For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்திராஷ்டமத்தை கண்டு பயமா? கவலை வேண்டாம். தப்பிக்க வழியுண்டு

சந்திராஷ்டமம் என்ற அமைப்பு சந்திரனின் சுழற்சியால் ஏற்படுகிறது. சந்திரன் ஒருவர் பிறந்த ராசிக்கு எட்டாம் இடத்தில் வரும்போது சந்திராஷ்டமம் என்கிறோம்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சந்திராஷ்டம் என்றாலே ஆகாத தினம் போல அஞ்சுகின்றனர் அச்சம் வேண்டாம். அதற்கும் பரிகாரம் உண்டு.

இன்று பல ஜோதிடர்கள் உருவாக காரணம் சந்திராஷ்டமம் என்றால் மிகையாகாது. ஜோதிடமே தெரியாதவர்கள் கூட முதலில் சந்திராஷ்டம தினங்களை கவனிக்க ஆரம்பிக்கிறார்கள். பின் தினம் தினம் குடும்பத்திலுள்ள அனைவரின் சந்திராஷ்டம தினங்களையும் கவனிக்க ஆரம்பிக்கிறார்கள். இதுவே ஒருவர் ஜோதிடத்தின் மீது ஆர்வம் காட்டவும் ஜோதிடத்தை கற்றுக்கொள்ளவும் முதல்படியாகிறது.

ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியாகும். ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டை குறிப்பதாகும். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம்.

சந்திராஷ்டம்

சந்திராஷ்டம்

ஒருவர் பிறந்த ராசிக்கு ஒவ்வொரு மாதமும், சந்திரன் எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தை கடந்து செல்லும். இதையே சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன்+அஷ்டமம் = சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம‘ காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டம வேளையாகும்.

தேய்பிறை சந்திரனும் சந்திராஷ்டமும்

தேய்பிறை சந்திரனும் சந்திராஷ்டமும்

வளர்பிறை காட்டிலும் தேய்பிறையில் சந்திர மறைவு தன்மை அதிக பலம் உள்ளது. சந்திரனை மனநிலைக்கு உரியவன் (மனோகாரகன்) என்றும் போக்குவரத்துகளுக்கு காரகன் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

மறைவுஸ்தானத்தில் சந்திரன் நிற்கும் காலத்தில் மனதில் தெளிவின்மையால் மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக கோபப்படுதல், பொறுமை இன்மையால் எரிச்சல், அடுத்தவரிடத்தில் தேவையற்ற கோபம், இல்லறத்தில் சண்டை போன்ற உணர்ச்சி சார்ந்த பிழறல்கள் நிகழும். மேலும் சந்திராஷ்டம காலத்தில் வெளியில் பயணம் செய்யும் பொழுது அதிக கவனம் தேவை.

தடைகள் ஏற்படும்

தடைகள் ஏற்படும்

பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனசங்கடங்கள், மனச்சோர்வு, இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர்பார்வையாக தனம், வாக்கு, குடும்பம் எனும் இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புக்களும் பாதிப்படைகின்றன. ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்யமாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டமம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள்.

கெடுபலன்கள் வராது

கெடுபலன்கள் வராது

சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும், உச்சம், ஆட்சி, நீச்சம் போன்ற அமைப்புக்களில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் கெடுபலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

சந்திராஷ்டம் எப்படி ஏற்பட்டது?

சந்திராஷ்டம் எப்படி ஏற்பட்டது?

மனோகாரகனான சந்திரன் கால புருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் நீசம் அடைகிறது. எனவே விருச்சிக ராசியில் சந்திரன் வரும்போது எண்ண அதிர்வுகளில் சில மாற்றம் ஏற்படுகிறது. பொதுவாகவே கால புருஷனுக்கு எட்டாம் வீட்டை எந்த கிரகம் கடந்தாலும் அது போகிர போக்கில் சில கெடுதல்களை செய்துவிட்டுதான் போகிறது. அந்த விதத்தில் சந்திரன் மனோகாரகன் மற்றும் பயண காரகன் என்பதால் மனதிலும் பிரயாணத்திலும் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதன் அடிப்படையில்தான் சந்திரன் எட்டாம் இடத்தில் வரும்போது சந்திராஷ்டமம் என அனுஷ்டிக்க ஆரம்பிக்கப்பட்டது.

சந்திராஷ்டமத்தால் யாருக்கு கெடுதல்?

