சித்திரை சனாதனாஷ்டமி: காலபைரவரை வணங்கினால் தீராத நோய்களும் தீரும்
அஷ்டமி திதி பைரவ வழிபாட்டிற்கு ஏற்றநாள், தேய்பிறை அஷ்டமி நாளில் விரதம் இருந்து பைரவரை வணங்கினால் குபேர சம்பத்து கிடைக்கும்.
சென்னை: தேய்பிறை அஷ்டமியில் விரதம் இருந்து வணங்கினால் நோய் நொடிகள் தீரும் என்பது நம்பிக்கை. கடன் பிரச்சினைகள் தீரும் எதிரிகள் தொல்லைகள் நீங்கும். வரும் 15ஆம் தேதி தேய்பிறை அஷ்டமி. சித்திரை மாதம் தேய்பிறை அஷ்டமி சனாதன அஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த அஷ்டமி புதன்கிழமை வருகிறது. விரதம் இருந்து பைரவரை வணங்கினால் கொடிய நோய் தொந்தரவுகள் ஏற்படாமல் தடுக்கப்படும் நவகிரக தோஷங்களும் நீங்கும்.
அஷ்டமி திதி பைரவ வழிபாட்டிற்கு ஏற்றநாள், தேய்பிறை அஷ்டமி நாளில் விரதம் இருந்து பைரவரை வணங்கினால் குபேர சம்பத்து கிடைக்கும். காரியத்தடைகள் நீங்கும் சிலருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். தடைபட்ட கல்வி தேடி வரும். செல்வ வளம் பெருகும்.
ஜோதிடத்தில் ஆறு, எட்டு, பன்னிரண்டாம் பாவங்கள் வலுத்து அதனால் நோய், கடன் தொல்லைகள், எதிரிகள், வழக்குகள் போன்றவற்றால் மீளமுடியாத பிரச்னைகளை சந்தித்துவருபவர்கள் ஸ்ரீ பைரவ மூர்த்தியை வழிபடுவது, கால பைரவாஷ்டகம் பாராயணம் செய்வது, சொர்ணாகர்ஷன பைரவ ஹோமம் செய்வது போன்றவை சிறந்த பயனளிக்கும். மேலும் புற்றுநோய், கொரோனா வைரஸ் தொற்று போன்ற உயிர்க்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்ரீ காலபைரவரை வணங்கி வருவதால் நோய் நீங்கி மரணபயம் போகும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு ஒரு பெயர் உள்ளது. சித்திரை மாதம் சனாதன அஷ்டமி, வைகாசி மாதம் சதாசிவாஷ்டமி, ஆனி மாதம் பகவதாஷ்டமி, ஆடி மாதம் நீலகண்டாஷ்டமி, ஆவணி மாதம் சிவா அஷ்டமி, புரட்டாசி மாதம் சம்பு அஷ்டமி, ஐப்பசி மாதம் ஈஸ்வராஷ்டமி, கார்த்திகை மாதம் ருத்ராஷ்டமி,காலபைரவாஷ்டமி, மார்கழி மாதம் சங்கராஷ்டமி, தை மாதம் தேவ தேவாஷ்டமி, மாசி மாதம் மகேஸ்வராஷ்டமி, பங்குனி மாதம் திரியம்பகாஷ்டமி என்று அழைக்கப்படுகின்றன.
தடைகள் நீங்கும்
பைரவருக்கு செய்யும் ஒவ்வொரு வழிபாட்டிற்கும் வெவ்வேறு தனித்தன்மை வாய்ந்த பலன்கள் உண்டு. பைரவரை வணங்கும் பொழுது வாரத்தின் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு வடை மாலை சாற்றி, ருத்ராபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். கடன் தொல்லைகள் தீரும். மேலும் பைரவருக்கு புனுகு சாத்தி, முந்திரி பருப்பு மாலை சாற்றி வழிபட்டால் நலன் பெருகும்.
கண் நோய்கள் நீங்கும்
திங்கட்கிழமை அன்று விரதம் இருந்து வில்வம் கொண்டு பைரவரை அர்ச்சனை செய்தால் சிவனருள் கிடைக்கும். மேலும் சங்கடஹர சதுர்த்தி அன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தன காப்பு மற்றும் புனுகு சாத்தினால் கண் சம்மந்தப்பட்ட நோய்கள் விலகித் தெளிவான பார்வை கிடைக்கும்.
