செவ்வாய் தோஷம் யாரை பாதிக்கும்- செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை என்ன செய்யும்
செவ்வாய் தோஷம் ஒருவருக்கு இருந்து ஒருவருக்கு இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது என்பது சாஸ்திரம். அதேசமயம், தோஷ நிவர்த்தி ஆகிவிட்டது என்பதற்காக செவ்வாய் தோஷமே இல்லாத ஜாதகங்களை சேர்க்கக் கூடாது.
மதுரை: திருமணப் பொருத்தம் பார்க்கும்போது முக்கியமாக கவனிக்கப்படும் ஒரு விஷயம் பையனுக்கோ அல்லது பெண்ணுக்கோ செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்பதுதான். பலரையும் இந்த செவ்வாய் தோஷம் பாடாய்ப் படுத்தி பரிதவிக்க வைக்கிறது. செவ்வாய் தோஷம் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக பலருடைய வாழ்க்கையில் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே வருவதை நாம் அனுபவத்தில் காண்கிறோம்.
செவ்வாய் தோஷம் என்றவுடன் பயம், பீதி அடைகிறார்கள். உண்மையில் செவ்வாய் தோஷம் என்பது உயிர் போகும் அளவிற்கு கொடுமையான சமாசாரம் இல்லை. நீர் காரகனான சந்திரனால் ஏற்படும் நோயை ஜல தோஷம் என கூறி மருத்துவம் செய்துக்கொள்கிறோம். ஆனால் செவ்வாயினால் உடம்பில் ஏற்படும் மாற்றத்தை செவ்வாய் தோஷம் என கூறி திருமண வாழ்க்கையையே சீரழித்து விடுகிறோம்.
ரத்தத்தின் காரகன் செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட சற்றே கூடுதலான உணர்ச்சி இருக்கும் . அது சிலருக்கு கோப உணர்ச்சியாகவும் சிலருக்கு வேக உணர்ச்சியாகவும் சிலருக்கு காம உணர்ச்சியாகவும் இருக்கும். செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்களுக்கு தாம்பத்தியத்தில் அதிக நாட்டம் இருக்கும். செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்களையே செவ்வாய் தோஷம் பெற்றவர்களாக கூறப்படுகிறது. ஆனால் தோஷம் இல்லாதவர்கள் காலப் போக்கில் தாம்பத்தியத்தில் இருந்து விலகுவர். தோஷம் உள்ளவர்களுக்கு, தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்து வைத்தால், அவர்களுக்கிடையில் தாம்பத்திய ரீதியான பிரச்சனைகள் ஏற்படும். என்பதாலேயே தோஷம் உள்ளவர்களுக்கு தோஷமான ஜாதகத்தையே சேர்க்க வேண்டும் என்கின்றனர்.
தோஷ நிவர்த்திக்கு காரணம்
செவ்வாய் தோஷத்தை லக்னத்திலிருந்தும், சந்திரனிலிருந்தும், சுக்கிரனிலிருந்தும் பார்க்க வேண்டும் என பல ஜோதிட நூல்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வக்னத்திலிருந்து பார்க்கும் தோஷ அமைப்புதான் வலுவானது என்றும் கூறப்பட்டுள்ளது. ஜாதகத்தில் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால், இந்த அமைப்பிற்கு செவ்வாய் தோஷம். இந்த அமைப்பு கொண்ட ஆண், பெண் இருவரின் ஜாதகங்களை சேர்ப்பதன் மூலம் தோஷம் சமன் அடைகிறது. தோஷம் என்றுதான் சொல்வார்களே தவிர பெரும்பாலான ஜாதகங்களில் தோஷ நிவர்த்தியும் ஏற்பட்டு இருக்கும். இதற்குக் காரணம், தோஷ நிவர்த்திக்கு நிறைய காரணங்கள் இருப்பதுதான்.
காமமும் காதலும் கலந்த சேர்க்கை
செவ்வாய் என்பது ஒரு ஆண் கிரகமாகும். வீரம், ஆண்மை, கம்பீரம் வீரியம், இரத்தம், உணர்ச்சியை தூண்டுதல் ஆகியவற்றின் காரக கிரகமாகும். சுக்கிரன் என்பது பெண் கிரகம். கால புருஷ லக்னமான மேஷத்திற்க்கு இரண்டாம் வீடு ரிஷபம் சுக்கிரனின் சேர்க்கை ஏற்படுகிறது. நான்காம் வீடான கடகம் குரு உச்சம் பெறும் வீடு அதே சமயம் செவ்வாய் நீசமடையும் வீடு. ஏழாம் வீடான துலாம் சுக்கிரனின் வீடாகும். இங்கு செவ்வாய் நின்றாலும் சுக்கிர சேர்க்கை ஏற்படும் அடுத்தது காலபுருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகம். இது செவ்வாயின் சொந்த வீடென்றாலும் ஆட்சி பெற்றாலும் பார்க்கும் பார்வை சுக்கிரனின் வீடாகிய ரிஷபத்தில் தான் அமைகிறது. இதுவும் செவ்வாய் சுக்கிர சேர்க்கையை ஏற்படுத்திவிடுகிறது. மேலும் எட்டாம் வீடு என்பது மர்ம ஸ்தானங்களை குறிக்குமிடமாகும். அடுத்தது காலபுருஷனுக்கு பன்னிரெண்டாமிடமெனப்படும் அயன சயன போக ஸ்தானமாகும். இது குருவின் ஆட்சி வீடாகும். மேலும் சுக்கிரன் உச்சமடையும் இடமாகும். இங்கு செவ்வாய் இருந்துவிட்டால் அந்த ஜாதகன் பக்திக்கும் படுக்கைக்கும் இடையில் அலை கழிக்கப்படுவான். எனவே ஒரு ஜாதகத்தில் குரு பார்வையில்லாமல் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை அதிக காமத்தையும் குருபார்வையில்லாமல் செவ்வாய் நீசமடைவது ஆண்மை குறைவையும் ஏற்படுத்தும்.