சந்திராஷ்டமத்தால் யாருக்கு கெடுதல்?

சந்திராஷ்டமம் ஒரு கெட்ட நாளாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. ஆனால் சந்திராஷ்டமம் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை. சில நேரங்களில் முடிக்க முடியாத வேலைகள் கூட சந்திராஷ்டம தினங்களில் முடிவதை பார்க்கலாம்.

1. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு எட்டாம் வீடு குருவின் வீடாகவோ அல்லது எட்டாம் வீட்டிற்க்கு குருவின் பார்வையோஅல்லது சேர்க்கையோ ஏற்பட்டால் சந்திராஷ்டம கெடுபலன் ஏற்படாது.

2.சந்திரனுக்கு எட்டாம் வீட்டில் சுக்கிரன் நின்று சந்திராஷ்டமம் ஏற்பட்டால் அப்போது தீமையை காட்டிலும் நன்மையை ஏற்படும். அதிலும் சுக்கிரன் ஆட்சிபலம் பெற்றுவிட்டால் உங்களுக்கு சந்திராஷ்டம தினத்தில் அதிக நற்பலன்கள் ஏற்படும்.

3.ஒருவர் ஜாதகத்தில் ஜெனன சந்திரன் குரு பார்வை பெற்ற நிலையில் அவருக்கு சந்திராஷ்டமம் கெடுதல் செய்யாது.

4. ஜெனன ஜாதகத்தில் சந்திரன் அதிக ஷட்பலம் பெற்று நின்றாலும், சந்திரன் பின்னாஷ்டகவர்க பரல்களாக 6 க்கு மேற்பட்ட பரல்கள் பெற்றுவிட்டாலும், சந்திரன் அதிக பாகை பெற்று ஆத்ம காரகனாக நின்றாலும் சந்திராஷ்டம பாதிப்புகள் ஏற்படுவதில்லை.

5. ஒருவர் சந்திராஷ்டமம் அடையும் நக்ஷத்திரம் குருவின் நக்ஷத்திரமாகவோ சுக்கிரனின் நக்ஷத்திரமாகவோ அமைந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் கெடுபலன் அளிப்பதில்லை.

6. ஒருவர் ராசிக்கு எட்டாமிடத்தில் புணர்பு தோஷத்தை தரும் சனைஸ்வரன், கிரஹன தோஷத்தை தரும் ஸர்ப கிரகங்களான ராகு கேது, சந்திரனுக்கு அஷ்டங்க தோஷத்தை ஏற்படித்தி சந்திரபலம் இல்லாத அமாவாசை ஏற்படுத்தும் சூரியன் போன்ற கிரகங்களுடன் சேர்ந்து சந்திராஷ்டமம் ஏற்படும்போது மட்டுமே கெடுபலன்கள் ஏற்படுகின்றன.

சந்திராஷ்டமத்திற்கான பரிகாரங்கள்:

சந்திராஷ்டமத்திற்கான பரிகாரங்கள்:

1. சந்திராஷ்டம தினத்தில் குருவின் ஸ்வருபமான பிராமணர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஜோதிடர்களுக்கு வெற்றிலை பாக்குடன் இயன்ற அளவு தாம்பூலம் அளிப்பது.

2. விநாயகர், அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேக பொருளாக வழங்கினால் சந்திராஷ்டம கெடுபலன்கள் நேராது.

3. சந்திராஷ்டம தினத்தில் பால் திரிவது, சாதம் மற்றும் உணவுப்பொருட்கள் வீணாவது, வெண்ணிர ஆடையில் அசுத்தம் மற்றும் கரை படுவது போன்றவை இயற்கையாக நேர்ந்துவிட்டால் சந்திராஷ்டம தோஷம் விலகிவிடும்.

4. திரிந்த பாலில் செய்யப்படும் ரசகுல்லா போன்ற இனிப்புகளை மற்றவர்களுக்கு வழங்கிவிட்டு சாப்பிட சந்திராஷ்டம தோஷம் விலகிவிடும்.

5. குருவின் ஆதிக்கம்பெற்ற விரளி மஞ்சளை கையில் காப்பாக கட்டிக்கொண்டால் சந்திராஷ்டம தோஷம் பலம் இழந்துவிடும்.

English summary
When the Lord of mind enter into 8th house from the Moon sign (Janmarasi) particularly in the 17th srar fro birth star, Moon is getting malefic so that bad results are happening. It is called Chandrastama.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X