நினைத்ததை முடிக்கும் மேஷம்... தனித்தன்மை மிக்க மீனம் - இவர்கள் இப்படித்தானாம்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் உள்ள குணநலன்களைப் பார்க்கலாம். நவகிரகங்களின் நல்லாசி இவர்களுக்கு எப்படி கிடைக்கிறது என்றும் தெரிந்து கொள்வோம்.
ஜோதிடத்தில் 12 ராசிகள் உள்ளன. இந்த 12 ராசிகளையும் நவகிரகங்கள் ஆட்சி செய்கின்றன. மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிக்கட்டங்களில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ஆகிய கிரகங்கள் ஆட்சி செய்கின்றன. ராகு கேது நிழல் கிரகங்கள் என்பதால் அவர்களுக்கு சொந்த வீடு இல்லை.
ராசிகள் நீர், நெருப்பு, நிலம், காற்று என நான்கு வகையாக உள்ளன. சர ராசி, ஸ்திர ராசி, உபய ராசி எனவும் ராசியினை பிரித்து வைத்துள்ளன.
ராசிகளின் தன்மைக்கு ஏற்ப குண நலன்களும் மாறுபடுகின்றன. 12 ராசிகளுக்கு 27 நட்சத்திரங்கள் உள்ளன. மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
மேஷம்
செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்கள் இயற்கையிலே யாருக்கும் கட்டுப்படாத சுதந்திர தன்மையும், வைராக்கியமும் மிக்கவர்கள். மூக்கிற்கு மேல் கோபம் தான் வரும். தந்திரசாலிகள் மட்டுமல்ல, தைரியசாலிகளும் நீங்கதாங்க. எதையும் தைரியத்தோடும் நம்பிக்கையுடனும் செய்து முடிப்பவர்கள். வெற்றி பெறுவது ஒன்றையே லட்சியமாக கொண்டிருப்பவர்கள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பவர்கள்.
ரிஷபம்
காதல் கிரகம் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்டவர்கள் அமைதியானவர்கள். அழகான தோற்றத்தைக் கொண்டவர்கள். எடுக்கும் முயற்சியில் பின் வாங்கமாட்டார்கள். வாகன யோகம் அதிகம் பெற்றவர்கள். ஆடை அணிகலன் அணிவதில் அதிகம் பிரியம் உள்ளவர்கள். இவர்களின் நட்பு விட்டம் பெரியதாக இருக்கும். இவர்கள் வாழ்க்கை ஏற்றம் இறக்கமாகவே இருக்கும்.
மிதுனம்
அறிவின் நாயகன் புதனை அதிபதியாகக் கொண்டவர்களே... இந்த ராசிக்காரர்கள் அதிக அளவு மூளை பலம் உள்ளவர்கள். இவர்கள் மூளை மின்னல் வேகத்தில் செயல்படும். அடுத்தவர்களுக்கு யோசனை சொல்லும் இவர்களைப் பற்றி ஒரு நிமிடம் கூட சிந்திப்பதில்லை. அதிக புத்திசாலித்தனத்தையும், மிகச்சிறந்த நிர்வாகம் தன்மையும் உடையவர்கள். உடல் பலத்தை காட்டிலும் இவர்களுக்கு மூளை பலமே உறுதுணை புரியும். ஆன்மீகத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கை கொண்டவர்கள்.
கடகம்
மனோகாரகன் சந்திரனை ஆட்சி நாயகனாகக் கொண்டவர்களே... எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் அதற்காக எள்ளளவும் கலங்காதவர்கள் நீங்கள். பேச்சையே ஆயுதமாக்கி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள். வைராக்கிய மனம் பெற்ற நீங்கள் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். பணபலம் பெற்றிருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களைச் சுற்றி ஒரு படை பலம் எப்பொழுதும் இருக்கும். வாழ்வில் மிக வேகமாக முன்னேற்ற வேண்டும் என்ற ஆவலில் மின்னல் வேகத்தில் செயல்படுவீர்கள்.
சிம்மம்
சூரியனை ஆட்சிநாயகனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே... அதிகாரத்தை உபயோகித்து காரியம் சாதிப்பதை விட அன்பை உபயோகித்தால் அதிகம் சாதித்து காட்டுவீர்கள். நிர்வாகத் திறமையினால் எண்ணற்ற நெஞ்சங்களின் மனதில் இடம் பிடித்து விடுவீர்கள். கொடுத்து உதவும் தன்மை கொண்ட நீங்கள் கோபப்படுவீர்கள். வெளி வட்டாரத்தில் வியக்கும் விதத்தில் செல்வாக்கு பெற்றிருந்தாலும் வீட்டிற்குள் உங்களுக்கு போராட்டம் தான்.
கன்னி
புதனை ராசி நாயகனாகக் கொண்ட நீங்கள் புதுமையாகவும், புத்தி சாலித்தனமாகவும் பேசுவதில் ஆற்றல் பெற்றவர்கள். உங்களுக்கு ஆத்ம பலத்தை விட அறிவு பலம் அதிகம். பார்த்த மாத்திரத்தில் உங்களைப் புரிந்து கொள்வது என்பது அரிது. ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள். வாழ்க்கை ரகசியங்களையும் மனதிலேயே வைத்துக் கொள்வார்கள். திருமணம் முடிக்கும் போது கவனமாகப் இருப்பது அவசியம்.
