அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை தீர்க்கும் பாபவிமோசினி ஏகாதசி
ஏகாதசிகளில் மேற்கொள்ளும் விரதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பலனை தரவல்லது. அந்த வகையில் சித்திரை மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி பாபமோசினி ஏகாதசியாக கடைபிடிக்கப்படுகிறது.
சென்னை: சித்திரை மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியானது பாபமோசினி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசியானது விரதத்தின் பிரபாவத்தால் மனிதர்களின் சர்வபாபங்களும் அழியப்பெறுவதுடன் நற்கதியும் கிடைக்கிறது. புராணங்களின்படி மஞ்சுகோஷா எனப்படும் தேவலோக பெண் மேதாவி முனிவரை காம வயப்படுத்தி, அவரின் தவம் வெற்றி பெறுவதை தடுத்தாள். இந்தப் பாவச் செயல் காரணமாக மஞ்சுகோஷா பல துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது. அப்போது அவள் சித்திரை மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு, தனது பாவங்கள் நீங்கப் பெற்று நற்பலன்களை அடைந்தாள்.
தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரையில், தேய்பிறையில் வரும் ஏகாதசி திதிக்கு 'பாப விமோசினி ஏகாதசி' என்று பெயர். வளர்பிறையில் வரும் ஏகாதசி திதிக்கு 'காமதா ஏகாதசி' என்றும் பெயர். இவ்விரண்டு ஏகாதசி நாட்களிலும் விரதம் இருந்து பெருமாளை தரிசிப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய அனைத்தும் கிடைக்கும் என்பது நிச்சயம்.
பாப விமோசினி விரதம் மேற்கொள்வதன் பிரதான நோக்கமே நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவச் செயல்களின் வினைப் பயன் போக்குவது தான். மேலும் நம் வாழ்வில் துன்பங்கள் அதிகம் ஏற்படாமல் இருக்கவும், குல சாபங்கள், தெய்வ சாபங்கள் போன்றவை நீங்கி வாழ்க்கையில் சுபிட்சங்கள் பெருகவும் செய்கிறது இந்த பாபநாசினி ஏகாதசி விரதம். உடல் அழகு நிலையானதல்ல அப்படி இருக்க தேகசௌந்தர்யத்தின் மீது எற்பட்ட மையல் மேதாவி முனிவரை தவசங்கல்பத்தை மறக்கச்செய்யும் கொடியபாவத்தை செய்யவைத்தது ஆனால் கருணாமயமான பகவான் மஹாவிஷ்ணுவின் பாபவிமோசனி சக்தி இத்தகைய கொடிய பாவத்திலிருந்தும் அவருக்கு விடுதலை அளித்து துன்பங்களில் இருந்து காத்தருளியது.
ஏகாதசி விரதம்
விரதத்திலேயே மிகச் சிறந்த விரதம் ஏகாதசி விரதமாகும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுஷ்டிக்கும் விரதம் ஏகாதசி விரதம். ஏகாதசி விரதம் நமது முற்பிறவியில் செய்த பாவத்தையும் போக்கும் சக்தி கொண்டது. சிவபெருமானே அன்னை பார்வதி தேவிக்கு ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார். ஏகாதசி நாட்களில் மேற்கொள்ளும் விரதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பலனை தரவல்லது. அந்த வகையில் சித்திரை மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி அல்லது பாபவிமோசினி ஏகாதசி விரதமாக கடைபிடிக்கப்படுகிறது.
பாவங்களில் இருந்து விடுதலை
எவர் ஒருவர் நல்ல செயல்களை செய்வதாக சங்கல்பம் செய்துகொண்டு பிறகு பேராசை மோகம் போன்ற தீயசக்திகளின் வசப்பட்டு தன் சங்கல்பத்தை மறக்கிறாரோ அவர் கொடிய நரகத்தில் தண்டனை பெறுவதற்கு தகுதி உடையவராகிறார் ஆனால் பாப விமோசனி ஏகாதசி விரதம் சகல பாவங்களிலிருந்தும் விடுதலை அளிப்பதுடன் இறுதியில் சொர்க்கம் செல்வதற்கான பிராப்தியையும் அளிக்கிறது .
பெருமாள் அருள்
புராணங்களின்படி மஞ்சுகோஷா எனப்படும் தேவலோக பெண் மேதாவி முனிவரை காம வயப்படுத்தி, அவரின் தவம் வெற்றி பெறுவதை தடுத்தாள். இந்தப் பாவச் செயல் காரணமாக மஞ்சுகோஷா பல துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது. அப்போது அவள் சித்திரை மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு, தனது பாவங்கள் நீங்கப் பெற்று நற்பலன்களை அடைந்தாள். எனவே தான் இந்த சித்திரை தேய்பிறை ஏகாதசி தினம் பாப விமோசினி ஏகாதசி விரதம் என அழைக்கப்படுகிறது.
ஏகாதசி விரதம்
இந்த தினத்தில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு வீட்டின் பூஜை அறையில் இருக்கும் பெருமாள் மற்றும் லட்சுமி படத்திற்கு வாசமிக்க மலர்களை சமர்ப்பித்து, தீபமேற்றி கற்கண்டுகள் அல்லது ஏதேனும் இனிப்புகளை நைவேத்தியம் செய்து, பெருமாள் லட்சுமி மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.
உப்பு சேர்க்காத உணவு
பொதுவாக எந்த ஒரு ஏகாதசி விரத தினத்தன்றும் காலை முதல் இரவு வரை உணவு ஏதும் சாப்பிடாமல் இருப்பது மிகுந்த பலன்களை தரும். இப்போது உள்ள சூழ்நிலையில் வேலை மற்றும் உடல்நிலை காரணமாக உணவு ஏதும் உண்ணாமல் இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. எனவே அப்படிப்பட்டவர்கள் உப்பு சேர்க்காத எளிமையான உணவுகள் மற்றும் பால், பழங்கள் போன்றவற்றை சாப்பிட்டு இது ஏகாதசி விரதம் மேற்கொள்ளலாம்.
துளசி தீர்த்தம்
இப்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கோவில்கள் மூடப்பட்டுள்ளன. எனவே மாலை நேரத்தில் பெருமாள் படத்தில் துளசி மாலை சாற்றி, தீபமேற்றி வழிபட வேண்டும். பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட இனிப்புகளை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பிரசாதமாக தந்து, விரதம் மேற்கொண்டவர்களும் அப்பிரசாதத்தை சிறிது சாப்பிட்டு, துளசி தீர்த்தம் குடித்து பெருமாளுக்கான ஏகாதசி விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.