சித்திரை விசு திருவிழா - குற்றாலநாதர், பாபநாசம் சிவன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடக்கம்
நெல்லை: குற்றாலத்தில் அமைந்துள்ள பல ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்குற்றாலநாத சுவாமி கோவிலில், சித்திரை விசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி உடனுறை குழல்வாய்மொழியம்மை திருக்கோவில்.
வைணவமும் சைவமும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்ட ஆலயம்.
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் பங்குனி, மாசி, மார்கழி, சித்திரை போன்ற மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
கொடி மரத்திற்கு சிறப்பு ஆராதனை
இந்த ஆண்டிற்கான சித்திரை விசுத்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடி மரத்திற்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பக்தர்கள் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அறங்காவலர் குழுதலைவர் தங்கம்பலவேசம், முன்னாள் அறங்காவல் குழு உறுப்பினர் வீரபாண்டியன், திருவிளக்கு பூஜைகமிட்டி தலைவர் அன்னையா பாண்டியன், குற்றாலநாதர் கோவில் வாடகை வியாபாரிகள் சங்க தலைவர் காவையா, செயலாளர் அம்பலவாணன், பொருளாளர் முருகன்,
துணைத்தலைவர் வேல்ராஜ், துணைச்செயலாளர் நாராயணன், இணைச்செயலாளர் பண்டாரசிவன், பாக்கியராஜ், ஜெயப்பிரகாஷ், மாரியப்பன் உட்பட பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
திருத்தேரோட்டம்
விழா நாட்களில் நாள் தோறும் சுவாமி அம்பாள் சிம்ம,வெள்ளி ரிஷபம், கிளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா நடைபெறுகிறது. வருகிற 8ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 9-ஆம் தேதி விநாயகர்,முருகர், குற்றாலநாதர், குழல்வாய் மொழி அம்மன் ஆகியோர் 4 திருத்தேர்களில் எழுந்தருளி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.
தீர்த்தவாரி
11ஆம் தேதி காலையும், இரவும் நடராச மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனையும், 12ஆம் தேதி சித்திர சபையில் நடராச மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது. 14ஆம் தேதி சித்திரை விசு தீர்த்தவாரி நிகழ்ச்சியோடு விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் பரஞ்சோதி, செயல் அலுவலர் செல்வகுமாரி, தக்கார் சாத்தையா மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்
கொடியேற்றம்
கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற சிவஆலயங்களில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லியம்மன் - பூவனநாதசுவாமி திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா இன்று காலை வெகு விமரிசையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான வரும் 13ந்தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.