தியின் ''அண்ணா'' டிவிட்டிற்கு பின் இவ்வளவு பிளானா?
ராகு திசையில் பதவி கிடைக்குமா
ராகுல்காந்திக்கு 6 வயது முதல் 26 வயதுவரை, அவரது லக்னத்தின் ராஜயோகாதிபதியான சுக்கிரனின் தசை அவருக்கு நடந்தது. அதன்பிறகு சூரியன், சந்திரன், செவ்வாய் தசைகள்தான் நடந்தன. ஏப்ரல் மாதம் வரை செவ்வாய் தசை நீடிக்கும். அடுத்ததாக ராகுலுக்கு ராகுதசை ஆரம்பமாகப் போகிறது. இதுநாள்வரை சரியில்லாத தசாபுத்திகள் நடந்த காரணத்தினால்தான் ராகுல்காந்தியால் பிரதமர் பதவியை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
கிரகங்களின் சஞ்சாரம் சாதகம்
சனிபகவான் ராகுல்காந்திக்கு யோககாரகன் என்று கூறுகின்றனர் ஜோதிடர்கள். அவருக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி நடந்து கொண்டிருக்கிறது. செவ்வாய் தசை முடிந்து ராகுதிசை ராகுபுத்தி தொடங்குகிறது. ராகு பெயர்ச்சியும், தனுசு ராசியில் அமர்ந்து உள்ள சனிபகவானாலும் கட்சியின் தலைமை பொறுப்புக்கு வந்துள்ள ராகுல்காந்திக்கு சாதகமாகவே அமையும் என்கின்றனர். கடந்த தேர்தலைப் போல காங்கிரஸ் கட்சி மரண அடி வாங்காமல் ஓரளவிற்கு சீட்டுகளை பெறும் வாய்ப்பு உள்ளது என்கின்றனர் ஜோதிடர்கள்.
பதவி கிடைக்குமா
ராகுல்காந்தி ஜாதகத்தில் ராகு ராஜயோகத்தை தரக்கூடிய இடம் என்று மூலநூல்கள் குறிப்பிடும் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து இடங்களில் ராகு இல்லாமல் கும்பத்தில்தான் இருக்கிறார். அதைவிட மேலாக தற்போது ராகுலின் ராசியான தனுசுவிற்கு கோட்சார ரீதியில் ஜென்மச்சனி நடந்து கொண்டிருக்கிறது. என்ன இருந்தாலும் வேத ஜோதிட விதிகளின்படி நடப்பு கோட்சாரம் மற்றும் தசாபுக்தி அமைப்புகள் சாதகமாக இல்லாததால் இம்முறை அதி உச்ச பதவியை அடைவதற்கு ராகுலுக்கு தடை இருக்கும் என்பதே ஜோதிடர்களின் கணிப்பு.
அமாவாசை தினத்தில் வேட்புமனு
அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கே உரியது. அதுவும் நேரு குடும்பத்திற்கே உரியது. 2004 முதல் அமேதியில் போட்டியிட்டு வருகிறார் ராகுல்காந்தி. 2009, 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். முதல் முறையாக தென்னிந்தியாவில் அதுவும் கம்யூனிஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்த கேரளாவில் போட்டியிடுகிறார். வரட்டும் பார்க்கலாம் மண்ணை கவ்வ வைக்கிறோம் என்று கூறியுள்ளனர் கம்யூனிஸ்ட்கள். போட்டியை எதிர்கொள்ள ராகுல்காந்திக்கு அதிக தெம்பு வேண்டும். ராகுலை இரண்டு தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்கள்தான் எதிர்த்து போட்டியிடுகின்றனர். அதனால்தான் நிறைந்த அமாவாசையில் சந்திர ஹோரையில் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார் ராகுல்காந்தி.
ஆட்சியை பிடிக்க வேகம்
2004,2009 ஆம் ஆண்டுகளில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சி கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பரிதாபமாக தோல்வியடைந்தது. நாடு முழுவதும் மொத்தம் 44 இடங்களை மட்டுமே பெற்று எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தது. ராகுல்காந்தி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் மண்ணைக் கவ்வியது. இம்முறை ராகுல் காந்தி தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் 3 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த தெம்போடு ராகுல்காந்தியும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் தேர்தலை எதிர்கொள்கின்றனர். அதிக தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற வேகம் இருக்கிறது.
வெற்றிக்கனியை ருசிப்பாரா
ராகுல்காந்தி இந்த லோக்சபா தேர்தல் எப்படி இருக்கும் ஜெயிப்பாரா? ஆட்சியை பிடிப்பாரா என்ற கேள்விதான் அரசியல் கட்சித்தலைவர்கள் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களிடையே எழும் கேள்வி. அமேதி தொகுதியில் மே 6ஆம் தேதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ராகுல் காந்திக்கு கணிசமான ஓட்டுக்கள் பதிவாகும். ஆனால் அது ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று கூற முடியாது. அமேதியில் தேர்தல் நடைபெறும் நாள் ராகுல்காந்திக்கு சாதகமாக இல்லை. அதே நேரம் வயநாட்டில் பலத்த போட்டிக்கு இடையேதான் வெற்றிக்கனியை ருசிக்க முடியும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
என்னதான் செட் அப்பை மாற்றி கெட்அப்பை மாற்றி தொகுதியை மாற்றினாலும் ராகுல்காந்திக்கு அரசாளும் யோகம் இன்னும் கூடி வரவில்லை என்றே ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.