சித்திரை திருவோணம் சிதம்பரம் நடராஜருக்கு மகா அபிஷேகம் மகாருத்ர யாகம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று ஶ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு சித்திரை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு புதன்கிழமை மகாபிஷேகமும், உலக அமைத்திகாகவும், கொரோனா வைரஸ் நோயிலிருந்து வி
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று சித்திரை மாத மகாபிஷேகம் சித்சபை முன்பு உள்ள கனகசபையில் இன்று புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறுகிறது. சிவபெருமான் அக்னி ரூபமானவர். எனவேதான் அவரைக் குளிர்விக்க தினமும் அபிஷேகம் செய்துவழிபடுவர். லிங்கத்தின் மீது ஜலதாரை வீழ்ந்தவண்ணம் இருக்கும். நடராஜருக்கு ஆண்டில் ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். சித்திரைத் திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை, மாசி சதுர்த்தசி ஆகிய நாள்களில் இந்த அபிஷேகங்கள் நடைபெறும். சித்திரைத் திருவோண நாளான இந்த நாளில் சிதம்பரத்தில் நடராஜப்பெருமானுக்குக் கோலாகலமாக அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.
சிதம்பரம் கோயில் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஆனந்த நடராஜர் எப்பொழுதும் ஆனந்த நடனமிடுவது. வேண்டும் வரங்களை உடன் அருள்வது. தரிசித்தால் முக்தி தருவது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாச ஸ்தலமாக விளங்குவது. சித்ஸபையில் நடராஜர் உருவம், அருவம், உருவ அருவமாக காட்சி தரும் ஸ்தலம் சிதம்பரம். சிதம்பர ரகசியம்.
சிவபெருமானுக்கும் ஐந்து என்ற எண்ணுக்கும் அநேக தொடர்புகள் உள்ளன. பஞ்சாக்ஷரம் ஐந்து எழுத்து. நடராஜர் செய்யும் செயல்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் அருளல் ஆகிய ஐந்து. பஞ்ச பூதங்களுக்கும் அதிபதியாக அமந்த ஸ்தலங்கள் ஐந்து. மகேஸ்வரனின் சக்தி ரூபங்கள் ஆதிசக்தி, பராசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி ஆகிய ஐந்து.
அடிமுடி காண முடியாத சிவன்
சிதம்பர ஸ்தலத்தின் முக்கிய பிரகாரங்கள் ஐந்து. ஈஸ்வரனின் முகங்கள் ஐந்து. பரமேஸ்வரனின் முகங்கள் ஐந்து. சித்தாந்தக் கலைகளின் ஐந்திற்கும் நாயகராக விளங்குபவர். பஞ்சாங்கம் என்பது ஐந்து அம்சங்களை உள்ளடக்கியது. 1.திதி, 2.வாரம், 3. நக்ஷத்திரம், 4. யோகம், 5. கரணம். அண்டத்தின் பரம்பொருள் நடராஜப் பெருமான். அடிமுடி காணமுடியாதவர். அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருப்பவர். அவரன்றி அணுவும் அசையாது.
சிவனின் கட்டளை
சிவபெருமான் அண்டத்தின் பால்வெளியில் அமைந்த நவக்ரஹங்களையே மாலையாக அணிந்தவர். சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜர் சன்னிதியில், பஞ்சாக்ஷர படிக்குக் கீழே, தினமும் பஞ்சாங்கம் படிக்கப்படுவது ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்து வருகிறது. நக்ஷத்திரங்களும், ராசி மண்டலங்களும் ஸ்ரீ நடராஜப் பெருமானின் கட்டளைக்கிணங்க இயங்குகின்றன.
ஆண்டுக்கு ஆறு அபிஷேகம்
தேவர்கள் வழிபடும் சிவ மூர்த்தம் நடராஜர். தினமும் ஆறுகால பூஜைகள் செய்து அவர்கள் அவரை வழிபடுகிறார்கள். நமக்கு ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாளுக்குச் சமம். அப்படியிருக்க அவர்கள் அபிஷேகம் செய்யும் ஆறு காலங்களே இந்த ஆறு தினங்கள் என்கின்றன புராணங்கள். தேவர்கள் வழிபடும் காலத்தில் நாமும் நடராஜப்பெருமானை அபிஷேகம் செய்து வழிபட வேண்டும் என்று வகுத்துள்ளனர் நம் முன்னோர்கள்.
மார்கழி திருவாதிரை
ஸ்ரீநடராஜா் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூா்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி மார்கழி, மாசி, மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது தொன்று தொட்டு வழக்கமாகும். பெரும்பாலான சிவத்தலங்களில் இந்த ஆறு அபிஷேகங்களில், மார்கழி திருவாதிரை மற்றும் ஆனி உத்திரம் ஆகிய இரண்டு அபிஷேக தினங்கள் பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. இவை தவிர்த்த பிற நான்கும் ஒரு நாள் உற்சவமாகக் கொண்டாடப்படும்.
ஆறு முறை அபிஷேகம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின் போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இன்று சித்திரை திருவோண மகா அபிஷேகம் மாலையில் நடைபெறுகிறது.
கொரோனா வைரஸ் மகா ஹோமம்
இன்று ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூா்த்தியை கனகசபைக்கு எழுந்தருள செய்து காலையில் தொடங்கி உச்சிகால பூஜை வரை மந்த்ரக்ஷத்தை லக்ஷாரச்னை நடைபெற்றது. யாக சாலையில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஸ்ரீ ருத்ர கிரம அர்ச்சனை செய்து , தீபாராதனை நடைபெற்றது. மதியம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காக்க மஹாருத்ர மகா ஹோமம் நடைபெற்றது. பின்னர் கலசங்கள் யாத்திராதானம் செய்யப்பட்டு மகாஅபிஷேகம் நடைபெறுகிறது.
மகா அபிஷேகம்
இன்றைய தினம் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு விபூதி பால்,தயிர், தேன், சர்க்கரை, பஞ்சாமிர்தம், இளநீா், பன்னீா், சந்தனம் புஷ்பம், உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்படவுள்ளது. மகாபிஷேக ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதா்கள் செய்துள்ளனர்.