சித்திரை அமாவாசை - முன்னோர்களை நினைத்து வணங்கினால் பித்ரு தோஷம் நீங்கும்
அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து வணங்கி ஏழை எளியவர்களுக்கு அன்ன தானம் செய்தால் நமக்கு பித்ரு தோஷம் நீங்கும் தடைகள் அகலும். செல்வ வளம் பெருகும்.
சென்னை: இன்று சித்திரை மாத அமாவாசை நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்யலாம். ஏழைகளின் பசியாறி மனதார வாழ்த்தினாலே நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். கொரோனா வைரஸ் பாதிப்பினால் நாடு முழுவதும் லாக்டவுன் போடப்பட்டு எந்த கோவிலுக்கும் போக முடியாமல் முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியலையே என்று தவிப்பவர்கள் இந்த மாதம் சித்திரை அமாவாசையில் ஏழைகளுக்கு உணவு வாங்கி கொடுக்கலாம் பித்ரு தோஷம் நீங்கி முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.
ஒருவருடைய ஜாதகத்தில்கிரகங்கள் பலமாக நல்ல முறையில் அமர்ந்திருந்தாலும், பித்ரு தோஷம் மட்டும் இருந்தால் அவரால் வாழ்வில் முன்னேற்றம் காண முடியாது. எடுக்கும் அனைத்து காரியங்களும் தோல்வியில் தான் முடியும். ஜான் ஏறினால் முழம் சறுக்கும். அவர் மானசீகமாக கும்பிடும் தெய்வம் கூட அவருக்கு துணைக்கு வராமால் ஓரமாக ஓதுங்கி நின்று கை கட்டி வேடிக்கை தான் பார்க்கும்.
இதற்கு காரணம் பித்ருக்களின் சாபம் தான். பித்ருக்களின் சாபத்தை போக்க வேண்டுமென்றால், முதலில் பித்ருக்களை சாந்தப்படுத்த வேண்டும். பித்ருக்களை சாந்தப்படுத்த வேண்டுமென்றால், பித்ரு தோஷத்தை போக்க வேண்டும். பித்ரு தோஷத்தை போக்கிய பின்பே, ஒருவரது ஜாதகமே தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பிக்கும்.
முன்னோர்கள் வழிபாடு
இன்றைய தினம் அமாவாசை. சார்வரி புத்தாண்டின் முதல் அமாவாசை நாளாகும். பித்ரு தர்ப்பணம் கொடுக்க முடியலையே என்று கவலைப்பட வேண்டாம் வீட்டில் உள்ள முன்னோர்களின் படங்களை அலங்கரித்து பூக்களை போட்டு விளக்கேற்றி வைத்து சாம்பிராணி புகை காட்டி வணங்கலாம்.
இன்றைய தினம் பசியோடு இருக்கும் சிலருக்கு தயிர்சாதம், அன்னதானம் செய்யலாம். இதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். பசுவிற்கு வாழைப்பழம், அகத்திக்கீரை கொடுக்கலாம். காலை மாலை நேரங்களில் வீட்டு பூஜையறையிலும் வீட்டு வாசலிலும் விளக்கேற்றலாம்.
முன்னோர்கள் ஆசி
பித்ரு என்பது, இறந்துபோன நமது தந்தை, தாய், உள்ளிட்ட முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழி மற்றும் தாய் வழி சொந்தம் என இறந்துபோன நம்முடைய அனைத்து முன்னோர்களுமே நமது பித்ருக்கள் தான். நமது தந்தை வழியில் இருந்து போன முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் என்றும், தாய் வழியில் இறந்த முன்னோர்கள் அனைவரும் மாத்ரு வழி பித்ருக்கள் ஆவர். அமாவாசை நாளில் ஏழைகளுக்கு உணவு தானம் கொடுப்பதன் மூலம் நமக்கு முன்னோர்களின் ஆசி கிடைக்கும். நமக்கு ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும் பித்ரு தோஷங்களும் சாபங்களும் நீங்கும். வீட்டில் சண்டை சச்சரவு நீங்கி அமைதி ஏற்படும்.
முன்னோர்களின் பசி போக்குவோம்
நம்முடைய உடல், பொருள், ஆன்மா அனைத்துமே, நம்முடைய பித்ருக்கள் நமக்கு அளித்த பிச்சை தான். நமது பித்ருக்கள் செய்த பாவ புண்ணியத்தையும் சேர்த்தே தான் நாம் அனுபவித்து வருகிறோம். நம்மோடு வாழ்ந்து மறைந்துவிட்ட நமது முன்னோர்களான பித்ருக்கள் அனைவருமே, நாமும் நம்முடைய சந்ததிகளும் நலமுடன் வாழவேண்டும் என்று தான் விரும்புவார்கள். எனவே தான், அவர்கள் உயிரோடு இருந்தபோது, அவர்களை முறையாக பேணி காத்து அவர்களின் பசியை போக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட, அவர்கள் இறந்த பிறகாவது அவர்களின் பசியை போக்கி அவர்களின் ஆன்மாவை சாந்தப்படுத்த வேண்டும். இது தான் பிதுர்க்கடன் என கூறப்படுகிறது.
முன்னோர்கள் வழிபாடு
கிராமங்களில் இன்றும் இந்த மூதாதையர் வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நமது பித்ருக்கள் தான், நமக்கும் இறைவனுக்கும் நடுவில் இருந்து இறைவனின் அருளாசியை நமக்கு பெற்றுத் தருவதோடு, நமது வேண்டுதல்களையும் இறைவனிடம் கொண்டு சேர்த்து வேண்டுதல்களையும் நிறைவேற்றித் தருவார்கள். நமது முன்னோர்களுக்கு நாம் முறையாக செய்யும் வழிபாடு தான் பித்ருகடன் அல்லது தர்ப்பணம் என கூறப்படுகிறது.
பசியை போக்குவோம்
நம் மீதும் நம்முடைய சந்ததிகள் மீதும் அதிக அக்கறை கொண்ட நமது முன்னோர்களை நாம் வழிபாடு செய்து அவர்களின் பசியைப் போக்க வேண்டியது நமது கடமையாகும். அப்படி இல்லாமல் பித்ருக்களின் பசியை போக்காமல், அவர்கள் இறந்த பிறகு அவர்களுக்கு நாம் ஏன் மரியாதை செலுத்த வேண்டும் என்று உதாசீனப்படுத்தினால், நமது பித்ருக்கள் பசியால் வாடுவர். முன்னோர்களின் பசியை போக்க வேண்டியது நமது கடமையாகும்.
சாபம் போக்க என்ன வழி
அமாவாசை திதியன்று நாம் முறையாக பித்ருக்களை வழிபட்டு அவர்களின் பசியை போக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மிகுந்த வருத்தத்துடன் பிதுர் லோகம் சென்றுவிடுவார்கள். இது சாபமாக மாறிவிடும். இந்த சாபமானது தெய்வத்தின் அருளையும் கூட தடை செய்யும் சக்தி பெற்றது. எனவே தான், நாம் பித்ருக்களின் கோபத்திற்கு ஆளாகாமல் தப்பிக்க வேண்டுமானால், அவர்களுக்கு நாம் முறையாக பித்ரு கடன் செய்து அவர்களின் பசியை போக்கி அவர்களை சாந்தப்படுத்த வேண்டும். அமாவாசை நாளில் மறக்காமல் முன்னோர்களை நினைத்து வணங்கி நம்மால் முடிந்த அளவு சிலருக்கு உணவு தானமாக கொடுக்க வேண்டும்.