சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொட்டும் மழையில் தேரோட்டம் கோலாகலம்- நாளை ஆருத்ரா தரிசனம்
சிதம்பரம் நடராஜர்கோவிலில் இன்று கொட்டும் மழையில் கோலாகலமாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கொட்டும் மழையில் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
சிதம்பரம்: மார்கழி தேரோட்டம் பலத்த மழைக்கிடையே பக்தர்களின் முயற்சியினால் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்றது. பெருக்கெடுத்து வெள்ளம் ஓடினாலும் பக்தர்கள் வெள்ளத்தில் நான்கு மாட வீதிகளிலும் தேர் ஆடி அசைந்து வந்த அழகை பல்லாயிரக்கணக்கானவர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
சிவபெருமானின் பஞ்சபூதத்தலங்களில் ஆகாயத்தலமாக போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழிமாத ஆருத்ர தரிசன திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் வெவ்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகளின் வீதி உலா நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான தேரோட்டம் இன்று காலை தொடங்கியது அதிகாலை 5 மணிக்கு நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் சாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேரில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளினர்.
இன்று அதிகாலை முதலே சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சாலைகளிலும் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளான 4 வீதிகளிலும் வலம்வந்தது.
இந்த தேர் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வெளி ஊர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் மழையில் நனைந்தபடி சாமி தரிசனம் செய்தனர். தேர் திருவிழாவை முன்னிட்டு சிதம்பரம் நகரம் விழா கோலம் பூண்டுள்ளது. தேர் வலம் வரும் 4 வீதிகளிலும் அந்த பகுதி பெண்கள் வண்ண கோலமிட்டிருந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நாளை நடைபெறுகிறது. நடராஜர், சிவகாமி அம்மனுக்கு மகாஅபிஷேகம் நடைபெறுவதைக்காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்து வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவாதிரை தேரோட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆத்மநாதசுவாமி கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட மாணிக்கவாசகரை தேரில் எழுந்தருள செய்தனர், ஏராளமான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.