செவ்வாய் தோஷ நிவர்த்தி
செவ்வாய் தோஷம் ஒருவருக்கு இருந்து ஒருவருக்கு இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது என்பது சாஸ்திரம். அதேசமயம், தோஷ நிவர்த்தி ஆகிவிட்டது என்பதற்காக செவ்வாய் தோஷமே இல்லாத ஜாதகங்களை சேர்க்கக் கூடாது. லக்னத்தைப் பொறுத்தவரை கடக லக்னம், சிம்ம லக்னம் ஆகிய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கே இருந்தாலும் இந்த தோஷம் இல்லை இருவருக்கும் இந்த தோஷம் இருந்தால் திருமணம் செய்து வைக்கலாம் என்றும் சொல்வார்கள். ஆனால், பொதுவாக தோஷம் ஒருவருக்கு இருந்தாலும் சரி அல்லது இருவருக்குமே இருந்தாலும் சரி இ
குருவுடன் சேர்ந்தால் தோஷமில்லை
ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் சிம்மம் அல்லது கும்பத்தில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை. செவ்வாய் குருவுடன் சேர்ந்திருந்தாலும் தோஷம் இல்லை. செவ்வாய் குருவுடன் சேர்ந்திருப்பது குருமங்கள யோகம் ஆகும். மிகவும் விசேஷமான பலன்களைத் தரக்கூடியது. சந்திரனுடன் சிம்மம் கும்பம் ராசியில் செவ்வாய் இருந்தாலும் தோஷம் இல்லை.
செவ்வாய் தோஷ விதிவிலக்கு
செவ்வாய் இருக்கக்கூடிய ராசியானது லக்னம், சந்திரன்,சுக்கிரன் ஆகியவைகளுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய ராசியாக இருந்து, அந்த ராசிகளின் அதிபதியான கிரகம் லக்னத்தில் இருந்தாலும், 4, 5, 7, 9, 10 ஆகிய இடங்கள் ஒன்றில் இருந்தாலும் தோஷம் இல்லை. உதாரணமாக செவ்வாய் இருக்கும் ராசி ரிஷபம் என்று வைத்துக்கொண்டால், ரிஷபத்துக்கு அதிபதியான சுக்கிரன் லக்னத்திலோ அல்லது 4, 5, 7, 9, 10 ஆகிய இடங்களில் ஒன்றில் இருந்தாலும் தோஷம் இல்லை.
தோஷமில்லாத ஜாதகம்
மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகளில் செவ்வாய் இருந்து, அந்த இடம் இந்த தோஷத்தைக் குறிப்பிடும் 8ஆம் இடமாகவோ அல்லது 12ஆம் இடமாகவோ இருந்தாலும் தோஷம் இல்லை. செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோருடன் சேர்ந்திருந்தாலும் அவர்களால் பார்க்கப்பட்டிருந்தாலும் தோஷம் இல்லை.
மகரம் கடகம் தோஷமில்லை
களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் இருந்து, அந்த ஸ்தானம் கடகமாகவோ அல்லது மகரமாகவோ இருந்தால் தோஷம் இல்லை. காரணம் கடகத்தில் செவ்வாய் நீசமடைகிறார். மகரத்தில் செவ்வாய் உச்சமடைகிறார். செவ்வாய் இருக்கும் 8 வது இடம் தனுசு அல்லது மீனமாக இருந்தாலும், 12 வது இடம் ரிஷபம், துலாமாக இருந்தாலும் இந்த தோஷம் இல்லை.
செவ்வாய் தோஷமில்லை
லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்து, சூரியன், குரு, சனி ஆகியோர் சேர்ந்து இருந்தாலும் தோஷம் இல்லை. அல்லது அந்த இடங்களில் இருக்கும் செவ்வாய்க்கு மேற்கண்ட சூரியன், குரு, சனி ஆகியவர்களின் பார்வை பட்டிருந்தாலும் தோஷம் இல்லை. ஒருவருக்கு தோஷம் இருந்து மற்றவர்க்கு தோஷம் இல்லை என்றால், அவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது.
காதல் கிரகங்கள் சேர்க்கை
ஜாதகத்தில் சுக்கிரன்,செவ்வாய் பங்கு மிக முக்கியமானது எனலாம்.செவ்வாய் நம் உடலில் ஓடும் ரத்தத்துக்கு அதிபதி ஆகிறார். போர் தளபதி செவ்வாய். கோபம்,வீரம் போன்றவற்றுக்கு முக்கிய காரண கர்த்தா செவ்வாய். இவருக்கு உரிய தெய்வம் முருகன். பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் கெட்டுப்போனால் ஆண்களால் பல பிரச்சினைகளை சந்திக்க நேருகிறது. கணவனுக்கு பாதிப்பு தருகிறது. பலமுள்ள செவ்வாய் கணவனை அடக்கி ஆளவும் , கணவருக்கு யோகத்தையும் தந்து விடுகிறது. எனவே செவ்வாய் தோஷம் என்றாலே யாரும் பயந்து விட வேண்டாம்.