துலாம்
நியாயவான்கள், சுக்கிரனை ஆட்சிநாயகனாகக் கொண்ட நீங்கள், மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். வசீகர பார்வையும் கவர்ச்சியான முகத்தோற்றமும் பெற்ற இவர்கள் சமூகத்தில் தனி அந்தஸ்து பெற்று விளங்குபவர்கள். சுகபோகங்களையும் அனுபவிப்பார்கள். கோபம் இவர்கள் உடன்பிறப்பு, கொஞ்சம் குறைத்துக் கொண்டால் உங்களைப் போல நல்லவர்கள் யாரும் இல்லை. கைராசிக்காரர்கள் நீங்கள் என்பதால் உங்களை எல்லாவற்றிர்கும் கூப்பிடுவார்கள்.
விருச்சிகம்
துணிச்சல்காரன் செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட நீங்கள் விறுவிறுப்பாக செயல்பட்டு காரியத்தில் வெற்றிகளைக் குவிக்கும் கூர்மையான புத்தியும், குணத்தில் இமயமாக விளங்குவார்கள். விருந்தினர்களை உபசரிப்பதில் ஈடு இணையற்றவர்களாகவும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர்களாகவும் திகழ்வார்கள். எந்த செயலையும் ஆர்வத்தோடு கற்பனை வளத்தாலும் காரியங்களை எளிதில் முடிக்கும் திறமை கொண்டவர்கள் நீங்கள். தவறு செய்தவர்கள் எந்த உயர்ந்த நிலையில் இருந்தாலும் தட்டி கேட்க தயங்க மாட்டார்கள்.
தனுசு
குருபகவானை ராசி நாதனாகக் கொண்ட நீங்கள் தெய்வ பக்தியோடு தேச பக்தியும் கொண்டவர்கள். கவரிமான் பரம்பரை என்று தான் உங்களைச் சொல்ல வேண்டும். வீரமும், விவேகமும் கொண்டவர்கள். வெளியில் சுதந்திர பறவைகளாகத் திரியும் இவர்களுக்கு வீட்டில் ஏதாவது ஒரு வகையில் நிம்மதியின்மை ஏற்படும். திருமணம் செய்யும் போது அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மகரம்
சனிபகவனை ராசி நாதனாகக் கொண்ட நீங்க புன்னகை சிந்தும் முகத்தோடும் போற்றும் இனிமைக் குணத்தோடும் காட்சியளிக்கும் நீங்கள் வைராக்கிய மனம் கொண்டவர்கள். மந்தனுக்குரிய மகர ராசிக்காரர்களாகிய இவர்களுக்கு குடும்பத்திற்குள்ளேயே பகை குடி கொண்டிருக்கும். வெளிவட்டார நட்பு வியக்கும் விதம் அதிகரிக்கும். தாழ்வு மனப்பான்மையை அகற்றினால் வாழ்வில் உயர்நிலை அடைய முடியும். பொறுமைசாலிகளாக விளங்கும் நீங்கள் வாழ்க்கையில் பல சோதனைகள் ஏற்பட்ட பிறகு தான் சாதனை பெற முடியும். தொழில் அமைக்கும் போதும் ஜாதக பலம் அறிந்து செயல்பட்டால் தான் சாதகம் பெறமுடியும்.
கும்பம்
சனியின் ஆதிக்கத்தை பெற்ற நீங்கள் சமுதாயத்தில் ஒரு தனி முத்திரை பதிப்பீர்கள். உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்ற பட்டத்தையும் பெற்று வாழ்வீர்கள். தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்க தயங்கமாட்டீர்கள். தாராள மனப்பான்மை கொண்ட இவர்களுக்கு ஒரு பகை நட்பாகும் பொழுது மற்றொரு நட்பு பகையாகிவிடும். எதைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் நீங்காத மனக்குறை ஒன்று இருந்துக் கொண்டே இருக்கும். படிப்பை விட அனுபவத்தால் உயர்நிலை அடைந்தவர்கள். பெற்றோர்கள் தங்களைவிட சகோதர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
மீனம்
குருபகவானை ராசி நாதனாக் கொண்ட நீங்கள், வாழ்க்கையில் படிப்படியான வளர்ச்சியை காண்பீர்கள். தவறு செய்தாலும் அதை ஒப்புக் கொள்வார்கள். எவ்வளவு பெரிய பதவி என்றாலும் தானே தேடிவரும் அதுதான் உங்களின் தனித்தன்மை. வெளியூருக்கு செல்லுவது அதிக நாட்டம் கொள்வார்கள். தானம் செய்வதில் ஆர்வம் கொண்ட நீங்கள், நிதானம் பெற்றிருந்தால் பிறருக்கு நல்ல ஆலோசனைகளை கூறுவார்கள். மனதிற்கு எது சரியொன்று தோன்றுகிறதோ அதை உடனடியாக செய்து முடிப்பீர்கள். வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. மீனைப் போன்று துள்ளித் திரியும் குணமும், பயந்த சுபாவமும் பெற்றிருப்பார்கள். எந்த நிலையிலும் எல்லோரையும் மதிப்பார்கள்.