பெண்களின் சபரிமலை சக்குளத்துக்காவு பகவதி அம்மன்... பொங்கல் வைத்தால் வெற்றி கிடைக்கும்
கலியுகத்தின் கடவுளாக போற்றி வணங்கப்படும் சக்குளத்துக்காவு பகவதி அம்மனின் அருளைப் பெற வேண்டி, பெண்கள் அனைவரும் இருமுடி கட்டி விரதம் இருந்து இக்கோவிலுக்கு வருகின்றனர்.
திருவனந்தபுரம்: பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் பொங்கல் வழிபாடு கடந்த டிசம்பர் 10ஆம் தேதியன்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். பொங்கல் விழாவின் முத்தாய்ப்பாக நடைபெறும் நாரி பூஜை வரும் டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறுகிறது.
பரசுராமர் பூமி என்றும், கடவுளின் தேசம் என்றும் கொண்டாடப்படும் கேரளாவில் புகழ்பெற்ற கோவில்கள் எத்தனையோ உண்டு. சிவபெருமானின் அம்சமாக கருதப்படும் ஆதிசங்கரர் முதல் சிரஞ்சீவியான பரசுராமர், தர்மசாஸ்தாவாக விளங்கும் ஐயப்பன் போன்ற அவதார புருஷர்கள் தோன்றிய புண்ணிய பூமியாகும். மலைகளும், பள்ளத்தாக்குகளும், ஆண்டு தோறும் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளும், அருவிகளும் நிறைந்ததாலேயே கடவுளின் தேசம் என்று பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு.
இங்குள்ள கோவில்கள் அனைத்துமே வரலாற்று புகழ்வாய்ந்தவையாகவே உள்ளன. அவை அத்தனையுமே 1500 ஆண்டுகள் முதல் 3000 ஆண்டுகள் வரை மிகப் பழமையான கோவில்களாகும். அதில் அன்னை பகவதி வழிபாடு நடைபெறும் கோவில்களில் குறிப்பிடத்தக்க கோவில்கள் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலும், சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலும்.
இவ்விரண்டு கோவிலுமே பெண்களின் சபரிமலை என்று போற்றிப் புகழப்படுகின்றன. சபரிமலையில் எப்படி 10 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறதோ, அது போலவே, இவ்விரண்டு கோவில்களிடும் ஆண்கள் நுழைய அனுமதி கிடையாது. இது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையாகும்.
இதில் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில், சுமார் 3000 ஆயிரம் ஆண்டுகள் பழமையான, நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவிலாகும். அன்னை சர்வேஸ்வரியும் அண்ண பூரணியும் தங்களை நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் கோவிலாகும். இது ஆலப்புழா மற்றும் பட்டனம் திட்டா மாவட்டங்களின் எல்லையில் உள்ள நீரேற்றுபுரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. பம்பை ஆறும் மணிமலை ஆறும் மாலை போல் சூழ்ந்து ஓட நடுவில் இக்கோவில் அமைந்துள்ளது.
கலியுகத்தின் கடவுளாக போற்றி வணங்கப்படும் சக்குளத்துக்காவு பகவதி அம்மனின் அருளைப் பெற வேண்டி, பெண்கள் அனைவரும் இருமுடி கட்டி விரதம் இருந்து இக்கோவிலுக்கு வருகின்றனர். இந்த அம்மனை வேண்டிக்கொண்டவர்கள், தங்களின் பிரச்சனை தீர்ந்து, நினைத்த காரியம் வெற்றி பெற்றவர்களும், நினைத்த காரியம் நிறைவேற வேண்டியும், ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தினத்தன்று இக்கோவிலுக்கு வந்து பொங்கலிட்டு வழிபாடு நடத்துவார்கள். அதோடு பெண்களின் கால்களை கழுவி பாத பூஜை செய்யும் நாரி பூஜையும் நடைபெறும்.
அதே போல், இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த டிசம்பர் 7ஆம் தேதியன்று தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்து வழிபடும் விழா கடந்த டிசம்பர் 10ஆம் தேதியன்று நடைபெற்றது. அதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. பின்னர் காலை 8 மணிக்கு கூவி அழைக்கும் பிரார்த்தனை நடைபெற்றது.
2020ல் சனி, குரு, ராகு கேது பெயர்ச்சியால் மேஷம் முதல் கடகம் வரை யாருக்கு என்ன பலன்கள்
பின்பு, காலை 9 மணியளவில் ராதாகிருஷ்ணன் திருமேனி பண்டார அடுப்பில் தீயை மூட்டி பொங்கல் இடும் வழிபாட்டை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்த லட்சக்கணக்கான பெண்களும் அங்கிருந்த மைதானங்களிலும், சாலையின் இருபுறங்களிலும், மண் பானைகளில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
பின்னர், முற்பகல் 11 மணியளவில் சக்குளத்துக்காவு பகவதி அம்மனுக்கு நைவேத்யம் செய்யப்பட்டது. பூசாரிகள் 10 தட்டங்களை எடுத்துச் சென்று நைவேத்ய தீர்த்ததை தெளித்தனர். பொங்கல் விழாவின் முத்தாய்ப்பாக நடைபெறும் நாரி பூஜை வரும் டிசம்பர் 20ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில் சமூகத்தில் தலைசிறந்து விளங்கும் பெண்களை தேர்ந்தெடுத்து பீடத்தில் அமரச் செய்து, அவர்களின் பாதங்களை தலைமை பூசாரி தனது கைகளால் புனித நீர் ஊற்றி கழுவி நாரி பூஜை (பாத பூஜை) செய்வார். அதைத் தொடர்ந்து அங்கு வந்திருக்கும் மற்ற பெண்களுக்கும் நாரி பூஜை நடைபெறும். இந்த பூஜை துர்கா தேவிக்கு சமர்ப்பணம் செய்யப்படுவதாக ஐதீகம்.