நிம்மதியான வாழ்க்கை
செவ்வாய்க்கிழமை அன்று மாலை நேரத்தில் மிளகு தீபம் ஏற்றி வந்தால் நாம் இழந்த பொருளைத் திரும்பக் கிடைக்கும்படி அருள் புரிவார் பைரவர். பூமி லாபம் கிடைக்க பிரதி புதன்கிழமை பைரவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பைரவருக்கு பிரதி வியாழக்கிழமை அன்று மனமார விளக்கேற்றி வழிபட்டால் ஏவல், பில்லி மற்றும் சூனியம் விலகி மன நிம்மதி கிடைக்கும்.
சனி தோஷம் நீங்கும்
வெள்ளிக்கிழமை அன்று மாலை நேரங்களில் வில்வ இலைகள் கொண்டு பைரவருக்கு அர்ச்சனை செய்து வந்தால் செல்வம் பெருகும்.சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். சனி பகவானுடைய குரு பைரவர். ஆகவே சனிக்கிழமைகளில் இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச்சனி ஆகியவற்றின் தாக்கத்திலிருந்து விடுபட்டு நன்மைகளை அடையலாம்.
மகா கால பைரவர்
ஜோதிடத்தில் வீரத்தினை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். ஜோதிடத்தில் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாகத் திகழும் செவ்வாய் கால புருஷனுக்கு லக்னாதிபதியாகவும் ஆயுள் பாவமான அஷ்டமாதிபதியாகவும் விளங்குகிறார். காலபுருஷனும் கால பைரவரும் ஒன்றே என்கிறது ஜோதிட சாஸ்திரம். சிவ ஸ்வருபமான கால பைரவரை "மஹா கால' என்றும், 'காலாக்னீ ருத்ராய' என்றும் ஸ்ரீ ருத்ரம் எனும் மந்திரம் போற்றுகிறது. அதாவது பைரவ மூர்த்தியே மாபெரும் காலம், இறுதி நேரத்தில் எல்லோரையும் விழுங்குபவர், காலம் என்னும் தீயில் அனைத்தும் கருகி சாம்பல் ஆகும். பைரவரின் அருளால் மீண்டும் மறுசுழற்சியில் ஜீவன் உருவாகிறது. அதாவது கால பைரவர் குணத்தையும் காலத்தையும் கடந்தவர். அவர் காலத்திற்கு கட்டுப்படாத தன்மையால் அவரை கால பைரவர் என வேதம் போற்றுகிறது.
12 ராசிகள்
நவ கிரகங்களையும் 12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே. தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப்பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் விருச்சிகமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன. எனவேதான் பைரவரை வணங்கினால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
கல்வி தடைகள் நீங்கும்
நான்கு வேதங்களும் நாய் உருவில் வாகனமாகப் பைரவருக்கு அமைந்திருப்பதால் கல்வியில் ஏற்படும் தடையை நீக்கி இடைவிடாது தொடரும் கல்வி யோகத்தைத் தருபவர் என்பது நம்பிக்கை. செவ்வாயின் காரகத்தை தன்னுள்ளே கொண்ட பைரவர் சிவபெருமானின் அம்சம் மற்றும் ஸ்வரூபம் என்பதால் சூரியன் மற்றும் தக்ஷிணாமூர்த்தியின் காரகத்தையும் கொண்டிருக்கின்றார்.
பைரவர் அவதாரம்
புதன் கிழமை தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் எடுத்து மகாதேவர் என்கிற சிவபெருமான் பூமிக்கு வந்தார். இவரை வணங்கி தனக்கு அருளும், ஆசியும் வேண்டும் என்று ஆயுளை அழிவில்லா பொருளை, ஆன்ம சாந்தியை, தரும் சனி தேவர் பணிந்தார். ஜோதிடத்தில் சனியும் புதனும் நண்பர்கள் என்றும் புதன் கிழமை வரும் அஷ்டமி அன்று செய்யும் காரியங்கள் அனைத்தும் மேன்மை தரும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வரும் புதன்கிழமை 15ஆம் தேதி தேய்பிறை அஷ்டமி. சித்திரை மாதம் தேய்பிறை அஷ்டமி சனாதன அஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த அஷ்டமி புதன்கிழமை வருகிறது. விரதம் இருந்து பைரவரை வணங்கினால் கொடிய நோய் தொந்தரவுகள் ஏற்படாமல் தடுக்கப்படும் நவகிரக தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.